Friday 13 March 2020

மாங்கல்ய பலம்!



திருமணப்பொருத்தம் பார்க்கையில் 2 மற்றும் 8 ஆம் பாவத்தைக்கொண்டே ஒர் திருமண உறவின் பலம் அளவிடப்படுகிறது.. 2 ஆம் பாவமும் 8 ஆம் பாவமும் பாவக் கிரகங்களால் முக்கியமாக சனி மற்றும் செவ்வாயோடு தொடர்புகொண்டதாயிருந்தால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் களத்திர தோஷம் என அழைக்கப்படுகிறது. ஆணுக்கு அது ஜீவன வகையில் கடும் சிரமங்களை ஏற்படுத்தி கணவனும் மனைவியும் இணைந்து இல்லறம் நடத்த கடும் தடைகளை உண்டுபண்ணுகிறது. பெண்ணைப் பொறுத்தவரை இது மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படுகிறது.  காரணம் கால புருஷ 8 ஆம் பாவமான விருட்சிகத்தில்தான் கால புருஷனின் பாதகாதிபதியான சனியின் அனுஷ நட்சத்திரம் உள்ளது. கால புருஷ அஷ்டமாதிபதியான விருட்சிகத்தின் அதிபதி செவ்வாய் கால புருஷனின் பாதகாதிபதி சனியோடு தொடர்புகொண்டு கால புருஷனுக்கு குடும்ப  பாவமான ரிஷபத்தையோ அல்லது விருட்சிகத்தையோ பார்த்தாலோ அல்லது ரிஷப, விருட்சிகத்தில் சேர்ந்திருந்தாலோ அல்லது பெண்ணின் லக்னத்திற்கு 2 மற்றும் 8 ஆம் இடங்களோடு தொடர்புகொண்டாலோ அது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது.  ஆனால் இக்கருத்தில் பல விதி விலக்குகளும் உள்ளன. அவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும் 

மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. கடக லக்னத்திற்கு பாதக ஸ்தானமான ரிஷபத்தில் லக்ன அஷ்டமாதிபதியும் ராசி அதிபதியுமான சனி விரையாதிபதி புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். இங்கு லக்னாதிபதி சந்திரன் லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் லக்னத்திற்கு அஷ்டமத்தில் மறைந்துள்ளனர். அஷ்டமத்தில் அமைந்த லக்னாதிபதி சந்திரனும் மாங்கல்ய காரகன் செவ்வாயும் மாங்கல்ய பாவத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் அமைந்துள்ளனர். இங்கு செவ்வாயும் சனியும் பரஸ்பர பார்வை பார்க்கின்றனர். இதனால் செவ்வாய் சனிக்கு தனது 4 ஆம்  பார்வையால் மாங்கல்ய பாவத்திற்கு தீங்கு செய்யக்கூடாது என கட்டளை இடுகிறது. பாதகத்தில் அமைந்த சனி நீதிமான் என்பதால் தனது கர்மங்களை நிச்சயம் கொடுத்தே ஆக வேண்டியவராகிறார். அதே சமயம் சனி ராசி அதிபதியும் ஆவதால் தண்டனை உண்டு ஆனால் மாங்கல்யத்தை பாதிக்க மாட்டேன் என தனது 1௦ ஆம் பார்வையால் செவ்வாய்க்கு பதிலனுப்புகிறார். புதனோடு சேர்ந்த சனி லக்னத்தையும் லக்னாதிபதியையும் பார்க்கிறது. இதனால் ஜாதகி புதனின் காரகத்துவமான ஆசிரியையாக வேலை செய்கிறார். கணவரை குறிப்பிடும் செவ்வாய் ஜலக்கிரகமான லக்னாதிபதி சந்திரனோடு இணைந்த நிலையில் செவ்வாயை திட்டமிடல் மற்றும் பசுமைக்கு உரிய புதனோடும் அரசாங்கத்தை குறிப்பிடும் சூரியனோடும் இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறது இதனால் ஜாதகியின் கணவர் மத்திய அரசின் வேளாண்மைத்துறையில் பணியாற்றுகிறார். இங்கு தன ஸ்தான அதிபதி சூரியனும் பாதகத்தில் அமைவதால் பெரும் தன வரவை இழக்க வேண்டியிருக்குமே என்பதற்காக வேலையை விட இருவருமே தயாராக இல்லாத சூழலில் வெவ்வேறு மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள். இங்கு மாங்கல்ய பாவத்தோடு தொடர்புடைய சனியும் செவ்வாயும் மாங்கல்யத்திற்கு பாதிப்பைத்தராமல் பிரித்து வைத்துள்ளது.



