Sunday 5 January 2014

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

பகுதி - 1 


ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 2 வருடம், 2 மாதம் 14 நாட்கள்.

மேலே நாம் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் திருமணத்தோடு தொடர்புடைய பாவங்கள் 2,4,7,8 & 12 அணைத்துமே கெட்டுள்ளது எனலாம்.

லக்னாதிபதியும் இல்லற இன்பத்தைக் குறிக்கும் கிரகமுமான  சுக்கிரன் 6 ல் துலாத்தில்  மறைந்தாலும் அது அவரது ஆட்சி வீடானதால் சுக்கிரனுக்கு மறைவு தோஷம் இல்லை.

அஷ்டமாதிபதி (8 ஆம் பாவத்திற்குரிய கிரகம்) குரு, குடும்பத்தைக் குறிக்கும்  இரண்டாம் வீட்டில் வக்ர கதியில் வலுவாக அமர்ந்து (பகை வீட்டில் வக்ரமடையும் கிரகங்கள் வலுவடையும்) ஜாதகருக்கு குடும்பம் அமைவதை தடை செய்கிறார். குடும்ப காரகனான குரு ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு என்பதோடு ராசிக்கு பாக்யாதிபதியும் ஆவதால்  குடும்பம் அமைவதை தாமதிக்கலாமே தவிர தடைசெய்யமுடியாது.

நான்காமிடம் வாழ்வில் ஒருவர் பெறும் சுகங்களைக் குறிக்கும். திருமணம் மூலமாக பெறும் தாம்பத்திய சுகமும் அதில் ஒன்று. அங்கு சனி அமர்ந்து ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய சுக பாக்கியங்களைத் தடை செய்கிறார்.
உடலுறவைக் குறிக்கும் 8 ஆமிடத்தில் மாந்தி அமர்ந்து அந்த பாக்கியத்தை கெடுப்பதோடு  2 ஆமிடத்தையும் தனது பார்வையால் கெடுக்கிறார். இது திருமண விஷயத்தில் ஜாதகர் பல பெண்வீட்டாரின் கடைசி நேர பின்வாங்கல்களை சந்திக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2 ஆமதிபதி புதனுடன் 4 ஆம் அதிபதி சூரியன் சேர்ந்து 7 ல் அமர்ந்துள்ளார். பொதுவாக 7 ல் சூரியன் அமர்வது வாழ்க்கைத் துணைவர் வகையில் பல வேதனைகளையும் பிரிவினையையும் குறிக்கும். இவர்களுக்கு வீடு கொடுத்த செவ்வாய் கடகத்தில் நீச்சம். இது ஜாதகருக்கு திருமணம் நடைபெறாமல் தடுக்கும் என்பதோடு அப்படி நடந்தாலும் செவ்வாய் தன் வீட்டில் அமர்ந்துள்ள சூரியனுக்கு ஜாதகரின் மண வாழ்க்கையில் பிரிவினையை ஏற்பட உத்தரவிடுவார் எனலாம்.

ஏனெனில் தனது பாவத்தில் உள்ள கிரகத்தை வழிநடத்தும் உரிமை பாவாதிபதி கிரகத்திற்கு உண்டு. பாவத்தில் உள்ள கிரகம் பாவாதிபதி கிரகத்திற்கு நட்பானால் பாவ கிரகத்தின் உத்தரவை ஏற்றுச் செயல்படும், பகையானால் பாவதிபதி கிரகத்தின் உத்தரவை நிராகரிக்கும்.

இந்த ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் நட்பு என்பதால் ஜாதகருக்கு திருமணம் நிகழாமல் தடுக்கவும் அப்படி நிகழ்ந்தாலும் பிரிவினையை ஏற்படுத்த கடைமைப் பட்டவர்கள் எனலாம்.

