Wednesday 23 January 2019

உயர் கல்வி - கவனம்.


கல்வி இல்லாதவன் கண்ணில்லாதவன் என நமது முது மறைகள் கூறுகின்றன. அடிப்படைக்கல்வி அனைவருக்கும் பொதுவானது. ஆனால் உயர்நிலைக் கல்வி ஒருவரின் வாழ்க்கையோடு அவர்தம் சம்பாத்யத்தோடு தொடர்புடையது என்பதால் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். மாணவர்களின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப கல்வியை தேர்ந்தெடுத்து அமைத்துக்கொடுத்தால் பின்னாளில் அவர்கள் வாழ்வில் கல்வி-தொழில் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவு தவிர்த்துவிடலாம் என்பது அனுபவ உண்மை.




ஜாதகத்தில் ஒவ்வொரு பாவமும் பின்வருமாறு கல்வியோடு தொடர்புகொண்டுள்ளன.

லக்னம்:
தனது சுய நிலைக்கான கல்வி, சுய திருப்தி, பாதுகாப்புக்கான கல்வி.

2 ம் பாவம்:
பொருளாதாரம் சார்ந்த கல்வி, உணவு சார்ந்த, வாய் மூலம் அதாவது மொழி அறிவு கொண்டு சம்பாதிக்கக்கூடிய போதனை, விற்பனை பிரதிநிதி போன்றவை.

3 ம் பாவம்:
எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், பயணம் சார்ந்த (tourism) கல்விகள்.

4 ம் பாவம்:
உற்பத்தித் தொழில்கள் அனைத்தும், விவசாயம், தோட்டக்கலை, கட்டுமானம், வாகனத்துறை போன்றன.

5 ம் பாவம்:
குழந்தை வளம், மன வளக் கல்வி, 4ஆவது பாவம் தோட்டம் என்பதால் அதை வளர்சிப்படுத்த தேவையான மூல விதைகள், பயிர்கள், செடிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கல் போன்றன.

6 ம் பாவம்:
சத்ரு ஸ்தானம் என்பதால் ஆயுதக்கல்வி, சேவகம், வம்பு, வழக்கு, அடிதடி என்பதால் சட்டம், மருத்துவம் தொடர்புடைய கல்விகளும் இவ்விடத்திற்கு உகந்தது.

7 ம் பாவம்:
தொடர்பு ஸ்தானம் என்பதால் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் (Marketing),  தொழில் வளம், நிர்வாகம் போன்றன.

8 ம் பாவம்:
மறைவு ஸ்தானம் என்பதால், ஜோதிடம், புதைபொருள், வரலாறு, தீவிர ஆய்வுக் கல்விகள் அனைத்தும்.

9 ம் பாவம்:
வெளிநாடு தொடர்புடைய கல்வி, மத ஆச்சார கல்விகள், உயர் கல்வி.

10 ம் பாவம்:
சுய தொழிலை குறிப்பிடும் பாவம் என்பதாலும் ராஜ்ய ஸ்தானம் என்பதாலும் சனி-சந்திர தொடர்பு நன்கமைந்திருந்தால் சுய தொழிலும், நிர்வாகம், அரசியல் கல்வியும் (Political science).

11 ம் பாவம்:
லாப ஸ்தானம் என்பதால் பொருளாதாரத்தோடு தொடர்புடைய கல்விகள், வருவாயை பெருக்கி உடனடி லாபத்தை தரக்கூடிய கல்விகள். பல உயர் நிலை கல்விகளையும் ஒருவர் பல பட்டங்களையும் பெறுவதை குறிப்பிடும் பாவமாகும்.

12 ம் பாவம்:
வெளி நாட்டு வாழ்வை குறிப்பிடும் இடம், ஆகாய மார்கத்தை குறிப்பிடும் பாவம் என்பதாலும் வெளி நாட்டு மொழிகள், கணினி அறிவியல், கடல் கடந்த தொடர்பால் அமையும் கல்விகள், (Shipping, Marine Engg, Fisheries, Logistics).

