Tuesday 19 March 2019

குழந்தைப்பேறு


குழந்தைப்பேறு என்பது இன்றைய காலத்தில் காலம் அளிக்கும் வரம் என்றால் அது மிகையல்ல. திருமணம் நடந்து ஒரு வருஷ காலத்தில் குழந்தை பிறந்துவிட்டால் அந்தக் குடும்பம் பாக்கியம் பெற்ற குடும்பம்.பொருளாதாரத்தால் சிரமப்படும் குடும்பங்கள் கூட திருமணமான அடுத்த வருடத்தில் குருவின் அம்சமான குழந்தை பிறத்துவிட்டால் அந்தக்குடும்பத்துக்கு குருவருள் இருப்பதாக ஐதீகம். குரு துணை இருந்தால் எத்தகைய சிரமங்களையும் எளிதில் கடந்துவிடலாம். அப்படி ஒருவருடத்தில் குழந்தை பிறக்கும் குடும்பங்களில் மணமுறிவு என்பது சில ஆண்டுகள் கழித்து பிறக்கும் குடும்பங்களை விட மிகக்குறைவே. இதை ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்துகொள்ளலாம். பொருளாதார காரணங்களுக்காக குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடைகிறதோ இல்லையோ அத்தகைய குடும்பங்களில் பிரிவினை அதிகம். குழந்தை பிறப்பும் சிக்களுக்கு உள்ளாகிறது. எனவே எக்காரணம் கொண்டும் குழந்தை பிறப்பை அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை திட்டமிடவே கூடாது.



மேற்கண்ட கூற்றை கடந்த காலத்தில் சென்று பார்க்கவேண்டுமெனில் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் முறைகள் அறிமுகமான 80 களுக்கு முந்தைய கால மக்களின் குடும்ப உறவு நிலையையும் தற்போதைய காலத்தில் சாதாரணமாகிவிட்ட மணமுறிவு நிலைகளையும்  ஒப்பிட்டுப்  பார்த்தாலே இக்கருத்தின் உண்மை புரிந்துவிடும். பொதுவாக குரு வலிமை குன்றியிருந்தால் பொருளாதாரத்திலோ அல்லது குழந்தை பாக்யத்திலோ  சிரமப்படுத்தும். நாம் பொருளாதார சிரமங்களை கர்ம வினை என்று எடுத்துக்கொண்டு குழந்தைப்பேறை தள்ளிப்போடாமலிருந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். கவனம் “பொருளைவிட பாக்கியம் முக்கியம்”.

கீழ்க்கண்ட ஜாதகம் ஒரு பெண்மணியுடையது.


மகர லக்ன ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் கேதுவுடேன் வக்ரமாகிவிட்ட ஆறாமதிபதி புதன் இணைந்து அந்த பாவத்தை தோஷப்படுதுகிறார்.  சுரப்பிகளை குறிக்கும் ஐந்தாமதிபதியான சுக்கிரன் கடகத்தில் நின்று அவருக்கு இடம் கொடுத்த சந்திரனும் கர்ப்பப்பையை குறிக்கும் சந்திரன் கர்ப்பப்பையை குறிக்கும் 8 ஆவது பாவத்தில் அமைந்துவிட்டது ஜாதகிக்கு கர்ப்பப்பை மற்றும் சுரப்பி வகை பாதிப்புகள் உள்ளதை குறிப்பிடுகிறது. இந்த நிலையில் அஷ்டமத்தில் அமர்ந்துவிட்ட சந்திரனை அஷ்டமாதிபதியோடு இணைந்த லக்னாதிபதி சனி பார்ப்பது கர்ப்பப்பை வகை தோஷத்தை அதிகப்படுத்தும் எனலாம். பொதுவாக சனியோடு சூரியன் இணைவே ஜீவ அணுக்களின் செயல்பாட்டை குறைத்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாமதிபதியை புத்திர காரகன் குரு பார்ப்பது ஒரு நல்ல அம்சம். எனினும் அவர் பாதகாதிபதியோடு இணைந்த நிலையில் ஐந்தாமாதியை பார்பதாலும் ரத்த திசுக்களுக்கு காரகன் செவ்வாயுடன் கொழுப்பு காரகன் குரு இணைந்தாலும் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி அதன் பொருட்டு குழந்தை பிறப்பை தடை செய்யும் என்பதை அனுமானிக்கலாம். குருவுக்கு விரையாதிபத்தியமும் உள்ளதாலும் அவர் பாதகாதிபதியோடு சேர்ந்திருப்பதாலும்  இந்த ஜாதகிக்கு புத்திர பேறுக்கான வாய்ப்பு குறைவே. மேலும் செவ்வாய் கணவனை குறிக்கும் கிரகம் என்பதாலும் 7 ஆமதிபதி சந்திரன் 8 ல் மறைந்து விரையாதிபதி குருவோடு இணைந்த பாதகாதிபதி செவ்வாயின் பார்வை பெற்ற சனி 7 ஆமதிபதி சந்திரனை பார்ப்பதும் கணவன் வகையியிலும் இரத்த வகையில் உள்ள பாரம்பரிய பாதிப்பால் குழந்தை பேறு வாய்ப்பு குறைவே என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. 7 ஆமிடத்தை கணவனாகக்கொண்டு ஆராய்ந்தால் குழந்தை பிறப்பு மற்று குடும்பத்திற்கு குழந்தையின் வரவை குறிப்பிடும் 7 க்கு 5 ஆமிடமான 11 ம்,  7 க்கு 2 ஆமிடமான 8 ம் குழந்தை பிறப்பிற்கு சாதகமான நிலையில் இல்லை. ஆனால் குருவின் பார்வை 7 க்கும் 11 க்கும் உள்ளது மட்டுமே இங்கு ஒரு ஆறுதலான நல்ல விஷயம்.

