Friday 6 March 2015

சூரியனின் திக்பலம்

ஜாதகத்தில் கிரக மற்றும் பாவ வலுவை அளவிட 51 முறைகள் உள்ளதாக பண்டைய ஜோதிட  நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் திக்பலம்  பற்றி இங்கு காண்போம்.

எளிய முறையில் கூறுவதென்றால் சிங்கத்துக்கு வலிமை கரையில். முதலைக்கு வலிமை நீரில். இதே போன்று ஒவ்வொரு கிரகமும்  ஜாதகக் கட்டத்தில் கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய பாவங்களில் பெறும் சிறப்பான  அல்லது சௌகரியமான நிலையையே திக்பலம் என ஜோதிடத்தில் கூறுகிறோம்.

ஒவ்வொரு கிரகமும் எவ்விடத்தில் திக்பலம் பெறுகின்றன என்பது பின்வருமாறு.

கிரகம்                                                 திக்பலம் பெறும் கேந்திர ஸ்தானம்.
புதன் & குரு                          -           1 ஆமிடம்  (லக்ன கேந்திரம்)

சந்திரன் &  சுக்கிரன்          -           4 ஆமிடம்  (சதுர்த்த கேந்திரம்)

சனி                                          -           7 ஆமிடம் (சப்தம கேந்திரம்)

சூரியன் & செவ்வாய்        -           10 ஆமிடம் (தசம கேந்திரம்)

ராகு-கேதுக்கள் இரண்டும் தாங்கள் அமையப்பெறும் பாவாதியின் நிலையை ஓட்டிச் செயல்படும் நிழல்கிரகங்கள் என்பதால் இவற்றிற்கு திக்பலம் கிடையாது.

இப்பதிவில் நாம் தசம கேந்திர திக்பலனை ஆராய்வோம்.


அரசனும் சேனாதிபதியும் அதிகத் துடிப்போது  செயல்படும் இடம் போர்க்களமாகும்.  வெல்லவேண்டும்  என்ற துடிப்பு இருவருக்கும் போர்க்களத்தில் அதீதமாக இருக்க வேண்டும். அந்த அடைப்படையில்தான் அரச கிரகம் எனப்படும் சூரியனுக்கும் சேனாதிபதி எனப்படும் செவ்வாய்க்கும் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தை திக்பலம் கொண்டதாக ஜோதிடத்தில் வரையறுத்தார்கள். 


ஜனன கால சூரிய திசை இருப்பு: 4 வருஷம் 4 மாதம் 14 நாட்கள்.

ஜனன நேரத்தை இங்கு குறிப்பிடவில்லை . காரணம் அது சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான். எனினும் ஆய்வு ஜோதிடர்களுக்காக தசா இருப்பை குறிப்பிட்டுள்ளேன். அதைக்கொண்டு ஜனன நேரத்தை அறிந்து கொள்ளலாம். ஜாதகர் பிறந்தது ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி.   

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய ஆணின் ஜாதகத்தில் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தில் சூரியன் தனக்கே உரிய திக்பலத்துடன் சௌகரியமாக இருக்கிறார். சூரியன் அமைந்த தசம கேந்திரம் சூரியனின் ஆத்ம  நன்பணான புதனின் வீடாகும். அத்துடன் சூரியன் தன் நண்பன் புதனோடு இணைந்து அமைந்தது மிகச் சிறப்பு. போர்க்களத்தில் ஒரு அரசன் தன் நம்பிக்கைக்குரிய நண்பனோடு சேர்ந்து போரை சந்திப்பது போன்றது இது. அரசன் இதுபோன்ற சூழ்நிலையில் பதட்டமின்றி மிக வீரமுடனும் சாதுரியத்துடனும் போர்புரிய இது துணை புரியும். புதன் சாதுரியமான செயல்பாட்டிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியன் அமைந்த மிதுன ராசி பஞ்ச பூத அமைப்பில் வாயு ராசி என்பதால் அரசன் வாயுவின் தன்மைக்கேற்றபடி சில சமயம் தீவிரமாகவும் சில சமயம் அலட்டலில்லாமலும் போர்புரிவான். இந்த ஜாதகரும் களத்தில் எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமின்றி ஆனால் தீர்க்கமாகச் செயல்படுபவரே. வெற்றியை  மகிழ்வாய் எற்பவர். அதே சமயம் தோல்வி பெறும் நிலையிலும் கூட அசிங்கமாக அல்லாமல் கௌரவமாக ஏற்றுக்கொள்பவர். போரில் வெற்றி தோல்வி என்பது எதிர்பார்க்கக்கூடியதே. அரசன் (சூரியன்) சிறப்பாகப் செயல்பட்டாலும் ஜாதகரின் கன்னி லக்னத்திற்கு சூரியன் விரைய ஆதிபத்தியம் பெறுவதால் சில சமயம் தோல்வி தவிர்க்க இயலாததாகிவிடும். சில சமயம் மட்டுமே.  பல சமயம் தவிர்க்க இயலாமல் போனால் அவன் அரசனாக இருக்கவே தகுதியற்றவனாகி விடுவான் என்பதை கூறித்தான்  அறியவேண்டுமென்பதில்லை.

