Saturday 11 April 2020

சப்தாம்சத்தை கையாள்வது எப்படி?




ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் பாவங்கள் எப்படி திசா புக்தி காலங்களில்  ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதன் ஆதார சுருதியை கண்டுபிடித்துவிட்டால் பலன் சொல்வதில் துல்லியம் தன்னால் வந்துவிடும். இப்படி கிரகங்களும் பாவங்களும் ஒரு குறிப்பிட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்குமா என கண்டுப்பிடிக்க ஷட்பலம், அஷ்டவர்க்கம் போன்ற பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டாலும் அதற்கான வர்க்கச் சக்கரங்களைகொண்டு ஆராய்ந்து தெளிவது மிகச் சரியாக இருக்கும் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அதற்காக ஏறத்தாழ 60 க்கும் மேற்பட்ட வர்க்க சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் எப்படி கணக்கிடுவது என்பது ஒரு புறமிருக்க மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் குடும்பதவர்களுக்கே அன்றைய ஜனன நேரம் மிகச் சரியாக கணித்து வைத்திருந்ததால் சாமான்யனுக்கு அவை பயன்படவில்லை. எனவே ராசி மற்றும் நவாம்சம் இவற்றோடு கூடுதலாக திரேக்காணம் போன்ற ஒரு சில வர்க்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றை கைவிட்டுவிட்டனர். ஜோதிஷ மகரிஷி பராசரர் இப்படிப்பட்ட பல்வேறு வர்க்கங்களையும் ஆராய்ந்து தெளிந்து அவற்றில் 16 வர்க்கங்களை மட்டும் கடைபிடித்து வாழ்வின் அணைந்து விஷயங்களுக்கும் விடை காணலாம் என வகைப்படுத்தி தந்துள்ளார். இவையே சோடசாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 16 வகை வர்க்க சக்கரங்களில் ஒருவரின் புத்திர பாக்கியத்திற்கு உரிய சப்தாம் சத்தைக்கொண்டு பலன் காண்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம். கணினியில் சிறந்ததொரு ஜோதிட மென்பொருளைக்கொண்டு இந்த  சக்கரங்களை வினாடிகளில் அமைத்துவிடலாம் என்றாலும் இதற்கான நல்ல நூல்களும் தற்போது வரத்துவங்கியுள்ளன. அவற்றைகொண்டு சோடச வர்க்கங்களின் அடிப்படையை தெரிந்துகொண்டால் இவற்றைக்கொண்டு ஜெனன நேரத் தவறுகளைக்கூட சரி செய்ய இயலும். 

கீழே நீங்கள் காண்பது ஒரு பெண்ணின் ஜாதகம்.


ஜாதகி 1989 துவக்கத்தில் பிறந்து 2008 இறுதியில் திருமணம் செய்தவர். 11 வருடங்கள் குழந்தையின்மையால் குடும்ப பிரிவினை வரை சென்றவர். தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகம். லக்னாதிபதி குரு 6 ஆமிடத்தில் வக்கிர நிலை பெற்று 6 ,11 ஆமதிபதி சுக்கிரனோடு பரிவர்த்தனையில் உள்ளார். ஒரு ஜாதகத்தில் புத்திர காரகன் குரு வக்கிரமானால் புத்திர வகையில் தடை தாமதங்கள் மற்றும் பாதிப்புகள்  ஏற்படும். 5 ஆமதிபதி செவ்வாய் 5 க்கு விரையம் பெற்று அமைந்துள்ளதும் புத்திர வகைக்கு சிறப்பல்ல. குடும்பத்திற்கு புது வரவுகளை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் பாதகாதிபதி புதன் மாந்தியுடன் இணைந்து அமைந்துள்ளதும், 2 ஆமதிபதி சனி 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமைந்ததும் ஒரு வகை புத்திர தடையே ஆகும். பெண்ணுக்கு 9 ஆமிடமான பாக்ய ஸ்தானமே முக்கிய புத்திர ஸ்தானமாகும். 9 ல் கேது அமைத்துள்ளதும் புத்திர தடையை குறிப்பிடுகிறது. ஆண்-பெண் இருவருக்கும் உயிரணு உற்பத்திக்கு காரக கிரகம் கால புருஷ 5 ஆமதிபதி சூரியனாகும். சூரியன் சனியோடு சேர்ந்தால் உயிரணு உற்பத்தியில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். கர்ப்பப்பையை குறிப்பிடும் 8 ஆம் பாவத்திற்கு பாதகாதிபதி புதனின் பார்வை விழுகிறது. கர்ப்பப்பைக்கு காரக கிரகம் சந்திரன் சனியோடு சேர்ந்து உள்ளதால் ஜாதகிக்கு கற்பப்பை சார்ந்த விஷயங்களால் புத்திரப்பேறு தடைபட வேண்டும். ஜாதகி கர்ப்பப்பை சார்ந்த பாதிப்புகளால் குழந்தை பிறப்புக்கு குறைந்த வாய்ப்புள்ளவர் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டவர்.   சுக்கிரனோடு பரிவர்தனைக்குப்பின் லக்னத்தில் குரு வந்து அமர்வது மட்டுமே ஒரு நல்ல அமைப்பாகும். இதனால் குருவின் பார்வை  5,7,9 பாவங்களில் பதிகிறது. ஜாதகிக்கு தற்போது அஷ்டமாதிபதியான சந்திர திசையில் சனி புக்தி நடக்கிறது.  சந்திரன் லக்னத்திற்கு 6, 11 க்குரிய சுக்கிரனின் பூராடம்-1 ல் நிற்கிறது. சனி கேதுவின் மூலம்-4 ல் நிற்கிறது. இந்த நிலையில் தற்போது புத்திரப்பேறுக்கான வாய்ப்புகளை பார்த்தால் மிகக்குறைவாகவே தெரிகிறது. குரு லக்னத்தில் இருப்பது ஒரு நம்பிக்கையை தருகிறது அவ்வளவே.

