Tuesday, 27 February 2018

கடவுளின் குழந்தைகள்

குழந்தைகளின் உலகம் மகத்தானது. நாம் எல்லோரும் கவலைகளற்ற அந்த  பருவத்தை கடந்து வந்திருந்தாலும் இன்னும் மனதில் ஏக்கத்தோடு பார்க்கும் பருவம் குழந்தைப்பருவம்.  குழந்தைப்பருவத்தின் பல்வேறு நிலைகளை ஜாதக ரீதியாக இந்தப்பதிவில் அலசுவோம்.



மனிதனின் முதல் பத்து வயது வரை ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சந்திரன் ஆகும். இப்பருவத்தில் குழந்தைகளின் செயல்பாடு சந்திரனைப்பொருத்தே அமையும்.

கீழே ஒரு பெண் குழந்தையின் ஜாதகம்.


இந்தக்குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் உச்ச வர்கோத்தமம் பெற்றுள்ளது. சந்திர திசை 7 வயதில் முடியும். அதன் பிறகு செவ்வாய் திசையின் முதல் பகுதி அதாவது 1௦ வயது வரை மிகுந்த துடிப்பான செயல்பாட்டைக்கொண்டிருக்கும்.

இச்சிறுமியின் தற்போதைய நிலையானது மிகுந்த செயல்வேகம். அதீத கிரகிப்புத்திறன் ஆகியவற்றோடு  சந்திரன் வயதான பெண்ணை குறிக்கும் கிரகம் என்பதன் காரணமாக வயதுக்கு மீறிய பேச்சு  சாதுர்யத்தைக்கொண்டுள்ளது.

குழந்தை மேதாவித்தன்மை எனப்படும் CHILD PRODIGY  வகையை சார்ந்தது இந்த பெண் குழந்தையின் செயல்பாடு.

கீழே இரண்டாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம்.


சந்திரன் இங்கு ஆட்சியில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது. உடன் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாயை நீசபங்கப்படுத்துகிறது. சதுர்த்த கேந்திரம் என்பது சந்திரனுக்கு திக்பலத்தையும் தருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய ஜாதக நிலைமையானது அதீத முரட்டு சுபாவம் கொண்ட விளையாட்டுத்தனைத்தை ஏற்படுத்தும். பாதகாதிபதியும் மெதுவான செயல்பாட்டுக்குறியவருமான சனியின் திசை நடந்தாலும் கூட சனி 6 ஆமிடத்தில் அமைந்து திசை நடத்துவதால் சிறுவனின் மேற்சொன்ன சுபாவத்தில் அது பாதிப்பை ஏற்ப்படுத்த இயலவில்லை. மாறாக கல்வியில் மட்டுமே அது மந்த நிலைமையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தீவிர செயல்பாட்ட குறிக்கும் நிலைமை. மருத்துவத்தில் HYPER ACTIVE  என அழைக்கப்படுகிறது.

மூன்றாவதாக மற்றொரு சிறுவனின் ஜாதகம் கீழே.


இச்சிறுவனின் ஜாதகத்தில் சதுர்த்த கேந்திரத்தில் தடை மற்றும் மந்தத்தன்மையை குறிக்கும் கேது அமர்ந்து குழந்தைப் பருவத்தை குறிக்கும் சந்திரனை பார்க்கிறார். சந்திரனுக்கு இடம் கொடுத்த 2 ஆமதிபதி சுக்கிரன் உச்சமானாலும் சுக்கிரனுக்கு பாவகர்த்தாரி யோகம் ஏற்பட்டு சுக்கிர மற்றும் சந்திர கேந்திரங்களில் பாவிகள் நின்றதால் சிறுவனுக்கு செயல்பாட்டில் மந்தத்தன்மையை தருவதுடன் பேச்சுத்திறனிலும் தடையை ஏற்படுத்துகிறது. இதுவரை சிறுவனுக்கு சரியாக பேச இயலாத நிலையே தொடர்கிறது. இதற்கு 2 ஆமிடம் தொடர்புடையவற்றோடு வாக்கு காரகனும் லக்னாதிபதியுமான புதனுக்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பதையும் கவனிக்கவேண்டும். நடப்பில் இருக்கும் ராகு திசை சிறுவனுக்கு பொருட்காரணிகளில் தடையை ஏற்படுத்தாவிட்டாலும் உயிர்க்காரணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என்பது கவனிக்கத்தக்கது.

