Sunday 6 April 2014

சைவத் துறவியும் பௌத்தத் துறவியும்.

பண்டைய காலங்களில் ஜோதிடத்தை ஆய்வு செய்ய ஜோதிடர்களுக்கு வாழ்க்கைச்  சூழலில் சில வசதிகள் இருந்தன. ஒரு சிறிய கிராமத்தில் குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட மக்களின் வாழ்வை கவனித்து அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் அவர்களின் வாழ்வியல் சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை நுணுக்கமாகக் கவனித்து ஆராய்ந்து அவற்றை ஜோதிட நூல்களில் குறிப்பிட்டு வைத்துள்ளனர். பின்வரும் சம்பவத்தை மனதில் கற்பனை செய்யுங்கள்.

ஒரு கிராமத்திற்கு சைவத் துறவி ஒருவர் வருகிறார். அவரது பற்றற்ற வாழ்க்கை முறையில் கவரப்பட்டு ஒரு சிலர் இல்லற வாழ்வை வேண்டாமெனத் தீர்மானித்து அவரது சீடர்களாக மாறிவிடுகின்றனர். இந்நிலையில் சீடர்களின் பெற்றோரின் மன்றாடலை செவி சாய்க்காத அவர்களது ஜாதகத்தை ஜோதிடரிடம் பெற்றோர் எடுத்துச் சென்று ஆலோசிக்கின்றனர். அப்போது அப்படி சீடர்களான பெரும்பாலோரின் ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட கிரக அமைப்பு இருப்பதை கவனிக்கின்றனர் ஜோதிடர்கள். அந்த கிரக அமைப்பை ஒட்டியே அவர்களது வாழ்க்கைச் சூழ்நிலை அமையும் என்பதை தீர்மானித்து ஜோதிடர் சீடர்களின் துறவு வாழ்க்கைக்கான காரணங்களை விளக்குகிறார்.

பண்டைய ஜோதிட அறிஞர்களின் அந்த விளக்கங்களை உதாரண ஜாதகத்துடன் இங்கு காண்போம்.


1.சைவத்துறவி:

புதன் திசை இருப்பு 10 வருடம்  11 மாதம்  23 நாட்கள்.

மேற்கண்ட ஜாதகம் திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஜாதகம்.  

இந்த கடக லக்ன ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திலேயே ஆட்சியில் உள்ளார். ஜாதகரை அவர் எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றுவார் என்பது உறுதி. குடும்ப காரகன் குரு நீச்சமாகி குடும்பம் அமைவதை தடை செய்கிறார். இல்லற வாழ்வுக்கு எதிராகச் செயல்படும் கிரகம் சூரியன் இல்லறத்தோடு தொடர்புடைய ஏழாம் பாவத்தில் அமைந்து அதில் நாட்டத்தைக் குறைக்கிறார். தாம்பத்திய சுகத்தைக் குறிக்கும் 12 ஆம் பாவாதிபதி புதன் ஏழில் நீச குரு, சூரியனுடன்  அமைந்ததும் தோஷமே. சனி 5 ல் அமைந்த ஜாதகருக்கு இல்லறம் சுகப்படாது என்பதோடு ஆன்மீக சிந்தனை எழ அது அடிகோலுகிறது. மேலும் 5 ஆமிட சனி புத்திர பாக்கியத்தையும் குருவின் வலிமையை ஒட்டி தடை செய்வார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட கிரக அமைப்புகள் யாவையும் இல்லறத்தில் நாட்டமற்ற, பற்றுதலற்ற வாழ்க்கைச் சூழல் ஜாதகிக்கு அமையும் என்பதைக் குறிக்கும்.

ஏழில் குருவும் புதனும் அமைந்ததால் ஜாதகி போதனை புரியும் ஆற்றலுடையவர் என்பது விளங்குகிறது (ஜாதகி தற்போது தனியார் பள்ளி ஆசிரியை).

சந்திரன் புதனின் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்திலும் புதன் சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்திலும் உள்ளனர். சந்திரனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகத்தை சனி மட்டுமே பார்ப்பது துறவி யோகங்களில் ஒன்று. மேற்கண்ட ஜாதகத்தில் சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் அமைந்த புதனை சனி மட்டுமே பார்க்கிறார். சந்திரனின் இயல்பைக் கொண்டு ஜாதகர் சைவ வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டவர் என்பதை தீர்மானிக்கலாம்.

இத்தகைய அமைப்பை துல்லியமாகக் கவனித்து அதை துறவி யோகமான பரிவராஜ யோகங்களுள் ஒன்றாகக் கணக்கிட்டுள்ளனர்  நமது பண்டைய ஜோதிட சிகாமணிகள்.

