Friday 5 April 2019

வேலையும் ஜோதிடமும்


இன்றைய சூழலில் ஒருவரின் மதிப்பு அவர் செய்யும் வேலையைக்கொண்டே அளவிடப்படுகிறது. ஒருவர் செய்யும் வேலை மற்றும் அதன் சாதக பாதகங்கள் ஜாதகத்தில் 12 பாவங்களோடும் 9 கிரகங்களோடும் தொடர்புகொள்கின்றன. குறிப்பாக 



ஜாதகத்தில் 2, 6, 10 பாவங்கள் வேலையோடு நேரடி தொடர்பை பெறுபவை.

வேலையில் ஏற்படும் இட மாற்றத்தை 3, 9, 10, 12 ஆகியவை குறிப்பிடுகின்றன.

பதவி உயர்வு எனில் 2, 6, 10, 11 ஆகியவையும் 

பணி இழப்பை 1,5,9,12 ஆகியவையும் குறிப்பிடுகின்றன.

பணி  இழப்பிற்குப்பின்  வேலை பெறுவதை 2, 6, 10, 11 ஆகிய பாவங்களும்

வேலைக்கு முக்கிய கிரகங்களாக சனியும், புதனும், குருவும் திகழ்கின்றன.

வெளி நாட்டு வேலைக்கு உரிய பாவங்களாக 9, 12 ம் உள்ளன. நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு வேலைக்கு கிரகங்களில் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு கேதுக்களும் காரணமாகின்றன.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


தொலை தகவல் தொடர்பை குறிக்கும் 3 ஆம் பாவாதிபதி குரு ஏழாமதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரம் பெற்று அமர்ந்துள்ளார். குருவின் சார நாதன் சந்திரன் கால புருஷனுக்கு 3 ஆமிடமான புதனின் மிதுனத்தில் லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் நிற்கும் செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நிற்கிறார். ஜீவன காரகன் சனி லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் நிற்கிறார். சனிக்கு 10 ல் தூது, அஞ்சலை குறிக்கும் புதன் உச்சகதியில் குரு பார்வையில் நிற்கிறார். இரண்டாமிடத்தில் நிற்கும் ராகுவும் குருவின் சாரம் பெறுகிறார். 10 ஆமதிபதி சுக்கிரன் குருவின் பூச நட்சத்திர சாரம் பெற்று தொடர்பு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் புதனின் வீட்டில் மிதுனத்தில் அமர்ந்துள்ளார். இந்த ஜாதகத்தில் 2, 6, 10  பாவ தொடர்புகளாலும் 3 ஆம் பாவ மற்றும் , புதனின் வலிமையாலும் ஜாதகருக்கு குரு திசை சனி புக்தியில் அஞ்சல் துறையில் 2011 ல் பணி கிடைத்தது.  

இரண்டாவதாக கீழே மற்றொரு ஜாதகம்.



இந்த ஜாதகிக்கு சந்திரன் கன்னி லக்னத்திற்கு பாதக ஸ்தானமான மீனத்தில் சனியின் உத்திரட்டாதி – 4 ல் இருந்து திசை நடத்துகிறார். சந்திரன் சனியோடு இணைந்து குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளது. சந்திரன் மாற்றத்திற்கு காரக கிரகம் என்பதாலும் பாதகத்தில் நின்று பாதகாதியோடு பரிவர்த்தனை பெற்று சந்திரனும் குருவும் சனியின் பூரட்டாதி மற்றும் பூசம் சாரம் பெற்றதாலும் பல வருடங்கள் சௌகரியமாக வேலை பார்த்த இடத்திலிருந்து சந்திர திசை துவங்கியதுமே தொலைவிற்கு இடமாறுதல் பெற்றுச்செல்ல வைத்தது. ஜாதகி மீண்டும் முந்தைய இடம் போன்ற சௌகரியமானதொரு இடத்திற்கு வர தற்போது கடும் முயற்சி செய்கிறார். இந்த ஜாதகத்தில் பாதகம் என்பது வேலை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலமான அசௌகரியங்களை  கொடுத்துள்ளது. இந்த ஜாதகத்தில் பாவ அடிப்படையில் மூன்றாமதிபதியோடு இணைந்த குரு மாற்ற காரகன் சந்திரனோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பு ஒரு புறமிருக்க மூன்றாமிடத்தை பாதகாதிபதியான குரு பார்த்து பணி மாற்றம் கிடைக்காதவாறு தடை செய்கிறார். சூரியன 12 ஆமிடாதிபதியாகி அவரும் சந்திரனை பார்ப்பதும் ஒரு காரணமாகும்.