மன இறுக்கம் என்றழைக்கப்படும் இத்தகைய நிலையை இன்றைய மருத்துவ உலகம் AUTISM  என குறிப்பிடுகிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்,

கைப்பேசி எண்: 07871244501

Thursday, 11 January 2018

திருமண பொருத்த நிலைகள் – 1

தண்டனை தாமதத்திற்கு உரிய சனி பகவான் பெயர்ச்சியாகி குடும்ப காரகன் குருவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடைபெற ஒரு நல்வாய்ப்பு இனிதே கனிந்துள்ளது. இந்நிலையில் திருமண பொருத்தத்தில் நட்சத்திரப்பொருத்தத்தை தவிர முக்கியமாக ஜாதக பொருத்தம் இன்றியமையாததாகிறது. கவனமாக ஆராய்ந்தால் ஒருவரின் இல்லற வாழ்வை,  குடும்ப வாழ்வை பாதிக்கும் அமைப்புக்கு சரியான வலுவுடைய ஜாதகத்தை சேர்த்தால் பல துயரங்களை தவிர்க்கலாம். அதற்கான வாய்ப்பை ஜோதிஷம் எனும் அற்புதக் கலை மூலம் நமது ஆன்றோர்கள் நமக்கு அருளியுள்ளனர். ஜாதக பொருத்தத்தில் பல்வேறு கூறுகள் உள்ளன என்பதால் அவற்றை ஒரு தொடராக திருமண நிலைகள் என்ற தலைப்பில் எழுத உள்ளேன். இது முதலாவது பகுதி என எடுத்துக்கொள்ளுங்கள்.



களத்திர கிரகங்கள் என்பது ஆணுக்கு சுக்கிரனும் பெண்ணிற்கு செவ்வாயுமாகும். சப்தமாதிபதி கிரகமும் இந்த வகையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆண் - பெண் ஜாதகங்களில் இவை ஒன்றுக்கொன்று பாதகத்தில் அமையக்கூடாது. பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள் இதை கவனிப்பது மிக முக்கியம்.


உதாரணமாக பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள். 

ஏழாம் அதிபதி ஏழுக்கு பாதகத்தில் உச்ச நிலையில் அமைந்துள்ளது. இது பாதகமான அமைப்பு. ஆனால் உச்சமான ஒரு கிரகம் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் என்பதால் திருமணத்தை தாமதப்படுத்தும் அவ்வளவே. பொதுவாகவே மெதுவாக சுற்றும் சனி ஒருவரது ஜாதகத்தில் உச்சமாகி அது ஏழாம் இடத்துடன் தொடர்புபெற்றால் அத்தகையவர்களுக்கு திருமணம் தாமதமாகும் என்பதை நினைவில் கொள்க.

இத்தகைய அமைப்பை ஈடு செய்யும் வகையில் துணையாக வருபவருக்கு பின்வரும் அமைப்பு அவரது ஜாதகத்தில் இருத்தல் நலம். துணையாக வருபவருக்கு மேற்கண்ட ஜாதகத்தின் நடப்பு திசா கிரகத்தின் நட்பு வகையிலான திசா புக்திகள் நடக்க வேண்டும்.  ஒருவரது திசா நாதன் மற்றொருவருடைய ஜாதக அமைப்பில் 1,6,8,1௦,12  தொடர்பில் இருந்து திசை நடத்தக்கூடாது.. மேலும் அப்படி இருந்தால் அது பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் மேற்கண்ட ஜாதகத்தில் சனி இருக்கும் துலாத்தில் துணைவராக வருபவருக்கு   குரு இருத்தல் அல்லது பார்த்தல் நலம்.

இரண்டாவதாக பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்


இங்கு சனி உச்சமாகி வக்ரமாகியுள்ளது. எனவே இது நீச்சத்திற்கு ஒப்பான நிலை. இந்த நிலையில் அமைந்த ஜாதகருக்கு (இதர கிரக அமைப்புகளும் சாதகமாக இல்லாத சூழ்நிலையில்) பாதிப்பை தர வாய்ப்புண்டு.

