Sunday 22 November 2015

ஆறாம் பாவம்.

பளிங்கு போன்றதொரு நேர் சாலை.அதில் குழிகளும் மேடுகளும் கூட இல்லை.  அது ஒருவழிச்சாலையும் கூட. எதிரில் எந்த ஒரு நபரோ அல்லது வாகனமோ வராது.  உங்களிடம் இருப்பது நவீன வசதிகளுடன் கூடிய அற்புதமான BMW கார். அதுவும் சமீபத்திய மாடல். உங்கள் பயணத்தை கற்பனை செய்து பாருங்கள்.

மேகத்தில்  பறப்பது போன்று இருக்காதா?.

இன்றைய சராசரி இளைஞர்களின் கனவு இத்தகைய காரை வாங்கி அனுபவிக்குமளவு ஒரு அதிகாரம்மிக்க சௌகரியமான சம்பாத்யத்தில் ஒரு பணி.

ஆனால் உண்மையில் அத்தகைய ஒரு பயணம் சுகமாக இருக்க வாய்ப்பே இல்லை. சில நூறு கிலோ மீட்டர்கள் பயணத்திற்குப்  பிறகு பயணம் அலுப்புத்தட்டிவிடும்.என்பதே நிதர்சனம்.

மற்றொரு சாலை.

இது மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருவழிச்சாலை. உங்களிடம் இருப்பது பழைய அம்பாசிடர் கார். பல ஊசிக்கொண்டை வலைவுகளைக்கொண்ட மலைப்பாதை.

உங்கள் பயணத்தை இப்போது கற்பனை செய்து பாருங்கள்.

திடீரென்று திருப்பத்தில் அச்சுறுத்திய சக வாகன ஓட்டியின் பிறப்பை வசைபாடிய பிறகு இந்தப்பயணம் உங்களுக்கு அடுத்து என்ன எதிர்படும் என்ற ஒரு சுவாரஸ்யத்தை தருவது நிச்சயம்.

இத்தகைய பாதையில் பயணித்து முடித்த பிறகு நீங்கள் பண்பட்ட சிறந்த அனுபங்கள் கொண்ட மனிதராய் மாறியிருப்பீர்கள்.

மனித வாழ்வு இயந்திரத்தனமாகி வாழ்க்கை அலுப்புத்தட்டிவிடக்கூடாது என்பதற்காகவே வாழ்வில் எதிர்படும் சிரமங்கள்.

ஒருமனிதனின் வாழ்வில் இப்படிப்பட்ட எத்தகைய சிரமங்கள் எதிர்படும் என்பதை குறிப்பிடுவதே ஜாதகத்தில் ஆறாம் பாவம்.

ஆறாம் பாவம் கடன், (குணப்படுத்தக்கூடிய) வியாதிகள், எதிரிகள் போன்றவற்றைக் குறிப்பிடும் பாவமாகும்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 


மேஷ லக்னத்தில் ஆறாம் பாவாதிபதி புதன் வக்கிர கதியில் அமைந்துள்ளார். ஜாதகர் தனது வாழ்வில் ஆறாம் அதிபதியின் காரகத்துவத்தின் காரணமாக சிரமப்படுவார் என்பதை இது குறிக்கிறது.மகர ராசிக்கு ஆறாம் பாவாதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைந்துள்ளதன் மூலம் இதை உறுதி செய்துகொள்ளலாம்.

ஆறாம் பாவத்தின் பிரதான காரகங்கள் என்றால் அது கடன், வியாதி எதிரி எனில் இம்மூன்றில் எந்த வகையில் ஜாதகர் சிரமப்படுவார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?.

முதலாவதாக கடன்.

லக்னத்திற்கு 2 ஆமிடமான தனஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளதும் ராசிக்கு விரயத்தில் குரு உள்ளதும் ஜாதகருக்கு விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஜாதகன் இன்னும் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் ஒரு மாணவன். எனவே கடன் என்பது ஜாதகருக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இரண்டாவதாக எதிரி.

லக்னத்திற்கு ஆறாம் பாவத்தில் கடும் பாவிகளான சனி, ராகு, கேதுக்கள் அமைந்தால் எதிர்ப்பில்லாத வாழ்வு என்பது ஜோதிட விதி மட்டுமல்ல அனுபவ உண்மையும் கூட. லக்னத்தில் ஒரு உச்ச கிரகம் அதுவும் பஞ்சமாதிபதியான ராஜ கிரகம் சூரியனாக இருந்தால் எதிரி உதிரியாகிவிடுவான் என்பதும் ஒரு முக்கிய ஜோதிட விதியாகும். எனவே எதிரி வகையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

மூன்றாவதாக வியாதி.