சந்திரன் ஆட்சியில் உள்ளதும்  குருவின் வீட்டில் ஒரு உச்ச கிரகம் இல்லற இன்பத்திற்கு அதிபதி சுக்கிரன் அமைத்து குருவின் நீச தோஷத்திலிருந்து விடுபட வைக்கிறார். உச்ச சுக்கிரனுடன் மாங்கல்ய காரகன் செவ்வாய் இணைந்திருப்பதும் ஜாதகியின் திருமண வாழ்வை உறுதி செய்கிறது. தற்போது ஜெய வருஷம் ஆனி மாதம் (2014 ஜூன்)  குரு கடக ராசியில் உச்சமானவுடன் ஜாதகிக்கு ஜனன காலத்தில் ஏற்பட்ட தோஷம் விலகும் பிறகு திருமணம் நடக்கும் என்பதை அனுமானிக்கலாம். இதை திசா புக்திகளைக் கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2.பௌத்தத் துறவி

கேது திசை இருப்பு 3வருடம்  5 மாதம்  19 நாட்கள்.

இந்த இரண்டாவது ஜாதகம் மற்றொரு பெண்ணினுடையது.

ரிஷப லக்னத்திற்கு ஆறில் சூரியன் நீசமாகி அதனுடன் குடும்ப பாவதிபதி புதனும் இல்லற இன்பத்திற்கு அதிபதி சுக்கிரனும் வக்கிரகதியில் மறைவு ஸ்தானத்தில்  கூடி நின்றது ஜாதகியின் இல்லறச் சிந்தனையைத் தகர்த்தது. 5 ல் நின்ற கேது ஜாதகியின் ஆன்மீக நாட்டத்தைத் தூண்டுகிறார். லக்னத்திற்கு 12ல் சந்திரன் மறைவு. சந்திரன் நின்ற மேஷத்திற்கு  பாதக ஸ்தானமான  11ஆம் இடத்தில் குரு நின்று குடும்ப வாழ்வை ஜாதகிக்கு மறுக்கிறார். லக்னத்திற்கு 7 ஆமிடத்தில் ரிஷபத்திற்கு யோக காரனும்  தர்ம கர்மாதிபதியான சனி நின்றது திருமண வாழ்வைத் தடை செய்யமாட்டார். ராசிக்கு 7 ஆமிடம்தான் கடுமையாகக் கெட்டது.

இந்த ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் ஞானகாரகன் கேதுவின் அஸ்வினி நக்ஷத்திரத்தில் நின்றதும்,  சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமடைந்தாலும் அந்தச் செவ்வாய் சனியால் மட்டுமே பார்க்கப்படுவதும் துறவி யோகமான பரிவராஜா யோகங்களுள்  மற்றொரு வகை.

ஜாதகிக்கு துறவி யோகமுள்ளது சரி. அவர் எப்படி பௌத்தத் துறவி ஆனார்?

சிவப்பு நிறத்திற்கு உரிய செவ்வாயை சனி பார்ப்பதால் ஜாதகி சிவப்பு நிறத்தை தனது வழிபாட்டில் பயன்படுத்த வேண்டும். பண்டைய காலத்தில் பௌத்தத் துறவிகளின் ஜாதகங்களை ஆராய்ந்ததில் இந்த அமைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. பௌத்தத் துறவிகள் அடர் காவி வண்ணத்தை அங்கியாக அணிவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது ஜாதகி பௌத்தத் துறவி அல்ல. சிவப்பு வண்ண நட்சத்திர வடிவத்தை தங்களது தியானத்திற்கும் வழிபாட்டிற்கும் பயன்படுத்தும் பிரம்ம குமாரிகள் அமைப்பில் துறவு வாழ்வை ஏற்றுக்கொண்டுள்ளார்.


பிரம்ம குமாரிகளின் முத்திரைச் சின்னம்




யார் யார் எத்தகைய வாழ்வியல் சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் என்பதை இது போன்று ஜாதகங்களை ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். அதனால் மனம் பண்படும். வாழ்வில் நிதர்சனங்கள் புரியும். வேதனைகளையும் அனுபவித்து எற்றுக்கொள்ளும் மனோபாவம் வளரும். அதனால் மானிடம் சிறக்கும். இதுவே ஜோதிடத்தின் சக்தி.

அடுத்த வாரப் பதிவு: யாருக்கு ஏன் எதற்கு வாக்களிக்க வேண்டும்?  

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

1 comment:

  1. wonderful analysis ... all the best.. why don't you analyse modi 's jathagam relevant to this..?

    ReplyDelete