Thursday 12 September 2019

அடிக்கிற கை அணைக்குமா?


யோகம் என்பது நாம் முற்பிறவிகளில் செய்த புண்ணிய செயல்களின் மூலமாக இறைவன் நம் கணக்கில் வைத்துள்ள வரவு எனலாம். இப்பிறவியில் அதை நல்வழியில் செலவு செய்வது நமது பிறவிப்பயனை கடந்து இறைவனை நெருங்க உதவும். தோஷம் என்பது நாம் முற்பிறவிகளில் சேர்த்துவைத்த கடனுக்கு ஒப்பானதாகும்.  நம்மிடமுள்ள தனத்திற்கு தக்கபடி வாழ்ந்து கடனை அடைத்து நிம்மதி பெறுவது சிறப்பு. அதை விடுத்து நம்மிடம் உள்ள இருப்பைவிட அதிக கடனை ஏற்படுத்திக்கொண்டு அதை அடைக்க வழி தெரியாமல் குறுக்கு வழிகளை கடைப்பிடித்து பாவக்கடனை அதிகப்படுத்திக்கொள்பவர்களுக்கு அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை இந்தப்பிறவியிலேயே அனைத்தையும் பிடுங்கிசெல்ல வருவாய்துறை அலுவலர்கள் வந்து சோதிப்பது போல் இறைவன் நம்மை சோதிக்கிறான்.



ஒரு கிரகம் ஒரு யோகத்தை தரக்கூடிய நிலையில் ஜாதகத்தில் ஒரு பாவத்தில் அமைகிறது என்றால் அதன் அமைவு மற்றொரு பாவத்திற்கு, கிரகத்திற்கு பாதிப்பை தரும் நிலையில் இருக்கலாம். எனவே ஒவ்வொரு கிரக அமைவிற்கும் நல்ல பலன்கள் மட்டுமல்ல தீய பலன்களும் ஜாதகத்தில் ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஒளியை உமிழும் ஒரு பொருள் தனித்திருந்தால்  அதாவது சுயம்புவாக இருந்தால் அதற்கு நிழல்கள் இருக்காது. ஆனால் அந்த ஒளியை நம்பி செயல்படும் பொருள்கள் ஒளியை நோக்கிய திசையில் பிரகாசத்தையும் மறுபுறம் நிழலையும் கொண்டிருக்கும். இங்கு ஒளி ஒளிவடிவான இறைவன் எனக்கொண்டால் நாமெல்லாம் சுய ஒளியற்ற, அந்த ஒளிப்பிழம்பான இறைவன் அருளால் வாழும் உயிர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில் சுயம்புவான இறைவனுக்கு கர்மங்கள் கிடையாது.

நமக்கு சுய ஒளி இல்லாததால் நமது கர்மங்களை இறைவனை நோக்கிய நிலையில் அமைத்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி பெறலாம். அவ்வாறின்றி தீய (நிழல்) கர்மங்களை நோக்கிய நிலையில் நமது வாழ்வை செலுத்தினால் நமக்கு கிடைக்கும் ஒளியையும் நமது தீய கர்மங்கள் முறியடித்து நம்மை வாழத்தகுதியற்றதாக  மாற்றிவிடும்.

பின்வரும் ஜாதகம் ஒரு பெண்னுடையது.


தனுசு லக்ன ஜாதகத்தில் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனையில் உள்ளது. லக்னத்திற்கு இரண்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது. இது செல்வ வளமை மிக்கவர்  ஜாதகி என்பதை குறிப்பிடுகிறது. சூரியன் 7 ஆமிதிபதி புதனுடன் இணைந்து பத்தாமிடத்தை பார்ப்பது சிறப்பு. 2 ஆமதிபதியும் ஜீவன காரகனுமாகிய சனி சுக்கிரன் சாரம் பெற்று சுக்கிரனும் இரண்டாமிட தொடர்பு கொண்டது யோகமே. விரைய ஸ்தானத்தில் குரு பரிவர்த்தனையில் இருப்பது ஒருவகையில் தன யோகத்தை குறிக்கும். விரையத்திற்கு குறைவில்லா தனவரவை குரு தருவார் எனலாம். 10 ஆமிடத்தை 10 ஆமதியோடு இணைந்த சூரியன் தர்ம கர்மாதிபதி யோகம் கொண்டு பார்ப்பதால் ஜாதகி சுய தொழில் செய்கிறார்நீச சனி சாரம் பெற்ற சூரியன் சனி குறிப்பிடும் இரும்பு தொடர்புடைய தொழில் செய்கிறார். லக்னாதிபதி நீச சனி சாரம் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.   