இந்த ஜாதகத்தில் செவ்வாய் ராசிபதியும் ஆகிறார். அதனால் ஜாதகரை காப்பாற்ற வேண்டியவரும் ஆகிறார். (சந்திரனுடன் பரிவர்த்தனை அடைந்ததால், நீச செவ்வாய் முழுமையாக தனது நீச நிலையில் இருந்து விடுபட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. சந்திரனும் அம்சத்தில் நீசம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது). ராசியாதிபதியாவதால் ஜாதகரை காப்பாற்றவும் நீசமடைந்ததால் ஜாதகரை கெடுக்கவும் உரிமையுள்ள ஒரு பரிதாபகரமான அமைப்பில் செவ்வாய் உள்ளார். ஆட்டை வளர்ப்பவனே அதை வெட்டுவதைப் போன்ற ஒரு சூழல்.

இத்தகைய சூழலில் ஒரு கிரகம்,  திசா – புக்தி மற்றும் கோட்சார ரீதியாக தான் வலுவடையும் காலம் வரும் வரை ஜாதகருக்கு தான் வழங்கவேண்டிய பலன்களைத் தடை செய்யும் எனலாம். அந்தக் காலம் வரும் முன்னர் அக்கிரகம் தொடர்புடைய சம்பவங்கள் நடந்தால் அவை தோல்வியடைவது உறுதி. இந்த ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிப்பிட்ட சம்பவமாக எடுத்துக்கொள்ளலாம்.  

எப்படி தனது பாவத்திலிருக்கும் கிரகத்தை கட்டுப்படுத்தும் தகுதி ஒரு பாவாதிபதி கிரகத்திற்கு உண்டோ, அதேபோல ஒரு பாவத்தில் அமைந்த கிரகத்திற்கு அந்த பாவதிபதி கிரகத்தை கட்டுப்படுத்தும் தகுதி உண்டு.

இவ்விரு விதிகளுமே அவ்விருகிரகங்களின் வலு மற்றும் உறவின் (நட்பு,பகை, சமம்) அடிப்படையில் அமையும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்திற்கு பாக்யாதிபதியான சனி பகவான், சூரியனின் வீட்டில் அமைந்துள்ளது ஜாதகருக்கு கடின உழைப்பை தரும் என்றாலும் அது மேற்சொன்ன தீய பலன்கள் நடைபெறாமல் தடுக்கும் ஒரு நன்மையான அமைப்பே. எவ்வாறெனில்? குறிப்பிட்ட தோஷ காலம் முடியுமும் திருமணத்தை நடத்திவைத்து அதை தோல்வியும் அடையச்செய்ய திருமணம் தொடர்பான பாவங்களில் தொடர்புடைய  சூரியன், புதன் & செவ்வாய்க்கு உரிமையுண்டு. 7 வது பாவத்தில் இருக்கும் சூரியனுக்கு இதில் பிரதான பங்கு உண்டு. ஆனால் சூரியனை அப்படி திருமணத்தை நடத்திவைக்கவிடாமல் சனியால் தடுத்துவைக்க முடியும்.

எப்படியெனில் தன்வீட்டில் கேந்திர வலுவுடன் இருக்கும் சனியின் உத்தரவை மீறிச் செயல்பட சூரியனால் முடியாது என்பதுதான் காரணம். அப்படி மீறி செயல்பட வேண்டுமெனில் சூரியனுக்கு வீடுகொடுத்த செவ்வாய் வலுவாக இருக்க வேண்டும். இங்கு செவ்வாய் நீசமாகிவிட்டதால் சூரிய பகவான் சனியின் உத்தரவை மீறிச் செயல்படும் வலுவுடன் இல்லை எனலாம். மேற்சொன்ன விதிகளின் தாக்கம் என்ன என்பது இப்போது ஜோதிட அன்பர்களுக்குப் புரியும்.

சூரியன் வீட்டில் அமைந்த பாக்யாதிபதி சனி, ஜாதகருக்கு திருமணம் உள்ளிட்ட பாக்கியங்களை தர வேண்டியவராகிறார். அப்படி தரும் பட்சத்தில் அதை தோல்வியுறச் செய்ய சூரியன் தயாராக இருக்கிறார். எனவே அவரும் திருமணத்தை தடை செய்கிறார். ஆனால் இந்தச் சனிதான் ஜாதகரை வாழ்விக்கும் தெய்வம் என்றால் அது மிகையல்ல.

இந்த ஜாதகருக்கு கடந்த 2012 ஜூன் மாதத்தில் (ராகு திசை புதன் புக்தியில்) திருமணம் நடந்தது.
திருமண நாளின் கிரக நிலைகள்.