மேற்கண்ட ஜாதகர் அரசனல்ல. அரசு சார்பில் தலைமைப் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டவர். போர்க்களம் என்று குறிப்பிட்டது உண்மையில் போர்க்களமல்ல ஆடுகளம். அதுவும் கிரிக்கெட் ஆடுகளம். அரசனாகப் பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி.

மேற்கு இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வென்ற தோனியையும் சக வீரர்களையும் ஊக்குவிப்போம்.

போரின் வெற்றியில்  அப்போரில் பங்குபெறும் மன்னர்களின் ஜாதகம்  முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் போரில் பங்குபெறும் தேசங்களது  ஜாதக அமைப்பு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.மேலும் சம்பவம் நிகழும் நாளின் கோட்சார நிலை மற்றும்  பங்குபெறும் இரு அணி வீரர்களின் ஜாதகமும் கவனமாக ஆராயப்பட வேண்டும். இவை அத்தனையையும் ஆராய்ந்து ஆட்டத்தின் முடிவை துல்லியமாக கூறிவிட  இயலும்.

இப்போது நாம் மலேசிய ஆக்டோபசிடமோ அல்லது நியூசிலாந்து கிளியிடமோ ஆஸ்திரேலியாவில் நடக்கும் 11 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவைத்தெரிந்துகொள்வோம்.  

மற்ற கிரகங்களின் திக்பலத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன். 

2 comments:

  1. ஒரு மாதத்திற்குபின் தாங்கள் இடும் பதிவு இது. நன்றிகள் ஐயா.

    ஓர் ஐயம்.

    காலசர்ப்ப தோஷம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
    1. கடிகார சுழற்சி முறையில் ராகுவிலிருந்து கேதுக்குள் லக்னம் மற்றும் அனைத்து கிரகங்களும் அடைபடுவதா?
    2. கடிகார சுழற்சி முறையில் கேதுவிலிருந்து ராகுக்குள் லக்னம் மற்றும் அனைத்து கிரகங்களும் அடைபடுவதா?
    3. எதிர்கடிகார சுழற்சி முறையில் ராகுவிலிருந்து கேதுக்குள் லக்னம் மற்றும் அனைத்து கிரகங்களும் அடைபடுவதா?
    4. எதிர்கடிகார சுழற்சி முறையில் கேதுவிலிருந்து ராகுக்குள் லக்னம் மற்றும் அனைத்து கிரகங்களும் அடைபடுவதா?

    சற்று விளக்குங்கள் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய ஐயா,

    என்னை போன்ற துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு திக்பலம் பற்றிய பதிவு அருமை.

    ஆனால் தாங்கள் கூறியபடி 'தேசங்களின் ஜாதக நிலைகளையும், 22 வீரர்களின் ஜாதக நிலைகள் மற்றும் கோச்சார நிலைகளை கணிப்பபதற்குள் போட்டி முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன்.

    இதையே தாங்கள் பிரசன்ன முறைபடி விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்

    நன்றி

    ReplyDelete