Wednesday 16 September 2020

அகதியின் மகன்

198௦களில் இலங்கையில் உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த சூழலில் போர் முனையில் இருந்து தனது மனைவி குழந்தைகளை வெளி தேசங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு ,இலங்கையில் இருக்கும் தனது சொத்துக்களை இழந்து வெளியேற மனமின்றி,வாழவும் மனமின்றி தவித்தோர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள். போராளிக்குழுக்கள் ஒருபுறம்அரசுப்படை ஒருபுறம் என்று தங்கள் நிம்மதியை இழந்து தவித்தவர்கள் அவர்கள். அதைவிடக்கொடுமை, முறையான ஆவணங்களின்றி அந்நிய தேசங்களில் குடியுரிமை அதிகாரிகளிடம் அகப்பட்டு, தண்டிக்கப்பட்ட சூழலில் தனது குடும்பத்தவர்களின் நிலை என்ன? அவர்கள் வாழ்கிறார்களா? மரணித்துவிட்டார்களா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனரா? என தெரியாது அலைந்த மனிதர்களின் மனோ நிலைதான். சற்று கற்பனை செய்து பாருங்கள். அது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.நாம் இங்கு அலசவிருக்கும் ஜாதகமும் அப்படியான ஒரு மனிதரின் மகனது ஜாதகம்தான்..

இந்த ஜாதகரின் பெயர் கதிர்காமம் என்றும் அவரது தந்தையின் பெயர் மயில்வாகனம் என்றும் கற்பனையான பெயரில் கருதுவோம். மயில்வாகனம் 1983 ல் பிறந்து இரண்டே வயதான தனது மகனையும் தனது இளம் மனைவியையும் அப்படி இத்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் அனுப்பிவிட்டு, இலங்கையில் வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.மயில்வாகனம் தனது மகன் கதிர்காமம் கருவில் இருக்கும்போதே தனது தம்பி வேலாயுதத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தார். இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஒன்று இந்தியாவிற்கு தப்பிச்செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது ராணுவத்துடனோ, போராளிக்குழுக்களுடனோ இணைந்துவிட வேண்டும் என்ற நிலையே அப்போது நீடித்தது.

தனது மகன் குடும்பம் பிரிந்துவிட்டதன் பாதிப்பு மயில்வாகனத்தின் பெற்றோர் வாழ்விலும் எதிரொலித்தது. அது அவர்களது வாழ்வையும் புரட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும். பேரன் கதிர்காமம் பிறந்த 5 வருடம் சென்ற பிறகு மயில்வாகனத்தின் பெற்றோர் இருவரும் தங்களது குடும்ப வாழ்வை முறித்துக்கொண்டனர்.குடும்பத்தை பிரிந்த மயில்வாகனதிற்கு தற்போது பெற்றோர் வழி ஆதரவோ, சகோதர வழி உதவியோ இன்றி தனித்து விடப்பட்டார். சகோதரன், தாய், தந்தை, குடும்பத்தை இழந்த நிலை, போர்ச்சூழல் ஆகியவை தனி ஒருவனின் வாழ்வை தவிடுபொடியாக்கிவிட்டன. அன்றைய சூழலில் பல்வேறு தேசங்களுக்கு உயிர்பிழைக்க தங்களது குடும்பங்களை அனுப்பிவிட்டு இலங்கையில் அப்படி நடைப்பிணங்களாக வாழ்ந்த மயில்வாகனங்கள் ஆயிரமாயிரம். உரிய ஆவணங்களோ அனுமதியோ இன்றி இந்தியா வந்து, தன் மொழி பேசிய மக்களாலேயே ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் .9௦களின் மத்தியில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்தமைக்காக மயில்வாகனத்தின் மனைவியும் மகனும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்படிசொந்த தேசத்தில் வாழ முடியாமல் உறவுகளை உதறிவிட்டு வெளியேறி அந்நிய தேசத்தில் அகதிகளாக, குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக பார்க்கப்படும் மனிதர்களுக்கும் ஒரு ஜாதக  அமைப்பிருக்க வேண்டுமல்லவா, அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே நீங்கள் காண்பது மயில்வாகனத்தின் மகன் கதிர்காமத்தின் ஜாதகம்.