7 ஆமதிபதி புதன் நீச நிலை பெற்று செவ்வாயும் நவாம்சத்தில் நீசம் பெற்று அமர்ந்தது தோஷமே. உபய லக்னத்திற்கு ஏழாமதிபதி வலுகுறைவது ஒருவகையில் நன்மை எனும் சூழலில் ஏழாமதிபதி லக்னாதிபதியான குருவின் பார்வையை பெறுவது கணவரை இந்த ஜாதகம் தாங்கிப்பிடிக்கிறது என்றாலும் செவ்வாய் நவாம்சத்தில் நீசம் பெற்றது கணவர் போதுமான திறமை அற்றவர் என்பதை குறிப்பிடுகிறது. இவர்கள் இரும்பு வியாபாரம் செய்கிறார்கள். இரண்டாமதிபதி சனி 5ல் செவ்வாய் வீட்டில் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நீசம் பெற்ற நிலையில் சுக்கிரன் இரண்டில் செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்ததாலும் செவ்வாய்க்கு சனி திரிகோணம் பெற்றதாலும் செவ்வாய்க்கும் சனிக்கும் ஏற்பட்ட தொடர்பால் இவர்கள் இரும்புக்கடை நடத்துகிறார்கள். ஏழாமதியைவிட லக்னாதிபதி வலு கூடியதால்  ஜாதகிதான் தொழிலை நிர்வகிக்கிறார். ஏழாமதிபதி வலு குறைவது தோஷமே என்றாலும் அந்த தோஷமே ஜாதகி நிர்வாகியாக மாற வழி செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

கீழே மற்றுமொரு பெண்ணின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் 7 ல் நின்ற ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது. 7 ல் லக்னாதிபதி சந்திரனோடும் மாங்கல்யகாரகன் செவ்வாயோடும ராகு நிற்பது கடும் தோஷமே. நவாம்சத்தில் 7 ஆமதிபதி சனி, மாங்கல்ய காரகன் செவ்வாய் ஆகியோர் நீசமானது தோஷத்தை உறுதி செய்கிறது.  7 க்கு பாதகத்தில் குரு நிற்கிறார். இந்த அமைப்பால் குழந்தை பிறந்ததும் 7 ஆமிட தோஷம் செயல்படும்.  குரு திசையில் ஜாதகிக்கு மகன் பிறந்தான். குரு திசை மாங்கல்யத்தையும் பறித்தது. 7 ஆமிடம் தோஷம் பெற்று, 7 ஆமதிபதியும் பாதகத்தில் 11 ல் அமைந்து, 7 க்கு பாதகத்தில் அமைந்த 6 ஆமதிபதி குரு பார்வையை 7 ஆமதிபதி சனி  பெற்றது ஆகியவை தோஷம் வெளிப்படும் காலகட்டத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு லாபத்தில் குரு நின்று தொடர்பு ஸ்தான அதிபதியும் ஜீவன காரகனுமான சனியை பார்க்கிறார். எனவே குரு மூலம் ஜாதகிக்கு லாபமும் உண்டு என்பது புலனாகிறது. லக்னத்திற்கு திரிகோணத்தில் குரு அமைந்ததும் சனிக்கு திரிகோணத்தில் புதன் சூரியன் அமைந்ததும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடதிற்கு திரிகோணத்தில் சூரியன் புதன் அமைந்ததுமான அமைப்பால் ஜாதகிக்கு அரசுப்பள்ளி ஆசிரியையாக வேலை கிடைத்தது.

