Tuesday 5 March 2019

பாவகப் புள்ளி ஆச்சரியங்கள்?


ஜாதகத்தில் ஒரு பாவக பலனை அல்லது ஒரு கிரகம் செயல்படுவதை நிர்ணயிக்க பல்வேறு யுக்திகள் ஜோதிட அறிஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொரு முறையும் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டிருக்கும். ஜாதக பலன்களை நிர்ணயிப்பதற்கு பல்வேறு முறைகளில் ஆராய்ந்து அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக  தெரியும் சூழலில் ஜோதிடர் திகைத்து நிற்பதும் உண்டு. பெரும்பாலான ஜோதிடர்கள் கையாள்வது திசா புக்தி நிலையோடு கோட்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து பலன் சொல்வதுதான். ஜாதகம் காட்டும் சூழலில் ஜாதகர் தோற்றம் அமைப்பு, வேலை போன்றவைகளை உறுதி செய்துகொண்டு ஜோதிடர்கள் பலன் கூறுவர். இதிலும் ஒரு சிக்கல் உண்டு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருக்காவிட்டாலும் ஜனன நேரம் தவறுதலாக குறிக்கப்பட்டிருந்தாலும் பலன் கூற முடியாத சூழலில் நாடி முறைகளை அனுசரித்து பலன் கூறுவது ஒரு முறை.



இப்பதிவில் நாம் பல்வேறு ஜாதக அலசல் யுக்திகளில் ஒன்றான ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி அமைந்த நட்சத்திர நாதனைக்கொண்டு அந்த பாவகத்தின் பலனை அலசும் முறை பற்றி காண இருக்கிறோம். K.P முறையில் உப நட்சத்திரத்தை கொண்டு பாவகப் புள்ளியை வைத்து பலன் நிர்ணயிப்பவர்கள் “சார ஜோதிடம்” என்று இம்முறையை அழைக்கிறார்கள்.  நாம் இங்கு K.P உப நட்சத்திர முறையை தவிர்த்து பாரம்பரிய முறையில் அதாவது பாவகப்புள்ளி விழுந்த நட்சத்திர நாதனைகொண்டு  பலன் நிர்ணயிக்கும் முறையை காண்போம்.



மேற்கண்ட ஜாதகர் ஒரு ஆண். இவருக்கு லக்னம் மகரத்தில் 12.21 பாகையில் திருவோணம் முதல் பாதத்தில் அமைந்துள்ளத்து. இவரது ஜீவன கர்மா என்னவென்று பார்ப்போம். இவருக்கு 10 ஆவது பாவகம் துலாமின் தொடக்கப்புள்ளி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைகிறது. ராகு கடக ராசியில் அமைந்துள்ளார். ஜாதகர் கடல் கடந்த தொடர்பில் ஜீவனம் செய்கிறார் என்பதை இது குறிக்கிறது. ராகு புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் ஜாதகர் புதன் குறிக்கும் தகவல் தொழில் நுட்பவியலாளராக பணிபுரிவதை இது குறிப்பிடும். சனியின் நிலையை கொண்டும் இதை அனுமானிக்கலாம் என்றாலும் இம்முறையால் சனியை தொடர்புபடுத்தி உறுதி செய்துகொள்ளலாம்.

இரண்டாவதாக கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


லக்னம் 23 பாகையில் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. எனவே இரண்டாவது பாவகப்புள்ளி சிம்மத்தில் 23 பாகை லக்ன பாதகாதிபதியான சுக்கிரனின் பூரத்தில்  அமையும். 2 ஆமிடத்தில் பிரிவினையை குறிப்பிடும் கேது அமைந்து விரையாதிபதி  புதனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. பாதகாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் சேர்ந்து விரையத்தில் அமைந்து 2 ஆமதிபதி சூரியன் 2க்கு விரையத்தில்  லக்னத்தில் விரையாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதும் 2 ஆமிடம் கடுமையாக இந்த ஜாதகிக்கு பாதிக்கும் எனவும் அது கர்ம வினை என்பதையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. எப்போது குடும்ப பாவம் பாதிக்கும் என்பதை திசா புக்திகளை கொண்டு அறியவேண்டும். இந்த ஜாதகிக்கு 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் சாரம் பெற்ற சனி திசையில் புதன் புக்தியில் திருமணம் நடந்து கேது புக்தியில் விவாகரத்தானது.