இரண்டாம்பாவம் சொந்த பூமியில், சொந்த ஊரில்ஒருவர் வாழும் நிலையையும், நான்காவது பாவம் சொந்த பந்தங்களோடு குறிப்பாக தந்தை வழி ரத்த உறவுகளோடு அதாவது பங்காளிகளுடன் உள்ள உறவுப்பினைப்பையும் குறிப்பிடும். லக்னம் ஒருவரின் தனித்தன்மையையும், ஐந்தாவது பாவம் அவரது பூர்வீகத்தின் தன்மையையும், 9 ஆவது பாவம் அவரது முன்னோர்களின் செயல்பாட்டையும், சனியின் நிலை ஒருவரது முன்னோர்களின் ஒழுக்கத்தையும் குறிப்பிடும்.. இந்த ஜாதகத்தில் 2 ஆமிடத்தோடு 5 &8 ஆமதிபதி குரு தொடர்பாகி, அங்கு6& 7 ஆமதிபதி சனியோடு 2 ஆமதிபதி புதன் பரிவர்தனையாகியுள்ளது. 5&8 ஆமதிபதி தொடர்பாகும் இந்தப்பரிவர்தனையால் ஜாதகர் பூர்வீகத்தை, சொந்த பூமியைவிட்டு வெளியேறுவார். ஏனெனில் 9 என்பது முன்னோர் வாழ்ந்த பூமி, குரு 8 ஆமிடாதிபதி ஆகையால் பூர்வீகத்தை விட்டு வெளியேறுதலை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. குரு, சனி,ஆகியவை வக்கிரமாகியுள்ளதும் 4 & 9 பாபங்களுக்குரிய செவ்வாய் அஸ்தங்கமாகியுள்ளதும் ஜாதகரது முன்னோர்கள் அடைந்த பாதிப்பை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஜாதகத்தில் 12 ஆமதிபதி சந்திரன் 8ல் சனியின் உத்திரட்டாதி-2 ல் நின்று 2 ஆமிடத்தில் தனது நட்சத்திரம் ஹஸ்தம்-2 ல் அமைந்த சனியோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இந்த இரு பரிவர்த்தனைகளும் ஜாதகரது தந்தைவழி முன்னோர்கள் அடைந்த பாதிப்புகளால் ஜாதகர் தனது தாயகத்தைவிட்டு வெளியேறுவதை தெளிவாக எடுத்துரைக்கிறது. லக்னாதிபதி சூரியன், சனி வீட்டில் நின்று லக்னத்தை பார்ப்பதால் இந்த ஜாதகரின் வாழ்வு சிறப்படைகிறது.. எனினும் சனியின் வீட்டில் அஸ்தங்க செவ்வாயோடும் சுக்கிரனோடும் சூரியன் நிற்பது, ஜாதகருக்கு அதீத கோபத்தையும், பொறுமையின்மையையும், நேர்மையாளனாக, பிடிவாதமுள்ளவனாக, குறைகளை சகித்துக்கொள்ள இயலாதவராக ஒரு மனோநிலையை உருவாக்கும். ஜாதகரின் இந்த குணம் பணியிடத்தில் சிறப்பைத்தந்தாலும், 7 ஆமிடம் இப்படி அதீத உஷ்ணமடைவதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.

தாயை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி, தந்தையை குறிக்கும்9  ஆம் பாவாதிபதி இருவரும் செவ்வாய் ஒருவரே ஆகி அஸ்தங்கமாகியுள்ளது. சனி திசை சுக்கிர புக்தியில் பிறந்த ஜாதகர், அதே சுக்கிர புக்தியில் இலங்கையை விட்டு கள்ளத்தோணி மூலம் தந்தையை பிரிந்து தாயோடு இந்தியா வருகிறார். திசா நாதன் சனி,8 ஆமிட சந்திரனோடு சாரப்பரிவர்தனை பெற்றதும்,புக்தி நாதன் சுக்கிரன் 12 ஆமிட ராகுவின் சதயம்-3 ல் நின்றதும் இதற்கு காரணமாகும். 12 ஆமிடம் வெளிநாட்டில் குடியேறுவதை குறிக்கும். சுக்கிரன் சட்டவிரோத குடியேற்றதிற்குரிய ராகு சாரம் பெற்று 12ல் நின்றதால் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறினர்.ராஜீவ்காந்தி மரணதிற்குப்பிறகு இந்திய அரசு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கிறது. 6 ஆமிடத்தில் நிற்கும் புதனின் திசையில் தண்டனை, அவமானங்களை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரன் சாரம் பெற்ற கேது புக்தியில் 1996-97 ல் ஜாதகரும் தாயும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிற்பாடு விடுதலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2௦௦1ல், 18 வருடங்களுக்குப்பிறகு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வந்து இணைகிறார் மயில்வாகனம்