தற்போது புத்திர பாவத்திற்கு ஆராய வேண்டிய சப்தாம்ச சக்கரத்திற்கு வருவோம். சப்தாம்ச சக்கரத்தில் 7 ஆவது பாவத்தையும் குருவையும் பிரதானமாகக்கொண்டு குழந்தைப்பேறை ஆராய வேண்டும். ராசிச்சக்கர 5 ஆமதிபதி செவ்வாய் சப்தாம்சத்தில் குரு பார்வை பெற்று வர்கோத்தமம் பெற்றுள்ளது மிகச் சிறப்பு.    சப்தாம்ச சக்கரத்தில் 5 ஆமதிபதி சுக்கிரன் 7 ஆமிடத்தில் நிற்பதும் சிறப்பே. சப்தாம்ச குரு ராசியில் 9 ஆம் பாவத்தில் உள்ள கேதுவுடன் இணைந்துள்ளார். இதனால் புத்திரத்தடைக்கு கேதுவினால் ஏற்படும் தோஷம் கோட்சாரத்தில் குருவோடு கேது இணைவுபெறும்போது நீங்க வேண்டும் என்பது விதி. குரு வக்கிர கதியில் உள்ளதால் கேதுவின் தோஷத்தை கட்டுப்படுத்தும் தகுதி குருவிற்கு உண்டு. ஜாதகிக்கு சப்தாம்சத்தில் குரு வீட்டில் குரு  பார்வை பெற்று திசை நடத்தும் சந்திர திசையில் சப்தாம்ச பாக்யாதிபதி சனியின் புத்தியில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

கீழே இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஜாதகிக்கு ராகு திசையில் சுய புக்தியில் சுக்கிரன் அந்தரம் நடக்கிறது. ராகு 5 க்கு விரையத்தில் உச்ச நிலையில் அமைந்துள்ளார். இது புத்திரப்பேறுக்கு சிறப்பல்ல. அந்தர நாதன் சுக்கிரன் 5 ஆவது பாவத்தில் அமைந்துள்ளது மட்டுமே தற்போது புத்திர பாக்கியத்திற்கு தொடர்பை  ஏற்படுத்துகிறது. 2 ஆவது குழந்தை பாவமான 7 ல் சந்திரன் அந்தர நாதன் சுக்கிரனின் பூரம்-2 ல் நிற்கிறது.   மேலும் 2 ஆவது குழந்தை என்பது 7 ஆவது பாவம் என எடுத்துக்கொண்டால் 7 க்கு லாபத்தில் மிதுனத்தில் அந்தர நாதன் சுக்கிரன் அமைந்துள்ளார். ஆனால் திசா புக்தி நாதர்களை மீறி அந்தர நாதனால் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தர நாதன் சுக்கிரன் மேல் தற்போது கோட்சார ராகு நிற்பது இதை உறுதி செய்கிறது. சுக்கிரன் சூரியனைவிட 5 பாகைகள் முன்னாள் சென்று சூரியனால் குறைவான அஸ்தங்க தோஷத்தை பெறுகிறார். ராகு 7 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் ரோஹிணி-1 ல் நிற்கிறது. இதனால் ராகுவிற்கு 7 ஆம் பாவ தொடர்பு ஒரு வகையில் ஏற்படுகிறது. தற்போது சப்தாம்ச சக்கரத்திற்கு வருவோம்.

சப்தாம்சத்தில் திசா நாதன் ராகு லக்னத்திற்கு 9 ல் நிற்கிறது. ராகுவின் சார நாதன் சந்திரன் லக்னத்திற்கு 8 ல் ராகுவிற்கு விரையத்தில் நிற்கிறது. சந்திரனுக்கு 7 ல் மிதுனத்தில் மாந்தி நிற்கிறது. அந்தர நாதன் சுக்கிரன் 7 ஆம் பாவத்தில் நிற்கிறது. இந்நிலையில் கருத்தரிப்பது அந்தர நாதன் சுக்கிரனின் நிலையால் மட்டுமே ஏற்படும். அப்படி கருத்தரித்தால் அக்குழந்தையின் உயிருக்கு பாதிப்பை ஏற்படும் என்பது கோட்சாரத்தில் ஜனன சுக்கிரனின் மேல் தற்போது நிற்கும்  ராகுவாலும் சப்தாம்சத்தில் சந்திரனுக்கு 7 ல் நிற்கும் மாந்தியாலும் தெளிவாக தெரிகிறது. இந்த ஜாதகிக்கு 2 ஆம் புத்திரம் என்பது ராகு திசை சுய புக்தி முடிந்து சப்தாம்சத்தில் 11 ஆம் பாவதிலிருந்து  7 ஆம் பாவத்தை பார்க்கும் குரு புக்தியில் தான் ஏற்படவேண்டும். இந்நிலையை ஜாதகிக்கு அறிவுறுத்தி இருந்தாலும் ஜாதகி அதை அலட்சியப்படுத்தி கருவுற்றார். சில வாரங்களுக்குப்பிறகு குழந்தை செயல்பாட்டில் இல்லை என மருத்துவர்கள் கூற கருவை கலைத்தார். கிரகங்கள் தயவின்றி எதுவும் கிடைக்காது. அதுவும் எப்போது கிடக்குமோ அப்போதுதான்  கிடைக்கும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.


அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

No comments:

Post a Comment