Wednesday 18 September 2019

அரசியல் யாரை அரவணைக்கும்


கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ரகு Vs ராகு பதிவு மற்றொரு நாளில் வெளிவரும். வாசகர்கள் பொருத்தருள்க. 

அரசியலில் சதிராட்டங்கள் நிறைந்த மோசமான காலத்தில் இருக்கிறோம். இந்நிலை மேலும் வருங்காலத்தில் தாழ்வடையவே செய்யும்.  ஆனால் இந்திய அரசியல் இனிமேல்தான் தன்னை நிலை நிறுத்தி தேசம் முன்னேற பெரும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை இனி வருங்கால அரசியல் சிறப்பாகவே இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.


அரசியலில் ஈடுபட்டு பெரும் தனம் ஈட்ட முடியுமா? .பெரும் புகழைடைய முடியுமா? என்பது போன்ற கேள்விகளால் ஜோதிட உலகம் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக தமிழக தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வருடங்களே உள்ள நிலையில் , உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு செலவு செய்தால் போட்ட முதலை எடுத்துவிடலாமா? என்பது போன்ற கேள்விகள் ஜோதிடர்களின் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலே இந்த பதிவை எழுத தோன்றியது.

கீழே நேற்று பிறந்தநாள் கண்ட நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்.

சனியின் அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கிறார். சனி ராசிக்கு 1ல் ராஜ்ய ஸ்தானம் சிம்மத்தில் நிற்கிறார். இதனால் இவரது கர்மம் என்பது ராஜ கர்மம் என்பதாகிறது. கர்ம  காரகன் சனிக்கு 2 ல் சூரியன் நிற்பது இதற்கு மற்றொரு காரணம். ஜல ராசியில் பிறந்தவர். நடப்பது சந்திர திசை. சந்திரன் விரைவாக  சுற்றும் கிரகம். சுதந்திரமடைந்து இவரது ஆட்சியில் தான் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. துணிச்சலுக்கு காரணம் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து நீச பங்கப்படுவது. உலகம் சுற்றும் வயோதிகராக திகழ்கிறார். காரணம் 9 ஆம் அதிபதி சந்திரன் நீர் ராசியில் அமைந்து திசை நடத்துவதே. 7 ஆமதிபதி கர்ம காரகன் சனியுடன் ராசிக்கு 1௦ ல் அமைந்து நீசம் நோக்கி செல்வதால் குடும்ப வாழ்வு சிறப்பில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார். காரணம் சந்திர திசை முடிந்தாலும் அடுத்து வரும் ராசி அதிபதி செவ்வாய் திசையும் தனது முதல் பகுதியில் நன்மையை செய்யும் என்பதே.

அடுத்து கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



சூரியன் லக்னத்தில் நிற்கிறார். சூரியனுக்கு திரிகோணத்தில் ராகு உள்ளார். அதனால் சிந்தனை அரசியலின் பக்கம் உள்ளது. சூரியன் சனியின் நட்சத்திரத்தில் நிற்கிறார். சனி சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதாலும் சனிக்கு 2 ல் சுக்கிரன் நிற்பதாலும் அரசியல்வாதிகளுக்கு வாகன ஓட்டியாக செயல்படுகிறார். 12 ஆமிடத்திற்கு, சுக்கிரனுக்கு, 2 ஆமிடதிற்கு  பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. சுக்கிரன் 8 ஆமதிபதியோடும் மாந்தியோடும் இணைந்து நிற்கிறார். நடப்பது 7 க்கு விரையமான 6 ஆம் பாவத்தில் நிற்கும் சந்திரனின் திசை. ஜாதகருக்கு 38 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இவருக்கு லக்னத்தில் சனியின் நட்சத்திரத்தில் சனி பார்வை பெற்று நிற்கும் சூரியனால் திருமண எண்ணமே பெரிதாக இல்லை என்பதுதான்.  சனி சூரிய தொடர்பால் ஜாதகர் பிரபல ஜாதிக்கட்சி ஒன்றை சார்ந்து செயல்படுகிறார். சிம்ம ராசிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. அரசியலில் ஜாதகர் ஜொலிக்க வாய்ப்பில்லை. ஜாதகர் அடியாளாகவே செயல்படுவார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே .


