Sunday 9 May 2021

தத்துக்குழந்தை யோகம்!

 


மனித வாழ்வின் பொருளே இயற்கை வகுத்துள்ள நியதிப்படி நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டறிந்து அதில் வெற்றி பெற்று, பிறகு நமக்கான ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டு, நமது சந்ததியை விருத்தி செய்து, அற  வழியில் நடந்து நாம் வாழும் பூமிக்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்து, இறுதியாக நாம் வந்த இயற்கையுடன் இரண்டற மீண்டும் கலந்து விடுவதுதான். இயற்கையின் நியதியை மீறி செயல்பட்டால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகாது. அதனால்தான் இயற்கை நியதிகளுக்கு எதிராகவும் குடும்ப வாழ்வுக்கு எதிராகவும் துறவறத்தை போதித்த நமது நாட்டிலேயே தோன்றிய சமண, பௌத்த மதங்கள் தோல்வியை தழுவின. இந்து மதம் இல்லறமே நல்லறம் என்கிறது. இல்லறத்தில் இருந்துகொண்டே சமுதாயத்தொண்டு செய்ய வலியுறுத்துகிறது. இயற்கையின் நியதியில் எந்த இடத்தில் தடுமாறினாலும் வாழ்வு நிறைவானதாக இருக்காது. பொருளாதாரத்தை மட்டுமே பின்தொடர்ந்து செல்பவர்களுக்கு குடும்ப வாழ்வில் பாதிப்பிருக்கும்.. குடும்ப வாழ்வில் மட்டுமே திளைப்பவனுக்கு பொருளாதார முன்னேற்றம் குறைவு. இதில் தனி ஒருவரின் குடும்ப வாழ்வு முழுமையடைவது அவரது சந்ததி விருத்தியில்தான். அதனால்தான் குழந்தை இல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்றொரு கூற்று உருவானது. புத்திரப்பேறற்றவர்களிடம் ஆசி பெறுவது கூட பயனற்றது என்று கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் அன்றைய சமுதாயம் புத்திரப்பேறு இல்லாத ஆண் மட்டும் சந்ததி விருத்தியின் பொருட்டு இரண்டாவதாக மற்றொரு பெண்ணை மணந்து  புத்திரப்பேறை  பெறலாம் என்று பெண்ணுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்திருக்கிறது. ஏனெனில் தனது சொத்துக்காக தனது சந்ததியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஆணுக்கு இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுவரை சொத்து உரிமை ஆணுக்கு மட்டுமே இருந்ததன் பொருட்டே இத்தகைய கருத்துக்கள் எழுந்துள்ளதை உணரலாம். அத்தகைய கருத்துக்களை முன் வைத்தவர்கள் ஆண்கள் என்பதும் மற்றொரு காரணம். இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிர்ப்புகுரல்கள் எழும்பிய காலகட்டத்தில் ஒருவரது குடும்ப வாழ்வு முழுமையடைய ஒருவர் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்றொரு நிலைப்பாடு பிற்பாடு ஏற்பட்டது. இன்றைய பதிவில் நாம் சந்ததி இல்லா தம்பதியரில் தத்துக்குழந்தை அமைவது எத்தகைய ஜாதகத்தினருக்கு என்பதைப்பற்றி ஆராயவிருக்கிறோம். இது ஒரு உடலியக்கம் சார்ந்த விஷயம் என்பதால் மருத்துவ ரீதியாக ஆராய வேண்டி பாகை அடிப்படையில் இப்பதிவை அணுகியுள்ளேன்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1985 ல் பிறந்த ஒரு ஆண். இவரது ஜாதகத்தில் வீரிய ஸ்தானாதிபதி சந்திரன், விரையாதிபதி செவ்வாய், தடைகளுக்குரிய ராகு ஆகிய மூவரும் 3 பாகை நெருங்கிய நிலையில் அமைந்துள்ளனர். இப்படி வெவ்வேறு ராசிகளில் 3 பாகை இடைவெளிக்கும் அமையும் கிரகங்களும் கிரகச்சேர்க்கையாக நவீன ஜோதிடவியலில் குறிப்பாக மருத்துவ ஜோதிடவியலில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன  சந்திரனும் செவ்வாயும்  நின்ற மீனத்தின் அதிபதி குரு நீசமாகியுள்ளார். பாகை அடிப்படையில் பார்க்கையில் போக ஸ்தானாதிபதி (மூன்றாமதிபதி) சந்திரனும் வீரியத்திற்கு காரகன் செவ்வாயும் பாகை அடிப்படையில் ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்திர காரகன் குருவும் பாதக ஸ்தானத்தில் நீசம் பெற்றதால் ஜாதகருக்கு குழந்தை பெற உடலில் போதிய உயிரணுக்கள் இல்லை என்ப்பது தெளிவாகிறது. 5 ஆமதிபதி புதன் 8 ஆமிடத்திலிருந்து திசை நடத்துகிறார். இது புத்திரப்பேறுக்கு சிறப்பல்ல. மேலும் புத்திர காரகன் குரு 5 ன் விரையாதிபதி சூரியனோடு பாதக ஸ்தானத்தில் நீசம் பெற்று அமைந்த நிலையில் அலி கிரகங்களான கேது மற்றும் சனியின் 3 ஆம் பார்வையை பெறுவது கடும் புத்திர தோஷமாகும்.  