இப்போது துவதசாம்சத்திற்கு வருவோம்.துவாதசாம்ச சக்கரம் பெற்றோர் நிலையை ஆராய உதவுவதாகும். லக்னத்திற்கு 12 ல் சூரியன் மறைந்து, லக்னத்திற்கு 7 ல் சூரியனுக்கு 8 சந்திரன் நிற்கிறது. சூரிய சந்திரர்கள் 6 – 8 ஆக அமைந்ததிதிலிருந்து பெற்றோர் இருவரும் ஒருங்கிணைந்து வாழும் சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்பதை இது குறிக்கிறது. லக்னத்திற்கு 6, 11 ஆமதிபதி சுக்கிரன் 9 ஆமிடத்தில்தனது புக்தியில் தந்தையைகுடும்பத்தைவிட்டு விலக்குகிறார். இதனால் 6–8 ஆக அமைந்த பெற்றோர் பிரிகின்றனர். அப்போது திசா நாதன் சனி, புக்தி நாதன் சுக்கிரன் இருவருமே சூரியனுக்கு எதிரிகளாவர். ஆனால் 2௦௦1 ல் சூழல் மாறுகிறது. புதன் சனி, சுக்கிரனுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் நண்பனாவார். புதன் லக்னத்தில் அமைந்து 7 ஆமிடத்தில் தன் வீட்டில் அமைந்த சந்திரனை பார்க்கிறார். இதனால் 2௦௦1 ல் புதன் திசையில், சந்திர புக்தியில் பெற்றோர் ஒன்று சேர்கின்றனர்.

 

தந்தை குடும்பத்துடன் இணைந்த பிறகு ஜாதகருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஜாதகர் கணினிக்கல்வியில் முதுநிலை பட்டம் பெற்று தேர்வாகிறார். 2004ல் ஜாதகரின் வாழ்வில் ஒரு பொற்காலம். புதன் திசை ராகு புக்தி அப்போது நடப்பு. ராகு ஜல ராசியில் நின்றாலும் அவர் ஜீவன காரகன் சனியின் சாரம் பூசத்தில் நிற்கிறார். ராகு சூதாட்டம், லாட்டரி, பிரம்மாண்டமான கனவு போல நம்ப முடியாத சம்பவங்களுக்கும் காரக கிரகம் ஆகிறார். அமெரிக்கா எப்போதுமே படித்த, தகுதி வாய்ந்த, திறன்மிகு உழைப்பாளிகளை கடந்த காலங்களில் இருகரங்கள் கொண்டு வரவேற்றிருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் வந்து பணிபுரிய விரும்பும் படித்த, தகுதி வாய்ந்த நபர்களுக்காக நடத்தப்படும் லாட்டரியில் பரிசு பெற்று அமெரிக்காவில் நுழையும்போதே பரிசின் மூலம் பச்சைப்பட்டயம் ( Green card) பெற்று அமெரிக்கா சென்று பணிபுரிகிறார்.