அப்போது சனி, செவ்வையின் நட்சத்திரத்தில் (சித்திரை-3ல்) துலாத்தில் உச்சமடைந்து வக்கிரமாகி பின்னோக்கிச் சென்று கன்னி ராசியில் அதே நட்சத்திரத்தில் (சித்திரை-2)ல் இருந்தார். வக்ரத்தில் உக்ர பலம் என்பார்கள். ஜாதகரின் மேஷ ராசிக்கு ஆறாமிடமான கன்னியில் ராசிநாதன் செவ்வாயின் நட்சத்திரத்தில் அப்போது வக்கிரகதியில் அமைந்த சனி, ஜனன காலத்தில் செவ்வாய்க்கு ஏற்பட்ட நீச தோஷத்தைப் போக்கினார். அதனால் செவ்வாய் தனது கடுமை மாறினார். செவ்வாய்க்கு தோஷம் விலகியதால் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் தொடர்புடைய பாவங்களான 2,7 மற்றும் 4 ம் பலமடைந்தன. அதோடு செவ்வாயின் பாவத்தில் அமர்ந்த சூரியனும் நவாம்சத்தில் நீசமான புதனும் தங்களது கடுமை குறைந்து கருணை காட்ட வேண்டியவராயினர். பொதுவாக சனி ராசிக்கு 3,6,11ல் வரும்போது அற்புதமான பலன்களை வழங்குவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனியை “JEWEL OF OUR SOLAR SYSTEM” என்று வானியலில் வர்ணிப்பார்கள். அதன் வளையங்களோடு அதை காண்பது அத்தனை அழகு. சனியும் குருவும் மனிதனின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இரு கால்கள் எனலாம். சனி நமது பாவங்களைக் களைந்து, அவற்றிலிருந்து நம்மை விடுவித்து நம்மை தெளிவுபடுத்திய பிறகே நமக்கு நன்மைகளை அருள்வார். ஜாதகங்களை பொறுமையுடன் ஆராய்ந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து அதிசயிக்கலாம்.

சனி கோட்சார ரீதியாக நம்மை கஷ்டப்படுத்தும் காலங்களை நாம் படிப்பினை பெறும் காலங்கள் என எடுத்துக் கொள்ளுங்கள். சனி பகவான் தரும் படிப்பினைகளை எவரும் தர முடியாது. அவர் கொடுப்பதையும் யாரும் தடுக்க முடியாது. அதனாலேயே ஒரு அற்புத பழமொழி ஜோதிடத்தில் வழங்கப்பட்டு வருகிறது அது



“சனி கொடுக்க யார் தடுப்பார்?.  



மற்றும் ஒரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

6 comments:

  1. ப்திவு பயனுள்ளதாக இருந்தது,இதே போல் தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு படைப்பும் அது சார்ந்த அறிவும் ஆர்வமும் உடையோர்களால் விமர்சிக்கப்படும்போதுதான் பரிமளிக்கிறது. உங்களைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களை வாசகர்களாகப் பெற்றிருப்பது பெருமை. என் பனிச் சூழல் காரணமாக குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுத முயல்கிறேன்.

      நன்றி.

      அன்பன்,
      பழனியப்பன்.

      Delete
  2. மகர லக்னம், 7ல் கடஙம் டனபூசம்-2 சூரியன் இருந்தால் என்ன பலன்?

    ReplyDelete
  3. மகர லக்னம், 7ல் கடகம் பூசம்-2 சூரியன் இருந்தால் என்ன பலன்?

    ReplyDelete
  4. Sir... உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது..
    ரிஷபம் லக்னம் குரு திசை பற்றி கூற முடியுமா? குரு துலாம் ல் உள்ளது.சந்திரன் சுக்கிரன் புதன் சூரியன் மகரத்தில். செவ்வாய் சனி கன்னியில்.கேது தனு ராசியில் உள்ளது.

    ReplyDelete
  5. Rishaba lagnam 6 ill guru maraivu 10 ill suriyan sevvai sani ethu Enna mathiriyana palan kodukkum

    ReplyDelete