ஜோதிடத்தில் 5 ஆம் பாவம் புத்திரம் என்றால் 8 ஆம் பாவம் தத்துக்குழந்தையை குறிக்கும் பாவமாகும். இதனால் 5 ஆமதிபதி 8 ல் நின்று திசை நடத்துவதால் ஜாதகர் தத்துக்குழந்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என பார்த்தால் தத்துக்குழந்தையை குறிக்கும் 8 ஆமதிபதி நீசமானதால் ஜாதகருக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்கும் எண்ணமே இல்லை. மனைவிக்கு புத்திர பாக்கியம் உண்டா என ஆராய்ந்தால் 7 ஆமிடம் பாதிக்கப்பட்டு 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சந்திரனுடன் நெருங்கிய பாகையில் அமைந்து இவ்விருவருக்கும் நெருங்கிய பாகையில் ராகு அமைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதனால் இவரது மனைவிக்கும் புத்திர பாக்கியத்தில் பாதிப்பு உள்ளது தெளிவாகிறது. இவருக்கு புத்திர பாக்கியம் தத்து உட்பட அனைத்து வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகரும் ஒரு ஆண்தான் 1976 ல் பிறந்தவர். இவருக்கு சந்திரன் 6 ல் நீசமாகி லக்னாதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று திசை நடத்துகிறார். 5 ல் ராகு உள்ள நிலையில் ஜாதகருக்கும் புத்திரப்பேறு கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய ஜாதகருக்கு குழந்தை இல்லை. செவ்வாய் லக்னாதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். இங்கு பரிவர்த்தனை 1 & 11 என ஆகிறது ஒரு சிறப்பு. பரிவர்த்தனைக்குப்பின் செவ்வாய் புதனின் பாகை 21.21 க்கு வந்து 5 ஆமதிபதியான உச்ச சுக்கிரனின் சாரம் பரணி-3 பெறுகிறார். மேலும் செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு-கேதுக்களும் நெருங்கிய பாகையிலே அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இவற்றை பாகை வரிசைப்படி கிரகச் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். ஜாதகத்தில் பரிவர்த்தனை மூலம் உச்ச சுக்கிரன் தொடர்பு பெற்று வலுவடைந்த செவ்வாய்  நீச சந்திரனை 8 ஆம் பார்வையாக பார்த்து  நீச பங்கப்படுத்துகிறார். 5 ல் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு சுக்கிரனின் உச்ச வலுவை தனதாக்கிக்கொள்கிறார். சூரியனில்  அஸ்தங்கமாகாமல்  குருவோடு இணைந்து 5 ஆமதிபதி சுக்கிரனின் உச்ச வலுவை ஏற்றுக்கொண்ட செவ்வாய் திசா நாதன் சந்திரனை பார்ப்பதால் சந்திரனுக்கு வலு அதிகமாகிறது. சந்திரன் இந்த ஜாதகத்தில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனானது கூடுதல் சிறப்பு. மேலும் பரிவர்தனைக்குப்பின் குருவின் சாரம் புனர்பூசம்-1 க்கு லக்னாதிபதி புதன் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் புதனின் கேட்டை-3 ல் நிற்கும் திசா நாதன் சந்திரனால்  புத்திரப்பேறை அளிக்க வாய்ப்பு உருவாகிறது. இந்நிலையில் 8 ஆமதிபதி சனி 2 ல் அமைந்து தனது 1௦ ஆம் பார்வையாக 11 ஆமிட கிரகங்களை பார்ப்பது புத்திர வாய்ப்பை குறைக்கவே செய்கிறது என்பதோடு சனி கால புருஷ 5 ஆமதிபதியான உச்ச சூரியனுக்கு பாகை அடிப்படையில் நெருங்கி நிற்கிறார். இப்படி பாகை அடிப்படையில் சனி சூரியன் இணைவதும் புத்திரப்பேறுக்கு பெரும் தடையாகும். இது புத்திர வாய்ப்பை குறைத்து குடும்பத்தில்  தத்துக்குழந்தையை ஏற்றுக்கொள்ளும்  நிலையை உருவாக்குகிறது. இதனால் ஜாதகர் குழந்தையை தத்து எடுக்க வேண்டி விண்ணப்பித்தார். கூடுதலாக மேற்கண்ட கிரகங்களோடு பாகை நெருக்கம் பெற்று 5, 11 அமைந்த ராகுவாலும் கேதுவாலும் புத்திரத்தடை ஏற்படுவதால் ஜாதகர் செயற்கை முறை கருவூட்டலை நாடுகிறார். புத்திர பாவங்களோடும் காரக கிரகங்களோடும் பாகை அடிப்படையில் நெருகிய தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களின் அமைப்பால் சில தோல்விகளுக்குப்பிறகு செயற்கைக்கருவூட்டல் வெற்றி பெற்று ஜாதகருக்கு சந்திர திசையில் பரிவர்தனைக்குப்பின் குரு சாரம் புனர்பூசம்-1 பெறும் புதன் புக்தியில் 5 ஆமதிபதி சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது அந்தரத்தில் கடந்த 2021 ஆண்டு துவக்கத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பாகை அடிப்படையில் சேர்க்கை பெற்றதாலும் செயற்கைக்கருவூட்டல் என்ற தங்களது காரகம் பயன்படுத்தப்படுவதாலும் ராகு-கேதுக்கள் புத்திரம் அமைய உதவியுள்ளன.  தற்போது சந்திர திசையின் அதே புதன் புக்தியில் குடும்ப பாவத்தில் நிற்கும் 8 ஆமதிபதி சனி அந்தரத்தில் தத்துக்குழந்தை வாய்ப்பும் வந்தது. தத்துப்புத்திரத்தையும் தங்களது குழந்தையாக ஏற்றுக்கொண்டு வளர்க்கவே ஜாதகர் எண்ணினார் என்றாலும் தங்களைப்போல் புத்திரப்பேறுக்காக தவிக்கும் மற்றொரு தம்பதிக்கு அந்த வாய்ப்பு செல்லவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தத்துக்குழந்தை வாய்ப்பை ஜாதகரது குடும்பம் மறுத்தது.