ஜாதகர் சிம்ம ராசி என்பதும்.  ராகு சூரியன் சேர்க்கை பொதுச் சேவையில் ஈடுபடுத்தும் என்ற அமைப்பு மட்டுமே அரசியலுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது.  ராகு திசையில் லாப ஸ்தானத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு பணப்பட்டுவாடா செய்யும் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து ஓரளவு பொருளீட்டினார்.


பின்வரும் ஜாதகம் மற்றுமொரு ஆணினுடையது.

இந்த ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை இல்லை. ஆனால் சூரியனுக்கு திரிகோணத்தில் 5 ஆமிடத்தில் ராகு உள்ளது. கடக ராசி அரசியலுக்கு உரியது இந்த இரு அமைப்புகளால் இவர் ஒரு அரசியல் கட்சியில் தீவிர ஆதரவாளராக உள்ளார். சந்திரனுக்கு  1௦ ல் நான்கு கிரக சேர்க்கை என்பதால் இது ஒரு சன்யாச யோக ஜாதகம். 38 வயதாகியும் ஜாதகருக்கு திருமண எண்ணம் இல்லை.  குடும்பததை குறிக்கும் குரு வக்கிரமாகிவிட்டதால் குடும்பம் பற்றி இவர் வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. சுக்கிரன் அஸ்தங்கமாகிவிட்டதும் இதை உறுதி செய்கிறது. தன கார கிரகங்கள் குருவும் சுக்கிரனும் தோஷம் பெற்றதாலும் சன்யாச யோகத்தாலும் இவரால் அரசியலில் பொருளீட்டவும் முடியாது. லாபத்திலிருந்து திசை நடத்தும் சனி 1௦ ஆமதிபதி சூரியனின் சாரம் பெற்றுள்ளதால் ஓரளவு பிரபலமாக வாய்ப்புண்டு.

அரசியலில் சேவை செய்ய ராஜ கிரகங்களான சூரியன், சந்திரன், சனி, குரு  ஆகியவை சிறப்பாக ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்து திசாபுக்திகள் சாதகமாக வரவேண்டும். அரசியலில் சதிராட்டங்களில் ஈடுபட்டு பொருளீட்ட (கொள்ளையடிக்க) ராகு, சுக்கிரனின் வலு ஜாதகத்தில் இருக்க வேண்டும். இவற்றை தவிர ராஜ்ய ஸ்தானம் எனப்படும் 1௦ ஆமிடமும், சூரியனும் வலுவடைந்து சாதகமான திசை வந்தாலும் அரசியலில் ஈடுபடலாம். பொதுவாக நெருப்பு ராசிகள் 3 ம் (மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை), கடகம், கும்பம் ஆகியவையும் அவற்றின் அதிபதிகளும் சாதகமாக அமைந்த ஜாதகர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

அரசியலில் ஈடுபட சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு ஆகியவை இளம் வயதில் கடும் சோதனைகளையும் இழப்புகளையும் ஒருவருக்கு கொடுத்து, பல தியாகங்களை செய்ய வைத்து அவற்றில் அவர் தேரிய பிறகே இக்கிரகங்கள் அரசியலில் வெற்றிகரமாக உலா வர உதவுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் சரி, கடந்த காலங்களிலும் சரி நமது மாபெரும் அரசியல் தலைவர்களின் வரலாற்றை கவனித்தால் இவ்வுண்மை புரியவரும். அரசியல்வாதியின் வாரிசாக பிறந்துவிட்டால் மட்டுமே ஒருவர் அரசியல்வாதியாகிவிட முடியாது.

இப்போது கூறுங்கள் நீங்கள் அரசியலுக்கு வரத் தயாரா.?

தன்னலமற்ற தியாகிகளை இன்றைய அரசியல் எதிர்பார்க்கிறது.


மீண்டும் அடுத்த வாரத்தில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்
கைபேசி: 08300124501



No comments:

Post a Comment