ஆனால் இங்கு குருவே பாதகாதிபதி தொடர்பு பெற்ற நிலையில் அது எந்த அளவுக்கு உதவும் என்பதே கேள்வி. பாவகத்தில் ராசிக்கு 10 ல் திக்பலம் பெற்ற சூரியன் இருப்பது ராசி ஓராளவு வலுவோடு இருப்பதை குறிப்பிடுகிறது. மேலும் ஜாதகி தன முயற்சியால் சில பாக்கியங்களை அடையலாம் என்பதை அது குறிக்கிறது. ஜாதகிக்கு லக்னத்திற்கு 7 ல் நிற்கும் சுக்கிரனின் சாரம் பெற்ற சந்திரனின் திசையில் குரு புக்தியில் 1997 ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு குரு தொடர்புகொண்ட செவ்வாய் திசை 2011 ஏப்ரல் வரை உள்ளது.

ஜாதகி என்னிடம் செவ்வாய் திசையில் புதன் புக்தியில்  ஜாதகம் பார்க்க வந்தார். செவ்வாய் பாதகாதிபதி என்றாலும் அவர் பாதகத்தில் குருவோடு கூடி 5 ல் அமைந்த தனது எதிரியும் 6 ஆமதியுமான புதனின் சாரம் பெற்றுள்ளார். இவ்விடத்தில்தான் ஜோதிடர்கள் ஜாதகிக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து சொல்ல வேண்டும். இந்த ஜாதகத்தில் திசா நாதன் செவ்வாயையும் கோட்சார நிலைகளையும் கவனிக்க வேண்டும்.  செவ்வாய்க்கு விரையாதிபதி தொடர்பு சிறப்புல்லை என்றாலும் குருவோடு இணைந்த கிரகமும் குரு பார்த்த கிரகமும் சுபத்தன்மை அடையும் என்ற விதியையும் கவனிக்க வேண்டும். அதற்கு ஆட்சி வீட்டில் அமைந்த குரு உதவுவது நன்மையே என்றாலும் குரு+செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு இருப்பதால் இயற்கையாக இல்லாமல் செயற்கையாகவும் வழிபாடுகள் மூலமாகவும் புத்திர பாக்கியதிற்கான  வாய்ப்பை அதிகமாக முயற்சியின் பேரில் மேற்கொள்ள வேண்டும். பரிகாரங்கள் எந்த அளவு பலனளிக்கும் என்பதை ஒரு ஜோதிடர் எடைபோட்டு வைத்திருப்பது தேர்ந்த ஒரு ஜோதிடருக்கு மிக அவசியம். அதற்கு அனுபவமும் தேர்ந்த ஜோதிட அறிவும் கைகொடுக்கும்.

இந்த ஜாதகத்தில் குரு ஆட்சியில் இருந்தாலும் பாகை அடிப்படையில் பார்த்தால் திசா நாதன் செவ்வாயின் பாகை 25.24 , குருவின் பாகை 25.55  மற்றும் 6 ஆம் பாவத்தில் அமைந்த லக்னாதிபதி சனியின் பாகை 25.14 ஆகும். இதனால் பாகை அடிப்படையில் நெருக்கமாக அமைந்திருக்கும் இம்மூன்று கிரகங்களும் ஒருங்கிணைந்து செயல்படும் எனலாம். இதில் குரு மற்ற இருவரை விட அதிக பாகை சென்றுள்ளது மற்ற இருவரை விட வலிமையானவர் என்பதையும் தனது சுபாவ சுபத்துவத்தை பாகை அடிப்படையில் தன்னோடு நெருங்கியுள்ள திசா நாதன் செவ்வாய்க்கு வழங்குவார் எனலாம். குரு இப்படி செவ்வாயைவிட அதிக பாகை சென்றுள்ளதால் செவ்வாயின் பாதகாதிபத்திய தோஷத்தின் தீவிரத்தை பெருமளவு குறைத்துவிடுவார் எனலாம்.