இத்தகைய நிலையில் ஜாதகர் தனது வாழ்க்கைத்துணைவரை எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவராக தேர்ந்தெடுத்தல் நலம். உதாரணமாக சனி பாதத்தை குறிக்கும் கிரகம் என்பதால் காலில் பாதிப்பை கொண்டவரையோ அல்லது மணமுறிவு மற்றும் துணைவரை இழந்தவரையோ  திருமணம் செய்தால் வாழ்வு சிறக்கும். இல்லையேல் ஜாதக அமைப்பு துணைவர் வந்தபிறகு தனது அம்சமாக துணைவரை மாற்றிவிடும்.

மூன்றாவதாக மற்றுமொரு அமைப்பு கீழே.


மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஏழாம் அதிபதி சனி தனது மூலத்திரிகோண வீட்டில் அற்புதமாக அமைந்துள்ளது. செவ்வாயும் அப்படியே. ஆனால் சனியால் செவ்வாய் பார்க்கப்படுகிறது. இத்தகைய அமைப்பு ஆணுக்கு இருந்தால் மனைவியால் அவர் பாதிப்படைவார். அவரது செயலை மனைவி கட்டுப்படுத்த முனைவார். அதனால் அங்கு மணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். இதே அமைப்பு பெண்ணுக்கு இருந்தால் ஜாதகி கணவரை கட்டுப்படுத்த முயற்சிப்பது மட்டுமின்றி (கணவன் – செவ்வாயை சனி பார்ப்பதால்) ஜாதகிக்கு புத்திர பாக்கியம் தொடர்பில் மரபணு ரீதியான பிரச்சனை எழக்கூடும். இதற்கு செவ்வாயோடு  சந்திரன், கடக ராசி மற்றும் குருவின் நிலைகளையும் கவனிக்க வேண்டும்.

இத்தகைய ஜாதக அமைப்பை ஈடு செய்யும் வகையில் துணையாக வருபவருடைய ஜாதக அமைப்பு இருக்குமாறு ஜோதிடர்கள் கவனித்து சேர்ப்பது மிக அவசியம். இல்லாவிட்டால் இத்தகைய அமைப்பு பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

நான்காவதாக ஒரு ஜாதக அமைப்பு கீழே


மேற்கண்ட ஜாதக அமைப்பு பெண்ணுக்கு இருந்தால் மிகக்கடுமையான தோஷம். 7ல் ஒரு நீசன் மற்றும் 7 , 8  அதிபதியான சனி நீசம். பெண்ணுக்கு 8 ஆமிடம் மாங்கல்ய பலத்தை குறிக்கக்கூடியது என்பதை நினைவில் கொள்க. இவ்விரு கிரகங்களும் எதோ ஒரு வகையில் நீச பங்கம் பெற வேண்டும் இல்லையேல் மகரத்தில் குரு – சனி இணையும் காலத்தில் (2020 ல்) இந்த தோஷம் நீங்கும் காலம் திருமணம் செய்வது நலம்.

பொதுவாக ஆண் ஜாதகமாக இருந்தால் சுக்கிரனுக்கு பாதகத்தில் செவ்வாயோ அல்லது ஏழாம் அதிபதியோ இல்லாமலும், பெண்ணாக இருந்தால் செவ்வாய்க்கு பாதகத்தில் சுக்கிரனோ அல்லது ஏழாம் அதிபதியோ இல்லாமல் கவனித்துச்சேர்ப்பது நலம்.

மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 8300124501

Monday, 30 October 2017

ஆத்ம காரகனும் தாரா காரகனும்.

ஜோதிடம் ஒரு கடல் அதனால்தான் எங்களது ஜோதிட பகிரி குழுவுக்கு ஜோதிட சாகரம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு ஜாதகத்தை அலச பல்வேறு முறைகளை ஜோதிடத்தில் பயன்படுத்துவோம். அதில் ஒன்று ஜெயமினி முனிவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ள ஆத்ம காரகன் மற்றும் தாரா காரகன் நிலைகளைக்கொண்டு ஆராய்வது. இவர் பிரகத் ஜாதகத்தை இயற்றிய வராக மிகிரருக்குப்பின் வந்த முக்கியமான ஜோதிட அறிஞர். 