கீழே மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேற்கண்ட ஜாதகி 1974 ல்  பிறந்தவர். ஜாதகிக்கு 20 வயது முதல் 37 வயது வரை புதன் திசை. ஜாதகிக்கு புதன் திசையில் ராகு புக்தியில் 3௦ வயதில் திருமணம் நடந்தது. ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனும் 7 ஆமதிபதி செவ்வாயும் விரையாதிபதி புதனும் தங்களுக்குள் 3 பாகை நெருக்கத்தில் அமைந்துள்ளன. இதனால் ஜாதகியும் கணவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். புதன் காதலை குறிக்கும் கிரகமாவதால் புதன் திசையில் காதல் திருமணம். மிதுனத்தில் 5 ஆமதிபதி சனி இருப்பதால் பாக்கிய ஸ்தானமான மிதுனத்தின் வேலையை புதன் செய்ய மாட்டார். தான் நிற்கும் 12 ஆமிடமான கன்னியின் வேலையை மட்டுமே செய்வார். இதனால் 5க்கு 8 ஆம் பாவமான கன்னியில் இருந்து திசை நடத்தியதாலும் பாகை அடிப்படையில் 5 ஆமதிபதி சனிக்கு மிகுந்த இடைவெளியில் புதன் அமைந்ததாலும் புதனின் திசையில் ஜாதகிக்கு புத்திரம் அமையவில்லை. அதே சமயம் கணவரை குறிக்கும் செவ்வாய், ஜாதகியை குறிக்கும் சுக்கிரன் மற்றும் கற்பப்பையை குறிக்கும் சந்திரன் ஆகியோரோடு அலி கிரகமான புதன் நெருங்கிய பாகை பெற்றதால் கணவன் மனைவிக்கு காதலை தருகிறது ஆனால் புதன் ஒரு அலிக்கிரகம் என்பதால் புத்திரத்தை தர இயலவில்லை. புதன் திசைக்கு அடுத்து வந்த கேதுவும் 8 ஆமிட தொடர்பு பெற்றதால் புத்திரப்பேற்றை தரவில்லை. ஆனால் 8 ல் அமைந்த கேது, பாகை அடிப்படையில் பாக்ய ஸ்தானமான 9 ல் அமைந்த 5 ஆமதிபதி சனியோடும் 5 ல் வக்கிரம் பெற்று 5 ஆமதிபதி சனியை பார்க்கும் குருவோடும் 3 பாகை நெருக்கமாக அமைந்துள்ளார். இப்படி 5 அமைந்த புத்திர காரகன் குரு, 5 ஆமதிபதி சனி மற்றும் 8 ஆமிட கேது இவர்களுக்கிடையேயான பாகை முறை தொடர்பால் ஜாதகியும் அவர்தம் கணவரும் தத்துக்குழந்தையை ஏற்க முடிவு செய்கின்றனர். இதன் அடிப்படையின் 8 ல் நின்ற கேது திசையில் 5 ல் நின்ற குரு புக்தியில் ஜாதகியின் 41 ஆவது வயதில் இவர்களுக்கு தத்துக்குழந்தையாக ஒரு ஆண் குழந்தை கிடைக்கப்பெற்றது.  

மீண்டும் ஒரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

No comments:

Post a Comment