Friday 4 September 2020

நிகழ்நிலை வகுப்புகள் ஒரு ஜோதிடக்கண்ணோட்டம்

 


இன்றைய மாணவர்களை நிகழ்நிலை வகுப்புகள் (Online Classes) பாடாய்ப்படுத்துகிறது. ராகு-கேதுக்கள் தங்களது உச்ச வீட்டில் நிலைகொள்ளும் இன்றைய காலத்தில், காலத்திற்கேற்ற நவீனத்தை நோக்கி உலகை நகர்த்திச்செல்ல வைப்பவை இந்த சர்ப்பக்கிரகங்கள்தான். இவை இல்லாவிட்டால் உலகம் தனது இருப்பை மாற்றிக்கொள்ளாமல் முன்னேற்றமின்றி பின் தங்கிவிடும். அதிலும் ராகு, கலியின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய முனிவர்கள் தமக்கு முன்னேற்றம் எதுவும் வேண்டாம். உடுத்த ஒரு முழ துணிகூட வேண்டாம் என்று வைராக்கியத்துடன் ராகுவை புறந்தள்ளி மனதை இறையில் நிறுத்தி தவமியற்றினர். ஆனால் இந்தக்காலத்தில் இவை எல்லாம் ராகுவிடம் எடுபடாது.ராகு-கேதுக்கள் ஆதிக்கம் செலுத்தும் கணினி மென்பொருள் சார்ந்த துறையினர் வீட்டிலிருந்தே தங்களது பணியை தற்போது செய்து வருகின்றனர். இன்று மாணவர்கள் நிகழ்நிலை வகுப்புகள் மூலம் தங்கள் கல்வியை தொடரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காரணம், கால புருஷனுக்கு கல்வி பாவமான கடகத்திற்கு விரையத்தில் வித்யா காரகன் புதனின் வீட்டில் அமர்ந்த ராகு இந்நிலையை உருவாக்கினார். இப்போது ராகு-கேதுக்கள் நகர்ந்துவிட்டாலும் கடகத்திற்கு பாதக ஸ்தானமான ரிஷபத்தில்தான் ராகு நிலைகொள்கிறார். இதனால் ராகு குறிக்கும் நிகழ்நிலை வகுப்புகள் போன்ற நவீனங்களை கைக்கொள்ளாவிட்டால் உலக அளவிலேயே கல்வி பாதிப்படையும். இது காலத்தின் கட்டாயம். இதை ஜோதிட ரீதியாக யார் சிறப்புற பயன்படுத்திக்கொள்வர். யார் பாதிக்கப்படுவர் என்பதற்கான வழிகாட்டல்தான் இப்பதிவு.


மேற்கண்ட மக நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்த மாணவன் தற்போது சூரிய திசையில் உயர்கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் தனது கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளார். ராகு சூரியனின் சாரத்தில் உத்திராடம் முதல் பாதத்தில் நிற்கிறது. இவருக்கு தற்போது நிகழ்நிலைக்கல்வி வகுப்புகள் எடுக்கப்படுகிறது. உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் நீசம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். லக்னதிற்கும் ராசிக்கும் கோட்சார குருவின் பார்வை விலகுகிறது. உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் ஜனன கால ராகு நிற்பதால் இவருக்கு நிகழ்நிலை கல்வியை உள்வாங்குவதில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் கோட்சார ராகு,செவ்வாயின் மிருக சீரிச நட்சத்திரத்தை கடந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு வரும் காலம் இது சரியாகிவிடும். அதற்குள் நிகழ்நிலை வகுப்புகளின் ஆதார சுருதியை ஜாதகர் அடையாளம் கண்டிருப்பார். ஜாதகருக்கு இவ்வித வகுப்புகளின் ஆரம்ப காலத்தில் மட்டுமே தடுமாற்றமிருக்கும். காரணம் கோட்சார ராகு உயர் கல்வியை குறிக்கும் 9 க்கு விரையத்தை குறிப்பிடும், 8 மற்றும் 1 க்குரிய செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும் தற்காலம் ஜாதகரின் கிரகிப்புத்திறனில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்திற்கு கோட்சார ராகு வந்ததும் நிலை மாறிவிடும். காரணம், எதையும் தூண்டிவிடக்கூடிய ராகு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் செல்லும்போது ஜாதகரின் கிரகிக்கும், புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவார். ஜனன காலத்தில் சந்திரனின் திரிகோணத்தில் ராகு நிற்பதால், கோட்சாரத்தில் சந்திரனின் சாரத்தில் செல்லும்போதும் சந்திரனோடு ஒருங்கிணைந்து செயல்படுவார்.

கீழே மற்றொரு ஜாதக அமைப்பு.