ஜனன ஜாதகத்தில் முப்பது பாகைகள் கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் அதிக பாகைகள் சென்றுள்ள கிரகம் ‘ஆத்ம காரகன்’ எனப்படும். மிகக்குறைந்த பாகை சென்றுள்ள கிரகம் ‘தாரா காரகன்’ எனப்படும். தற்போது இந்த முறையைக்கொண்டு ஜாதகத்தை அலசுவது குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் தொடர்புடையதான கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் நின்ற பாகையைக்கொண்டு ஜாதகத்தை அலசும் ஜோதிட ஆய்வாளர்கள் “பாகை முறை ஜோதிடம்” என்ற வகையில் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றனர். இந்த முறையில் கிரகங்கள் வெவ்வேறு ராசிமண்டலங்களில் இருந்தாலும் தங்கள் நிற்கும் பாகைகளுக்கு 3 பாகைகள் அளவில் நெருக்கமாக இருக்கும் கிரகங்கள் கிரகக்கூட்டணிபோல  ஒருங்கிணைந்து செயல்படும் என்பது இந்த முறையின் முக்கிய அம்சம்.  

இந்த பாகை முறை ஜோதிட அலசலில்  ஆத்ம காரகன் ஜாதகரை முன்னின்று வழிநடத்தி ஜாதகரின் கர்மங்களை நிறைவேற்ற உறுதுணை புரியும். இதற்கு எதிர்மாறாக தாரா காரகன் ஜாதகரின் கர்மங்களில் இடர்பாட்டை எற்படுத்தி ஜாதகரை தவறான பாதையில் வழிநடத்தும். எப்படி ஆயினும் இவ்விரு கிரகங்களும் ஜாதகரின் வாழ்க்கைப்பயணத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பின்வரும் சில ஜாதகங்கள் இந்த வகையில் இவ்விரு கிரகங்களின் செயல்பாடுகளை எடுத்துக்காட்ட அடியேன் ஆராய்ந்தது.

பகவான் ரமண மகரிஷியின் ஜாதகம் இது.



30.12.1879 - பாண்டிச்சேரி
ஜாதகத்தில் ஆத்ம காரகன் சந்திரன் – 29.23 பாகை.
தாரா காரகன் சுக்கிரன் – 1.36 பாகை.

சந்திரன் ஞான காரகன் கேதுவுடன்  நின்று ஆன்மீகத்தை நோக்கிய திசையில் ஜாதகரை உலகம் போற்றும் உத்தம குருவாக உயர்த்தியது. தாரா காரகன் சுக்கிரனுக்கும் குடும்ப ஸ்தானமான துலாத்திற்கும் 3, 8 க்கு உரிய செவ்வாய் பார்வை பெற்றுள்ளது. மேலும் இல்லற வாழ்வை குறிக்கும் 2,4,7,8,12 ஆகிய பாவங்களும் அதன் அதிபதிகளும் கெட்டுள்ளன. இந்நிலையில் கேதுவுடன் சேர்ந்துவிட்ட ஆத்ம காரகன் சந்திரன், சுக்கிரனின் இல்லற எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டு ஜாதகரை தனது பாதைக்கு திருப்பினார்.

அடுத்து ஹிட்லரின் ஜாதகம்.





20.04.1889 - ப்ராணா, ஆஸ்திரியா.
ஆத்ம காரகன் சுக்கிரன் – 25.32 பாகை.
தாரா காரகன் புதன் – 4.24 பாகை.

ஹிட்லரின் ஜாதகத்தில் ஆத்ம காரகன் சுக்கிரன் சுய சாரத்தில் நின்றாலும் பாவிகளுடன் இணைந்து மறைவு ஸ்தானத்தில் வலுவிழந்துவிட்டது. லக்னாதிபதியான தாரா காரகன் புதனுக்கும் இதே நிலைதான். மேலும் புதன் அஸ்தங்கமாகிவிட்டது.  இங்கு ஆத்ம காரகனாக சுக்கிரன் இருந்தாலும் விபரீத ராஜ யோகம் பெற்று வலுவாகிவிட்ட உச்ச சூரியன் மற்றும் ஆட்சி செவ்வாயை மீறி வக்கிரமடைந்த ஆத்ம காரகன் சுக்கிரன் தனித்து செயல்பட முடியாது என்பதே உண்மை. எனவே உலகை அழிக்கும் குரூரத்தனம் சூரிய செவ்வாயின் நிலையால் ஜாதகருக்கு ஏற்பட்டது.

அடுத்து இந்திய அரசியல்வாதிகளை அலறவிட்ட மக்களின் மதிப்பிற்குரிய நமது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். (T.N.சேஷன்) அவர்களின் ஜாதகம்.