இரண்டாவதாக நீங்கள் காணும் மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ல் நிற்கும் வக்கிர சனியை 8 ஆமிடத்தில் நிற்கும் செவ்வாய் நேர் பார்வையாக பார்க்கிறது. இது கடுமையான அமைப்பாகும். லக்னத்திற்கு 2 லிலும் ராசிக்கு 6 லிலும் நின்று செவ்வாய் பார்வையை பெறும் சனி ஜாதகிக்கு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.    ராசிக்கு 1௦ ல் திக்பலத்தில்  உச்ச சூரியன் அமைந்துள்ளது. குரு வீட்டில்  நிற்கும் சனிக்கு திரிகோணத்தில் சூரியன் உச்சம் பெற்றுள்ளதாலும் ஜாதகி அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார். 7 ஆமிடத்திக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. இப்படிப்பட்ட ஜாதகங்களுக்கு குடும்ப அமையும் காலங்களின் சாதகமான திசா புக்திகள் பெரும்பாலும் வருவதில்லை. ஜாதகிக்கு தற்போது 7 க்கு விரையமான 6 ஆமிடத்தில் உச்சமான சூரியனின் திசை நடக்கிறது. 3௦ வயதை நெருங்கும் ஜாதகி கல்வியிலும் பணியிலும் அழகிலும் சிறந்தவரானாலும் உரிய வரன் இன்னும் அமையவில்லை. சனி கோட்சாரத்தில் தனது முதல் சுற்றை பூர்த்தி செய்துவிட்டது. ராசிக்கு 7 இல் உள்ள கோட்சார சனியோடு கோட்சார குரு இணையும் சூழலில் சனியின் வீரியம் தணிந்து திருமணம் நடக்க வேண்டும்.


மேற்கண்ட மூன்றாவது ஜாதகப்பெண்மணியின் ஜாதகத்தில் கன்னி லக்னத்திற்கு மாங்கல்ய ஸ்தானாதிபதியும் மாங்கல்ய காரகனுமான செவ்வாய் நீச நிலை பெற்று லாப ஸ்தானத்தில் அமைந்திருப்பது தோஷமே. ஆனால் பாதகாதிபதியே ராசி அதிபதியாக வந்து லக்னத்திற்கு 11 ல் உச்சமாகி அங்கு நீச நிலை பெற்ற செவ்வாயை நீசதிலிருந்து காப்பாற்றி நீச பங்கப்படுத்துகிறார். ஜாதகத்தில் சனி செவ்வாய் தொடர்பும் இல்லை. சனிக்கு வீடு கொடுத்த குரு செவ்வாய்க்கு நண்பராகி லக்னத்திற்கு 11 ஆம் பாவத்தில் இணைவு பெறுவதும் இந்த ஜாதகத்தில் செவ்வாய் நீச பங்கம் பெற்ற நிலையில் 2 ஆம் பாவத்தை நான்காம் பார்வையாக பார்ப்பதும் தோஷமில்லை. ஆனால் குரு சனியின் பூசம்-2 ல் நின்று மீனச்சனி குருவின் உத்திரட்டாதி-4 ல் நின்று சாரப்பரிவர்தனை பெறுவதால் தோஷம் ஏற்படும். சாரப்பரிவர்தனையால் சனி கடகத்திற்கும் குரு மீனதிற்கும் இடம் மாறிச்செல்வர். இப்போது லாப ஸ்தானத்தில் பரிவர்த்தனைக்குப்பின் இடம்பெயர்ந்து வரும் சனியோடு சேர்ந்து லக்னத்திற்கு 2 ஆமிடத்தை செவ்வாய் பார்வை செய்கிறது. இதனால் இந்த ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் செயல்படும். இந்த ஜாதகி செவ்வாய் சாரத்தில் நின்ற புதனின் திசையில் சனியில் புக்தியில் தன் துணைவரை இழந்தார்.