இந்த மாணவன் தற்போது பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரிக்கு செல்லும் நாளை எதிர்நோக்கியுள்ளான். இந்த மாணவனுக்கு தற்போது ராகு, திசை புதன் புக்தி நடக்கிறது. உயர் கல்வி பாவத்தில் குரு உச்சம் பெற்று வக்கிரமாகி வலு குன்றியுள்ளார். ஆனால் 9 ஆம் அதிபதி சந்திரன் தனது சுய சாரம் திருவோணம்-4 ல் நின்று தனது பாவத்தை பார்க்கிறார். இதனால் 9 ஆம் பாவம் வலுவடைகிறது. திசா நாதன் ராகு 9 ஆமதிபதி சந்திரனின் ரோகிணி-2ல் நிற்கிறார். சுய சாரம் பெற்ற சந்திரனும், சந்திரனின் சாரம் பெற்ற ராகுவும் இப்போது ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். ஆனால் சந்தினுக்கு வீடு கொடுத்த சனி உயர்கல்வி பாவமான கடகத்திற்கு 12 ல், லக்னத்திற்கு 8ல் வக்கிரம் பெற்று மறைந்த நிலையில் மாணவனின் உர்யர் கல்வியில் தடைகளை ஏற்படுத்துவார். புத்தி நாதன் புதன்,உயர்கல்வி பாவமான 9 க்கு விரைய பாவாதிபதியாகி, 9 ஆம் பாவாதிபதி சந்திரனுக்கு விரையத்தில் நிற்பது இதை உறுதி  செய்கிறது. ஜனன காலத்தில் 8 ஆமிடத்தில் நின்ற சனி, கோட்சாரத்தில் ஜனன சந்திரன் மேல் நிற்பதிலிருந்து இதனை புரிந்துகொள்ளலாம். எனினும் கோட்சார குரு, சனியோடு இணைந்து 9 ஆம் பாவத்தை பார்ப்பதால் ஓரளவு சமாளிப்பார் எனலாம். இந்த நிலையில் இந்த மாணவனுக்கு நிகழ்நிலை வகுப்புகள் புரிபடாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். இத்தகையோருக்கு நேரடி வகுப்புகள் மட்டுமே பலனளிக்கும். அதிலும் பயிற்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்கப்படும் வகுப்புகள் (Practical classes) மட்டுமே பெரிய அளவில் உதவும். 

கீழே மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.

இந்த மாணவன் தற்போது புதன் திசை சுக்கிர புக்தியில் உள்ளான். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். ஜாதகத்தில் சந்திரனும் சனியும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இப்போது கோட்சார ராகு ரிஷபத்தில் வந்து நிற்கிறார். சனியின் இடத்தில் பரிவர்த்தனையாகி வரும் சந்திரன், ராகு சனிக்குத்தரும் பாதிப்பை தான் வாங்கிக்கொள்கிறார். லக்னாதிபதி சந்திரன் லக்ன பாதகத்திற்கு பரிவர்த்தனையாகி வந்து அங்கு பாதகாதிபதி சுக்கிரனோடும் கோட்சார ராகுவோடும் இணைகிறார். இதனால் சந்திரன், சுக்கிரன் ஆகிய இருவரும் கோட்சார ராகுவால் பாதிக்கப்படுவர். இந்நிலையில் ஜாதகருக்கு நிகழ்நிலை வகுப்புகள் குழப்பத்தை நிச்சயம் ஏற்படுத்தும். கோட்சாரத்தில் சிந்தனை ஸ்தானமான 5 ஆவது பாவத்தில் விருட்சிகத்திற்கு வரும் கேதுவும் ஜாதகரை குழப்புவார் எனலாம். கவனமாக இல்லாவிட்டால் நிகழ்நிலை வகுப்புகள் புரியாமையால் ஜாதகருக்கு மன உழைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை கூட உருவாகலாம். சுக்கிரனும் கோட்சார ராகுவும் சந்திரனோடு ஏற்படுத்திக்கொள்ளும் உறவால் அவ்வெண்ணம் உருவாக வாய்ப்புண்டு. இத்தகைய ஜாதக அமைப்புக்கொண்ட சில மாணவர்கள்தான் தற்போது நிகழ்நிலை வகுப்புகள் புரியாமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது ஜோதிட ரீதியாக அனுமானிக்கக்கூடிய உண்மை. ராகு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் செல்லும் காலத்திலும் நிகழ்நிலை வகுப்புகள் நீடித்தால், இந்த அபாயம் அதிகமாகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இத்தகைய மாணவர்களுக்குத்தான் மனத்தேற்றல் அவசியம். தேவைப்படின் மனநல சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம். இன்றையசூழலில் அதற்கான அமைப்புகளை அரசு ஏற்படுத்துவது நல்லது. ஆனால் இந்த மாணவருக்கு இவ்வருட இறுதியில் மகரத்திற்கு பெயர்ச்சியாகி வரும் கோட்சார குரு ரிஷபத்தையும் கடகத்தையும் பார்ப்பார். இதனால் அவை புனிதமடைகின்றன. இதனால் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஜாதகருக்கு நிகழ்நிலை வகுப்புகள் புரிதலை ஏற்படுத்தும். அதுவரை மட்டுமே ஜாதகர் தாற்காலிகமாக தடுமாறுவர்.

மீண்டும் விரைவில் மற்றொருபதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501

No comments:

Post a Comment