உயர் கல்வி அமையும் காலத்தில்

கல்வி பாவங்களான 2, 4, 5, 9 பாவங்கள் பாதிக்கப்பட்டு புதன்,குரு போன்ற கிரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்  உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவமான 8 ஆம் பாவம் தொடர்புடைய திசையோ புக்தியோ நடப்பில் இருந்தாலும், மேற்சொன்ன கல்வி பாவங்களும் கிரகங்களும் ராகு-கேதுக்களின் தொடர்பை பெற்றிருந்தாலும், கோட்சார சனியின் நிலையை பொறுத்து கல்வியில் பாதிப்பு ஏற்படும் அல்லது உயர் கல்வி தடைபடும்.  அப்போது அக்கால அளவு எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்பதை தகுந்த ஜோதிடரின் உதவியை நாடி அந்த கால கட்டத்தை கடந்ததும் தடைபட்ட கல்வியை தொடரச் செய்யலாம். பின்வரும் ஜாதகம் அந்த மாதிரியானதுதான்.



இந்தப்பெண்ணுக்கு சுக்கிர திசையில் புதன் புக்தி நடக்கிறது. சுக்கிரன் ஒன்பதாம் பாவாதியாவதால் உயர்கல்வியை குறிக்கிறது. ஆனால் புக்தி நாதன் புதன் ஐந்து மற்றும் எட்டுக்கு அதிபதி. புதன் தனது புக்தியில் ஐந்தாம் பாவ பலனை தந்துவிட்டு எட்டாம் பாவ பலனாக புக்தியின் பிற்பாதியில் கல்லூரிக் கல்வியை தடை செய்கிறது. ஜாதகி பள்ளிச் சூழலை கல்லூரியில் எதிர்பார்த்து அது கிடைக்காததால் குறிப்பிட்ட கல்லூரியில் படிப்பை தொடர முடியாது என்கிறார். இச்சூழலில் புதன் புக்தி முடிந்ததும் அடுத்த புக்தி சாதகமான சூழலில் கல்வியை தொடர செய்வது அவசியம்.


கிரகங்கள் ரீதியான தொழில்களை வழங்கும் கல்வியை தேர்ந்தெடுத்தல்.

சூரியன்:
அரசு வகை, நிர்வாகம், நிரந்தர வருமானம் தரத்தக்க தொழில்கள், அரசியல், அதிகாரம் செலுத்தக்கூடிய தொழில்கள். மருத்துவம், தந்தை வழி பூர்வீக தொழில்கள்.

சந்திரன்:
நீர், திரவம் சார்ந்த தொழில்கள், அன்றாடம் அழியக்கூடிய தொழில்கள், அடிக்கடி இடம் பெயரக்கூடிய தொழில்கள்.

செவ்வாய்:
இயந்திரம், பூமி வகை, வாகனம், கண்காணிப்பு, மேலாண்மை, அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்களை பயன்படுத்தி செய்யப்படும் தொழில்கள், பாதுகாப்பு, சீருடை அணிந்து சீரான ஒழுங்கு முறையுடன் செய்யும் அனைத்து தொழில்களும்.

புதன்:
கல்வி, கணிதம், ஜோதிடம், மருத்துவம், இசை, காலி நிலம், தகவல் தொடர்பு சார்ந்த தொழில்கள். பத்திர வகை, எழுத்தி வகை தொழில்கள்.

குரு:
ஆன்மிகம், போதனை, தங்கம், புரோகிதம், கோவில் அர்ச்சகர், குழந்தை நலம் சார்ந்த, நீதிபதி, கௌரவமான, மதிப்பான அனைத்து தொழில்களும்.

சுக்கிரன்:
ஆடம்பரம், அலங்காரம், வாசனை வகை, மதுவகை, பூக்கள் வகை, இசை, நாட்டியம், சங்கீதம், சொகுசுக்காக செய்யப்படும் அனைத்தும் தொழில்களும்.