மற்றொரு ஜாதகம் பின்வருமாறு.


இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் 10 ஆமிடத்தில் திக்பலம் பெற்று 11 ஆமிடாதிபதியுடனும் திசா நாதனும் 6 ஆமதிபதியுமான சனியுடனும் இணைந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் 10 ஆமதிபதி சுக்கிரன் அமர்ந்து அதன் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 6 ஆமிடத்தில் உச்சமாகியுள்ளார். ஜாதகருக்கு சனி திசை சுக்கிர புக்தியில் மாற்றத்தோடு கூடிய பணி உயர்வை அடைந்தார். . இதற்கு ஜாதகத்தில் 6, 10, 11 தொடர்புகளே காரணம் என்றால் அது மிகையல்ல.
  
நான்காவதாக மற்றுமொரு ஜாதகம் கீழே.


இந்த ஜாதகத்தில் ஐந்தாமதிபதி சந்திரன் திக்பலம்  பெற்ற ஆறாமதிபதி சூரியனுடனும் பாவச்சக்கரத்தில் பாதகாதிபதி புதனுடனும் 10 ஆமிடத்தில் அமர்ந்து திசை நடத்துகிறார். ஐந்தாமிடம் வேலை ஸ்தானமான ஆறாமிடத்திற்கு விரைய பாவம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்திரன் பணி இழப்பிற்கு முக்கிய கிரகமான கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்கிறார். லக்னாதிபதியும் 10 ஆம் பாவதிபதியுமான குரு ராசியில் ஆட்சி பெற்று பாவத்தில் நீசம் பெற்றுள்ளார். இதனால் 10 ஆமிடம் தொடர்புடைய திசா புக்தி வரும்போது பணியிழப்பு ஏற்படும் என்பதை அனுமானிக்கலாம். கோட்சாரத்தில் இந்த ஜாதகருக்கு சந்திர திசையில் ராசியில் 11 லிலும் பாவத்தில் செவ்வாயோடு  விரையத்திலும் நிற்கும் அஷ்டமாதிபதி சுக்கிரனின் புக்தியில் கோட்சார கேது ஆறாமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் நின்று கோட்சார சனியை தொடர்புகொள்ளவிருந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏழரை சனியில் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்படி திசா புக்திகளும் கோட்சாரமும் இணைந்து செயல்படுகிறது என்பதற்கு இந்த ஜாதகம் சாட்சி. புக்தி  நாதன் சுக்கிரன் பாவச்சக்கரத்தில்  தன வருவாய்க்குரிய ஸ்தானம் மேஷத்திற்கு பாதகமான கும்பத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கது. இங்கு பணி இழப்பிற்கு முக்கியமாக வரவு பாவமான 2, வேலை பாவமான 6, லாப பாவமான 11க்கு விரைய பாவங்களோடு (அதாவது 1, 5, 9)  இவற்றோடு லக்னத்திற்கு விரைய பாவமான 12 ஆவது பாவமும் முக்கிய காரணங்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது.

வாழ்க்கையில் திசா புக்தி மாறுதல்கள் நம் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கின்றன. அவற்றை ஏற்று செயல்படுத்துவதில் கோட்சார கிரகங்கள் முக்கியமாக வருட கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுவின் பெயர்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையல்ல.

இவற்றை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை என்றொரு கேள்வி எழும். மேற்கண்ட ஜாதகங்களிளிருந்து நமது வாழ்வில் நமது பணிச் சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல அணைத்து சூழ்நிலைகளுக்கும் கிரகங்களே காரணம் என்பது புரியும். இந்த உண்மை புரிந்தால் கிரகங்கள் நமக்கு வழங்கும் வாழ்க்கையின் மாறுதல்களை சலனமின்றி எதிர்கொள்ளலாம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501 , பகிரி 08300124501


No comments:

Post a Comment