மேற்கண்ட நான்காவது ஜாதகம் ஒரு ஆணினுடையது. தனுசு லக்ன ஜாதகத்தில் 2 ஆம் பாவத்தில் உச்சமான செவ்வாயை மேஷத்தில் நீசமாகி வக்கிரமடைந்த கேதுவோடு இணைந்த சனி தனது 10 ஆம் பார்வையாக பார்க்கிறது. வருமான வகையைக்கூறும்  2 ஆமிடத்தில் ஒரு உச்ச கிரகம் நின்று அது பரிவர்தனைக்குப்பின் கேதுவோடு தொடர்பாவதால்  ஜாதகர் தன் வாழ்வில் இறைச்சேவை செய்து அரசுத்துறையில் திருக்கோவில் ஒன்றில் அறநிலையத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். லக்னத்திற்கு 10 ல் திக்பலம் பெற்று அமைந்த சூரியன் அதற்கு உதவியது என்றால் அது மிகையல்ல. ஓரளவு வசதி வாய்ப்புகளை கொண்டவர். 2 ஆமிடத்தில் செவ்வாய் உச்சமானதால் ஜாதகருக்கு வீடு அமைந்தது. சனி செவ்வாய் இரண்டும் சட்டம் ஒழுங்கை குறிப்பிடும் கிரகங்களாவதால் ஜாதகருடைய வீடு காவல் நிலையத்தை ஒட்டி அமைந்திருந்தது. கோபக்கார செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் உச்சமானாலும் பரிவர்த்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவோடு சேர்வதால் ஜாதகர்  கோபம் என்பதையே மிக மிகக்குறைவாகவே அறிந்தவர். 7 ஆமதிபதி உச்சமாகி 6 ஆமதிபதி சுக்கிரனை நீச பங்கமடையச் செய்வதால் ஜாதகரின் மனைவியும் பணிக்குச்சென்றார். கன்னியில் சூரியன் 4 பாகையில் நிற்கிறது. புதன் சூரியனுக்கு பின்னால் 1 பாகையில்  அஸ்தங்கமடைகிறது. சுக்கிரன் சூரியனுக்கு முன்னாள் 4  பாகை சென்று குறைவான அஸ்தங்க தோஷத்தை பெற்றுள்ளது.   7 ஆமிடத்தை வளர்பிறைச்சந்திரன் பார்ப்பதால் ஜாதகரின் மனைவி தாய்மையுள்ளம் கொண்டவர். ஜாதகருக்கு ஒரு பாதிப்பு என்றால் தாய்மை உணர்வோடு கவனித்துக்கொள்பவர். இந்த ஜாதகத்தில்  சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையாகின்றன. எனவே இந்த ஜாதகத்தில் மாங்கல்ய தோஷமோ பிரிவினை தோஷமோ  வேலை செய்யவில்லை.

தோஷ அமைப்புகளை ஆராய்ச்சி செய்கையில் விதிகளைவிட விதி விலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும். யோக ஜாதகங்களில் யோகத்தை செய்யும் திசை வந்தால்தான் யோகம் வேலை செய்யும்.  தோஷ ஜாதகங்களில்  தோஷத்தை செயல்பட வைக்கும் திசைகள் வருகிறதா என்பதையும் அவை எந்த வயதில் வருகின்றன என்பதையும் முக்கியமாக கவனித்தே யோகத்தையும் தோஷத்தையும் கூற வேண்டும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501.

No comments:

Post a Comment