இப்படி குருவால் சுபத்துவம் பெற்ற திசா  நாதன் செவ்வாய் புத்திர பாக்கியத்தை தரவேண்டியவராகிறார். குரு+செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு இருப்பதால் முதலில் வழிபாடுகளையும் அதோடு மருத்துவத்தின் உதவியோடு செயற்கை முறைகளிலும் முயற்சிகளை மேற்கொள்ள தம்பதிகள் இருவருக்கும் பரிந்துரை வழங்கப்பட்டது.

3 ஆம் பாவம் செயற்கை முறை கருத்தரிப்பை குறிக்கும் பாவமாகும். 3 ம் பாவம் 5 ஆவது பாவத்திற்கு லாப பாவமாக வருவதால் 3 ஆம் பாவம் சாதகமாக இருந்து லக்னத்திற்கு 2, 3, 5, 11 தொடர்புடைய திசா புக்திகளில் புத்திர பேருக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படும். இதில் செயற்கை முறை கருத்தரிப்பு எனில் 3 ஆவது பாவ தொடர்புகளை ஒரு ஜோதிடர் கவனமாக கவனிக்க வேண்டும். 3 ஆவது பாவம் சிறப்புற்று செயற்கை முறை கருதரிப்பிற்கு உரிய ராகுவானவர் குரு தொடர்போ அல்லது குருவிற்கு திரிகோணத்திலோ அமைந்திருந்து கோட்சாரத்திலும் அத்தகைய குரு-ராகு தொடர்பு ஏற்பட்டால் செயற்கை முறை கருதரிப்பிற்கு பரிந்துரை செய்யலாம். அப்படி அமையாவிட்டால் செயற்கை முறை கருத்தரிப்பு முயற்சி பலனற்றதாகிவிடும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்றைக்கு செயற்கை முறை கருத்தரிப்பிற்கு சில லட்சங்கள் செலவாகிறது என்பதை கவனிக்கவும். ஜோதிடர்கள் இதை சரியாக எடைபோடாவிட்டால் குழந்தைக்காக சொத்தை விற்று முயற்சி செய்யும் தம்பதிகளின் நிலை மேலும் பரிதாபத்திற்கு உள்ளாகிவிடும் என்பதை கவனித்து பலன் சொல்ல வேண்டும். 

ஜாதகிக்கு  குருவால் சுபம் பெற்ற செவ்வாய் திசையில் ஐந்தாமதிபதி சுக்கிரனின் புக்தியில் ஐந்தில் நின்ற புதனின் அந்தரத்தில் கோட்சார குரு லக்னத்திற்கு இரண்டில் கும்பத்தில் தனது சுய சாரமான பூரட்டாதியில் நின்றபோது திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆண் மகவு பிறந்தது.

ஐந்தாவது பாவகப்புள்ளி சந்திரனாகி அது சூரியனின் வீட்டில் நிற்பதாலும் குரு ஆறாமதிபதி புதன் சாரம் பெற்று புதன் சந்திரனின் நட்சத்திரத்தில் நிற்பதும் பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் பாரம்பரிய வியாதியை கொண்டு பிறக்கும் என்பதை குறிக்கிறது. தந்தைக்கு சர்க்கரை வியாதி உண்டு. இந்நிலையில் செயற்கை முறையில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை காரணமாக இல்லாவிட்டால் குழந்தைக்கு இவ்வமைப்பை சொல்ல வேண்டியதில்லை.

மேற்படி ஜாதகம் K.P முறையில் ஆய்வு செய்யப்பட்டது. 

அடுத்த பதிவு

யோகமும் தோஷமும் இரட்டை பிறவிகளா?

அதுவரை

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 07871244501

1 comment:

  1. அய்யா வணக்கம் .
    குழந்தை பேறு ஜோதிட விளக்கம் மிக சிறப்பாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருந்தது .
    தங்கள் ஜோதிட ஆய்வு பாராட்டுக்குரியது
    வாழ்த்துக்கள் .தங்கள் ஜோதிட ஆய்வு தொடரட்டும்

    அன்புடன்
    பழனியப்பன் , மஸ்கட்

    ReplyDelete