2006ல் இந்தியாவில் புதன் திசையில் குரு புக்தியில் கதிர்காமம் பெற்றோர்களுக்காக ஒரு வீடு வாங்கித்தருகிறார். புதன்4 ஆம் பாவதிபதி செவ்வாயின் சாரம் பெற்று (அவிட்டம்-2)  புக்தி நாதன் குருவின் சாரத்தில் (பூரட்டாதி-3 ல்) செவ்வாய் அமைந்ததால் அது சாத்தியமாயிற்று. ஜாதகருக்கு  பரிவர்த்தனைக்கு உள்ளான புதனின் திசையில் 2 ஆமிடத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் 20௦9ல் திருமணம் நடந்தது .ஒரு ஆண்டிற்குப்பிறகு களத்திர பாவமான 7 க்கு விரையத்தில் 6 ஆமிடத்தில் நிற்கும் வழக்கு பிரிவினை காரகன் கேதுவின் திசை துவங்கியதும் ஜாதகருக்கு வழக்கும் வந்தது, திருமண வாழ்வும் முடிவிற்கு வந்தது. எனினும் மணமுறிவு என்பதை 6 ஆமிடம் குறிப்பிட்டாலும் 8 ஆமிடமே சட்டப்படியான முறையான பிரிவினையை குறிப்பிடும் என்பதால் 4 வருட வழக்குக்குப்பிறகு 2௦15 ல் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் சாரம் (ஹஸ்தம்-2) பெற்ற 8 ஆமதிபதி குருவின் புக்தியின் சந்திரனின் அந்தரத்தில் வழக்கு முடிவுற்று சட்டப்படி விவாகரத்து பெற்றனர். (கேது – வழக்கு, சட்டப்பதியான பிரிவினை) அதே ஆண்டின் பிற்பகுதியில் கேது திசையில்,2 ஆமிடத்தில் ,2 ஆமிடத்ததிபதி புதனோடு பரிவர்த்தனையாகி நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. இங்கு திசாநாதன் கேது (திருவோணம்-2)  மற்றும் சனி (ஹஸ்தம்-2)  ஆகியோர் 8 ஆமிட சந்திரனோடு நட்சத்திர அடிப்படையில் தொடர்புகொண்டதால் ஜாதகருக்கு மணமுறிவு ஏற்பட்டு பிறகு மறுதிருமணம் நடக்கவேண்டும் என்பது கர்மவினை என்று தெளிவாகிறது.

இதனிடையே ஜாதகருக்கு 2017 மற்றும்2019ல்ராசிக்கு 5 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற சுக்கிர திசையில் சுய புக்தியில் ஜாதகருக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். செவ்வாய் அஸ்தங்கமானது ஜாதகருக்கு உறவுகள், பங்காளிகள் வகையில் நன்மையில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் ஜாதகரின் தந்தை தனது சகோதரனை விட்டு விலகினார். உறவுகள் விலகினர், பங்காளிகள் விலகினர். செவ்வாய் அஸ்தங்கமானதால்தான் இந்தியாவில் தங்களது வீட்டில் குடியேரியவர்களிடம்கூட முறையான வாடகை வசூல் செய்ய ஜாதகரால் இயலவில்லை. பெற்றோரை ஜாதகர் தனது முதல் திருமணம் விவாகரத்தான பிறகு அமெரிக்கா அழைத்து வந்தார். எனினும் வீடு மற்றும் சொத்துகள்  வகை பிரச்சனைகளை சரிசெய்ய தந்தை தனது மனைவியை ஜாதகரிடமே விட்டுவிட்டு இந்தியா வந்து தங்கினார். நீண்டதொரு போராட்டதிற்குப்பிறகு 2020 ல் தற்போது சுக்கிர திசையில்  சுய புக்தியில் செவ்வாய் சாரம் பெற்ற புதன் அந்தரத்தில் வீட்டை விற்றனர் எனினும் சிறிது மீத தொகை வரவேண்டியுள்ளது. இங்கே அஸ்தங்க செவ்வாயின் பாதகம் அதீதம் என்பது தெளிவாகிறது.

சூரியன் பாரம்பரியத்தைகுறிக்கும் காரக கிரகம் என்பது தெரியும். ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது ஒரு தலைமுறை தோஷம் என்பது சூரியனின் நிலைகொண்டு அறியலாம். சூரியன்7 ஆமிடத்தில் செவ்வாயோடு இணைந்து நின்றதால் தற்போது ஜாதகர் தனது இரண்டாவது மனைவியோடுகூட இனிமையான இல்லறம் நடத்த இயலவில்லை. ஜாதகரால் மட்டுமல்ல ஜாதகரின் தந்தை,பாட்டன் ஆகியோரின் குடும்ப வாழ்வும் பாதித்துள்ளது. தற்போதும் ஜாதகரின் தந்தை இந்த கொரானா காலத்தில் அமெரிக்கா செல்ல வழியின்றி இந்தியாவில்தான் இருக்கிறார். இத்தகைய கடுமையான தோஷங்களை முறையான வழிகளில் குறைத்துக்கொள்ள ஜோதிடம் நமக்கு வழிகாட்டுகிறது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி:8300124501 

No comments:

Post a Comment