14.05.1933 - பாலக்காடு
ஆத்ம காரகன் சந்திரன் – 27.02 பாகை.
தாரா காரகன் சூரியன் - ௦.52 பாகை

அரசு வகை யோகங்களை குறிக்கும் 5 ஆமிட அதிபதி சந்திரன் ஆத்ம காரகனாகி கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தில் நிற்கிறது. தாரா காரகனாகிய சூரியன் தனது வீட்டிற்கு தசம கேந்திரம் பெற்று, பாவத்தில் வருமான வழியை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் நின்றதால் அரசுப்பணியில் உயர்ந்த நிலை.  லக்னமும் ராசியும் குருவினுடையதாக அமைந்துவிட்டதால் நல்ல விஷயத்தில் உறுதித்தன்மை. எதிர்ப்புகளைக்குறிக்கும் 6 ஆமிடமான சூரியனின் சிம்ம ராசியில் லக்ன & ராசி அதிபதி குரு நின்றதால் அரசு வகையில் கடும் எதிர்ப்புகளுக்குடையே பணியாற்றினார்.

குருவின் லக்னத்தையும் ராசியையும் பெற்றதால் உணவு விஷயத்தில் தாராளம். (ஓய்வு பெற்ற பிறகு சமையல் கலை பற்றி விகடனில் தொடர் ஒன்று எழுதினார்.)

பாவத்தில் புத-ஆதித்ய யோகம் – மிகச் சிறந்த ஜோதிடர். (ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்கூட்டியே கணித்தவர். காஞ்சி மகா பெரியவரின் வேண்டுதலுக்கிணங்க ராஜீவ் காந்தியை எச்சரிக்கை செய்து TOP MOST URGENT” என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு ஒரு வாரம் கழிந்த பின் உரை பிரிக்கப்படாத அக்கடிதம் ராஜீவின் மேசையிலிருந்து கைப்பற்றப்பட்டது.)

ஐந்தாமதிபதி சந்திரன் ஐந்துக்கு ஆறில் மறைவு.. குரு லக்னத்திற்கு ஆறில் மறைவு. மகத்தான இம்மனிதரின் குழந்தைப் பேரின்மையை இது குறிக்கிறது.

தற்போது யாருக்கும் பாரமின்றி முதியோர் இல்லத்தில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். 

அடுத்து உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் உள்ள பில் கேட்சினுடையது.



இது ஒரு விசேஷ ஜாதகம்.


28.10.1955 - சியாட்டில், அமெரிக்கா.
ஆத்ம காரகன்  சனி – 29.29 பாகை
தாரா காரகன் குரு – 05.40 பாகை

ஆத்ம காரகன் சனி பொதுவான அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 5 ஆமிடத்தில் உச்சம் அது மட்டுமா அவரே ஜீவன காரகன், ஆயுள் காரகன், திடீர்  அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 8 ஆமிடாதிபதி. பாக்யாதிபதி போன்ற பல்வேறு பொறுப்புகளை இந்த ஜாதகத்தில் ஏற்றுள்ளார். அத்தோடு அவர் 8 க்கு  8 ஆமிடமான மூன்றாமிடாதிபதியான  சூரியனை நீசத்திலிருந்து விடுவித்து நீச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்துகிறார். மூன்றாமிடம் வெற்றியைக் குறிப்பிடுமிடம்  என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகின என்பதை அனைவரும் அறிவோம். 

சனி குருவின் விசாக நட்சத்திரத்தில் உச்சமானதால் தாராகாரகன் குருவும் குருவின் வீட்டில் நிற்கும் தன ஸ்தானாதிபதி சந்திரனும் சேர்ந்தே வலுவடைந்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்.  சுக்கிரன் ஆட்சி வீட்டில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமடையவில்லை. இந்த ஜாதகத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் இங்கு ஆத்ம காரகன் சனி தாரா காரகன் குருவின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று இருவரும் உச்ச பலனை ஜாதகருக்கு தரவேண்டிய நிலையில் அமைந்துள்ளனர் என்பது இந்த ஜாதகத்தில் உள்ள அபூர்வமான மற்றும் விசேஷமான ஒரு அமைப்பாகும்.

கால மாற்றத்தில் ஜோதிடமும் பல்வேறு நவீன யுக்திகளை கையாள்கிறது. பண்டைய முறையானாலும் தற்போது இந்த வகை ‘பாகை முறை ஜோதிடம்’ சிறப்பான பல கணிப்புகளுக்கு வழி வகுக்கிறது என்றால் அது மிகையல்ல.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி எண்: 8300124501