சனி:
கடினமாக உடல் உழைப்பைக்கொண்டு செய்யப்படும் தொழில்கள், ஊதியக்குறைவான தொழில்கள், கீழ்மட்ட வகைத் தொழில்கள், பழைய பொருட்கள், சீரமைப்பு, நிலக்கரி, சுரங்கம், சுத்தப்படுத்தக்கூடிய தொழில்கள்,

ராகு:
போதை, வட்டி, அடகு பிடித்தல், ஜோதிடம், ஆராய்ச்சி, மருத்துவம், நிழல் உலக தொழில்கள், விஷ வகை, பாம்பு வகை தொழில்கள், சட்ட விரோதமான தொழில்கள் அனைத்தும்.

கேது:
சட்டப்படியான அனைத்து தொழில்களும், ஜோதிடம், மருத்துவம், நெசவு, ஆன்மிகம், நீதி மன்றம், சிமென்ட், ரப்பர், நூல்-கம்பி வகைகள்.

மேற்குறிப்பிட்டபடி கிரகங்கள் தன, தொழில், சேவக (6 ஆமிடம்) ஸ்தானங்களோடு தொடர்புகொண்டு திசா-புக்தி நடத்துமானால் அவை தொடர்புடைய தொழில்களை வழங்கும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம்.


மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் பரஸ்பர பார்வையில் உள்ளது. ஜாதகர் குரு திசையில் குரு சாரம் பெற்ற புதன் புக்தியில்  பொறியியல் கல்வியில் சேர்ந்தார்.. திசா நாதன் குரு புதன் வீட்டில் சந்திரன் சாரம் பெற்று திசை நடத்துகிறது. புதனும் சந்திரனும் பரிவர்த்தனையில் உள்ளது. லக்னாதிபதி சூரியனும் புதனின் வீட்டிலேயே உள்ளார். கேது தொழில் ஸ்தானமான 10 ஆமிடத்தில் உள்ளது. செவ்வாய் தனது பகை கிரகமான வக்கிர கதியில் பலகீனமாக அமைந்த சனி பார்வை பெற்றுள்ளது. அதனால்  ஜாதகத்தில் சனி-செவ்வாய் தொடர்பை விட புதன் தொடர்பே ஓங்கி உள்ளது. ஜாதகர் புதன் புக்தி முடிந்து சந்திரன் சாரத்தில் அமைந்த கேதுவின் புக்தி துவங்கியதும் முதல் வருடத்தோடு பொறியியல் கல்வியை கைவிட்டு மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 2016 ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியில் (MBBS) சேர்ந்தார். மாற்றத்தை குறிக்கும் சந்திரனின் சாரம் பெற்ற திசா நாதன் குரு அதே சந்திரனின் சாரம் பெற்ற கேது புக்தி துவங்கியதும் மாற்றத்தை தந்தது. குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் பொறியியல் கல்வியில் இம்மாணவர் முதலாமாண்டில் ஓரிரு பாடங்களை தவிர்த்து பெரும்பாலான அனைத்து பாடங்களிலும் தோல்வியுற்றார். ஆனால் மருத்துவ நுழைவுத்தேர்வில் வென்று தற்போது அங்கு சிறப்பாக கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.  

இதை இங்கு குறிப்பிடக்காரணம் ஜாதகத்தில் கல்வித்துறையை தேர்ந்தேடுக்கும் போது கிரக வலு, கிரக சேர்க்கை, பரிவர்த்தனை போன்ற அம்சங்களை பாவகங்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே.

மேலே குறிப்பிட்டிருக்கும் தொழில்கள் பொதுவானவையே. கிரக காரகப்படியும் சேர்க்கைப்படியும் பல்வேறு தொழில்களை அளவிட முடியும். அதை ஜாதக அமைப்பை பொறுத்து ஒருவருக்கு சிறப்பை தரும் கல்வியை தகுந்த ஒரு ஜோதிடரால் கூற முடியும் என்பதால்தான்.

எனவே உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்களுக்கு கவனம் தேவை.

அடுத்த பதிவு

“பரிகாரம்”

வெகு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி எண்: 07871244501, 08925308253 (Whatsapp)

1 comment:

  1. எங்களைப் போன்ற ஜோதிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு இதுபோன்ற ஜோதிட ரீதியான தகவல்கள் பெரிய உறுதுணையாக இருக்கும். நன்றி பழனியப்பன் சார்.
    இவன் இர.கணேஷ்பாபு

    ReplyDelete