லக்னத்திற்கு ஆறாம்பாவத்தை பிணிக்கு (வியாதிக்கு) காரகத்துவம் பெற்ற பாதகாதிபதி சனி பார்க்கிறார். ராசிக்கு ஆறாம் பாவத்தை குரு பார்த்து வளப்படுத்துகிறார்.எனவே ஜாதகர் வியாதியால் பாதிக்கப்படுவார் என்பதை தெளிவாக அனுமானிக்கலாம்.

சரி. ஆனால் எப்போது வியாதி வரும்.

வாழ்வின் அனைத்து சம்பவங்களும் திசா புக்திகளின் அடிப்படையில்தான் நடக்கும்.

ஜாதகருக்கு 10.02.2014 முதல் ராகு திசை நடக்கிறது.

ஆறாம் பாவத்தில் கடும் பாவியான ராகு இருப்பது விரும்பத்தக்கது என்றாலும் ராகு-கேதுக்கள் தாங்கள் இருக்கும் பாவாதிபதியின் செயலையே பிரதானமாக பிரதிபலிப்பர் என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் சுபாவ அடிப்படையில் ராகு பிணிகளுக்கு காரகத்துவம் பெற்றவர் சனி போன்று செயல்படுவார் என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. (கேது செவ்வாயை போன்று செயல்படுவார்).

ராகு திசை 18 ஆண்டுகள் எனில் ராகு தான் இருக்கும் பாவாதிபதி புதன் இரண்டு பாவங்களுக்கு (3 & 6) அதிபதி என்பதால் தனது 18 அண்டு பலனை 9 ஆண்டுகள் கொண்ட இரு பகுதிகளாக பிரித்து வழங்கும்.

இதில் ஆறாம் பாவம் கடன், வியாதி, எதிரி எனில் 3 ஆம் பாவமானது வெற்றி, வீரம், துணிவைக் குறிக்கும் உப ஜெய ஸ்தானமாகும்.

சரி.இரு பகுதி பலனில் எந்த பகுதிக்கான பலன் முதலில் நடக்கும் எது இரண்டாவது நடக்கும் என எப்படி காண்பது?

கோள்சாரத்தை கவனியுங்கள்.

ஜனன காலத்தில் பாதிப்பை அளிக்கும்படி அமையும் வருட கிரகம் கோள்சாரத்தில் அதே பாவத்தில் நிற்கும்போது உறுதியாக பாதிப்பை தரும்.  

இந்த விதியின் அடிப்படையல் ராகு ஜனன ஜாதகத்தில் தான் நின்ற கன்னி ராசியிலேயே தற்போது நிற்கிறது என்பதிலிருந்து பாதிப்பு தற்போது ஏற்படும் என அறியலாம்.   

ஜாதகர்  சென்ற மாதம் அக்டோபர் இறுதி வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மிகக் கடுமையான பாதிப்பு. ஜீவ மரண போராட்டத்திற்குப் பிறகு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தேறினார்.


ஜாதகர் பாதிக்கப்பட்ட காலத்தின் கோள்சாரம் கீழே.



ஜனனத்தில் ராகு நின்ற அதே ஆறாம் பாவத்தில் ராகுவுடன் ஆறாமதிபதி புதன் உச்சமடைந்துள்ளார்.

ஜாதகரை தாங்கிப்பிடிக்க வேண்டிய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன் நீசமாகியுள்ளார். 

சூரியன் நீசமானதால் சூரியனின் பாவத்தில் நின்ற லக்னாதிபதி செவ்வாயும் பாக்யாதிபதி குருவும் சுக்கிரனுடன் சேர்ந்து சனி பார்வை பெற்று வலுவிழந்துவிட்டனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் வியாதி தாக்கும்.

அதே போன்றுதான் பாதிப்பை தரக்கூடிய கிரகங்கள் ஜாதகரைத் தாங்கிப்பிடிக்கும் கிரகங்கள் வலுவிழந்ததும் தனது பாதிப்பை வழங்குகின்றன.

ராகு விஷத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் விஷ ஜூரமான டெங்குவால் பாதிப்பு. (மருத்துவ ஜோதிட முறையில் இதுபற்றி விரிவாக எழுதினால் பதிவு மிக நீளும்.எனவே இத்துடன் பதிவு நிறைவு செய்யப்படுகிறது.)

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி: 7871244501.  

7 comments:

  1. 6 பாவம் ருண, ரோக , சத்ரு ஸ்தானத்தை புரியும்படி சொல்லியிருக்கும் விதம் அருமை

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் சார்... நன்றி....

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு சார்

    ReplyDelete
  4. நல்ல விளக்கம் அய்யா.

    ReplyDelete
  5. நல்ல விளக்கம் அய்யா.

    ReplyDelete
  6. நல்ல விளக்கம் அய்யா.

    ReplyDelete