முன்பத்தியில் கூறப்பட்ட அமைப்பால் குரு குடும்ப வாழ்வை பறித்தார். ஆனால் அதே குரு ஜாதகியின் வாழ்வை தாங்கியும் பிடிக்கிறார் என்பது நம்பக்கூடிய உண்மை. முந்தைய அமைப்பு தோஷம் பிந்தைய அமைப்பு யோகம். பெரும்பாலும் பாவத்துவ அமைப்பை பெற்ற கிரகங்கள் முதலில் பாதகத்தை செய்துவிட்டு பிறகு பிறகு யோகம் செய்யும் அமைப்பால் பிற்காலத்தில் யோகத்தையும் செய்துவிடுவதை பார்க்க முடிகிறது. ஜாதக அமைப்பால் இது மாறுபட்டும் செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க. கீழே வரும் ஜாதகம் அத்தகையது.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்ன ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் இரண்டாமதிபதி செவ்வாயோடு பாக்ய -விரையாதிபதி புதனும் பாதகாதிபதி சூரியனும் நிற்கிறார்கள். ஜாதகருக்கு லாபத்தில் நிற்கும் சந்திர திசையில் உச்ச குருவின் பூரட்டாதி-4 சாரம் பெற்ற கேது புக்தியில் திருமணம் நடந்தது. அடுத்து வந்த சூரியனுடன் நிற்கும் செவ்வாய் திசையில் ஜாதகர் அரசியலில் ஈடுபட்டு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். சனிக்கு எந்த கிரக தொடர்பு ஏற்படுகிறதோ அந்த கிரகத்திற்கு தனது காரகத்துவமான உண்மை, கடின உழைப்பு, நேர்மை என்ற நற்பண்புகளை சனி வழங்குவார்.  இங்கு சூரியன் வீட்டில் சனி நிற்பதாலும் சூரியனுக்கு 1௦ ல் சனி நிற்பதாலும், சனி சாரத்தில் சூரியன் நிற்பதாலும் ஜாதகர் தனது பதவி காலத்தில் பெருமளவு நேர்மையுடன் ஊருக்கு சில நல்ல காரியங்களை செய்து கொடுத்தார்.

ஆனால் சூரியனும் சனியும் மேற்சொன்ன அதே அமைப்பினால் பாதகங்களையும் செய்ய உரிமை பெற்றவர்களாயிற்றே. அதன்படி 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற குடும்ப காரகன் குருவின் பார்வை பெற்ற இரண்டாமிட கிரகங்கள் குடும்ப வாழ்வை சிதறடித்தது. அதே செவ்வாய் திசையின் இறுதிப்பகுதியில் 2011 ல் ஜாதகரின் மனைவி ஜாதகரிடமிருந்து விவாகரத்து பெற்று விலகிச் சென்றார்.

இதிலிருந்து நாம் அறிய வருவது,

யோகத்தை செய்யும் கிரகங்கள் பாதகத்தையும் செய்யும்.

ஒரே மனிதனுக்குள் மாறுபட்ட குணங்கள் இருப்பதைப்போல் கிரகங்களும் மாறுபட்ட திசா புக்தி , கோட்சாரங்களில் தங்களது செயல்களில் மாறுபாட்டை தருகின்றன.

அதீத யோகம் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அதன் தாக்கமாக மற்றொரு விஷயத்தில் பாதிப்பு உறுதியாக இருக்கும். பொதுவாக ஒருவரது வாழ்வை பார்த்து மலைத்து நிற்கும் நாம் அதன் பின்னணியில் அவர் இழந்த இழப்புகளை கவனத்தில் கொள்வதில்லை.

அடுத்த வாரப்பதிவு

“ரகு VS ராகு”

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி:  08300124501.



No comments:

Post a Comment