கீழே மற்றொரு நபரின் ஜாதகம்.


லக்னப்புள்ளி துலாத்தில் 26 பாகையில் அமைகிறது. ஜாதகருக்கு புதன் திசை நடக்கிறது. திசை பாவகப்புள்ளியை சார்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை இந்த ஜாதகம் கொண்டு ஆராய்வோம். ஜாதகருக்கு புதன் நிற்கும் 10 ஆவது பாவக துவக்கப்புள்ளி புதனின் சொந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் அமைகிறது. ஜாதகருக்கு திசை நடத்தும் கிரகமும் புதன் என்பதால் புதன் தனது திசா காலம் முழுவதும் தனது, காரக, ஆதிபத்திய பலன்களை தான் நிற்கும் 10 ஆவது பாவம் சார்ந்து அழுத்தம் திருத்தமாக வழங்கும் எனலாம். திசா நாதன் புதன்  சூரியனோடு இணைந்திருப்பதால் உயர்ந்த நிலையிலான பணி. உச்ச குருவோடு சேர்ந்திருப்பதால் நிறைந்த தனம் புழங்குமிடத்திலும் கடக ராசி என்பதால் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய  நிறுவனத்திலும் பணி. உச்ச குரு குறிப்பிடும் ஆயுள் காப்பீட்டுத்துறையில் உயர்நிலை வரவு செலவு தணிக்கையாளராக  ஜாதகர் பணிபுரிகிறார். 

புதன் கால புருஷனுக்கு 6 ஆமிடாதிபதி மற்றும் லக்னத்துக்கு 9 ஆமாதிபதி என்பதாலும் ஜாதகர் தந்தை வழி பூர்வீக பூமி வகையில் விவகாரங்களை சந்தித்தார். 9 ஆம் பாவாதிபதியான புதன் லக்ன பாதகாதிபதி சூரியன் குருவோடு இணைந்து திசை நடத்வதால் ஜாதகரின் தந்தைக்கு உயிர் கொல்லி நோயான புற்றுநோய்  வந்து மரணத்தை தந்தது. (9 ஆமதிபதி + குரு + சூரியன் இணைவு தந்தைக்கு புற்றுநோயை தரும்). கடக ராசியில் புதன் நின்று பாதகாதிபதி, ரோகாதிபதி தொடர்பு கொண்டு திசை நடத்துவதால் தந்தை வழி பாரம்பரிய ரத்த தொடர்புடைய வியாதியான சர்க்கரை வியாதிக்கு ஜாதகர் ஆட்பட்டார். 

புதன் இளைய சகோதரியையும் சுக்கிரன் மூத்த சகோதரியையும் குறிக்கும். புதன் பாதகாதிபதி சூரியன் மற்றும் சகோதர-சத்ரு ஸ்தானாதிபதி குருவோடு தொடர்புகொண்டு திசை நடந்துவதாலும் சகோதர சகோதரிகள் வகையில் ஜாதகருக்கு அதிருப்தி உண்டு. முதல் மகளை குறிப்பிடும் சுக்கிரன் பாதகம் பெற்று அமர்ந்ததாலும்  முதல் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 6 அமர்ந்து புதன் திசை நடத்துவதாலும் ஜாதகரின் முதன் பெண் மகளோடு ஜாதகருக்கு சரியான புரிதல் இல்லை.

ஒரு ஜோதிடர் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்ய எவ்வளவு முறைகளை பயன்படுதினாலும் எந்த அளவு அவற்றில் தனது திறமையை, சுய ஆய்வை, அனுபவத்தை பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவரை வெற்றிகரமான ஜோதிராக உருவெடுக்கிறார் என்பதை மறத்தல்  கூடாது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501. 

1 comment:

  1. அருமை சார். சிறப்பான பதிவு சார்

    ReplyDelete