Thursday 30 September 2021

யாருக்கோ திருமணம் – பகுதி இரண்டு!

கடந்த பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு வருகிறது. கடந்த பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.


சூரிய-சுக்கிர இடைவெளி அதிகமிருப்பவர்களின் கவனம் பெரும்பாலும் பொருளாதாரத்தை நோக்கிய திசையில் இருப்பதை நடைமுறையில் காணமுடிகிறது. சுக்கிரன் சூரியனை விட்டு அதிக தூரம் விலகி விடுவதால் சுக்கிரனின் காரகமான இல்லற நாட்டமும் இத்தகையோரை விட்டு விலகி விடுவதாகவே தோன்றுகிறது. இயல்பான இத்தகைய எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்கள் ஒருவரை ஆக்கிரமிக்கின்றன எனில் எதிர்மறை எண்ணங்களுக்குரிய  ராகு-கேதுக்களின் பிடியில் இத்தகையோர் அகப்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். சுக்கிரனின் காரகங்கள் பாதிப்புக்குள்ளாகும் அதே வேளையில் இவர்களின் எதிர்பார்ப்புகள் பொருளாதாரத்தின் பக்கம் திசை திரும்பி விடுகிறது. மேலும் துணை பற்றிய எண்ணம் குறையும்போது அதற்காக தனக்கான துணையை தேர்ந்தெடுப்பது பற்றிய எண்ணங்களை வளர்ப்பதற்குப் பதில், தனது எண்ணைகளை ஒத்த ஒரு தன்பாலினரையே நாடுகின்றனர் என்பதுதான் இத்தகைய ஜாதக அமைப்பினரின் விபரீதம். இத்தகைய எண்ணம் ஏற்படும் சூழலில் மற்றவர்களைவிட தனித்து தெரிவதற்காக தங்களது தோற்றத்தில் சில வித்தியாசமான அமைப்புகளையும்  இவர்கள் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 1980 ல் பிறந்த ஒரு ஆண். இவருக்கு சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 பாகைகளாக உள்ளது. களத்திர காரகன் சுக்கிரன் 8 ல் மறைந்தாலும் தன் வீட்டில் ஆட்சி பெறுவதும், 7 ஆமதிபதி செவ்வாய் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் வீட்டை தனது 8 ஆம் பார்வையில் வைத்திருப்பதும் இவருக்கு குடும்ப வாழ்வை தருகிறது. ஆனால் இவர் குடும்பத்தோடு இணைந்திருப்பதை அது பாதிக்கிறது. ஜாதகர் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து வேலை செய்கிறார். இந்தியா வந்து சில மாதங்கள் குடும்பத்தோடு இருக்கும்போது கருத்து வேறுபாடு தலைதூக்குவதாக கூறுகிறார். ஜாதகருக்கு கடகத்தில் உள்ள ராகு திசை நடக்கிறது. இரட்டைப்படை ராசியில் நிற்கும் ராகு திசையை அடுத்து ஒற்றைப்படை ராசியில் உள்ள குரு திசை வரும் வரை இவர் நீடித்து குடும்ப தொடர்பில் இருப்பது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜாதகருக்கு இந்த நிலையை சொல்லி தெளிவுபடுத்தினால் போதும்.  

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்..


ஜாதகர் 1969 ல் பிறந்த ஒரு ஆண். முன் ஜாதகத்தில் பார்த்த சில அமைப்புகள் இதிலும் உள்ளன. இவருக்கும் சூரிய-சுக்கிர இடைவெளி 42 பாகைகள்தான். ஆனால் இவருக்கு திருமணம் ஆகவில்லை. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்தில் நீசம் பெற்று லக்னத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதகாதிபதி சனி, பாவ கர்த்தாரி தோஷம் பெற்ற 7 ஆமிடத்தையும் பார்த்துதான்.  ஜாதகர் திருமண காலத்தில் சுக்கிர திசையை கடந்துள்ளார். ஆனால் சுக்கிரன் 8 ஆமதிபதி செவ்வாயின் சாரம் பெற்று மிருகசீரிஷம்-2 ல் நின்று, பாதகாதிபதி சனியின் அனுஷம்-3 ல் இருந்து 8 ஆமதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் செவ்வாயின் 8 ஆமிட பார்வையின் பலனையே சுக்கிரன் வழங்க வேண்டியவராகிறார். களத்திர காரகன் சுக்கிரனுக்கு 8 ஆமிட செவ்வாய் தொடர்பு மறுப்பை தெரிவிப்பதால் ஜாதகருக்கு திருமண வாழ்வு மறுக்கப்பட்டுள்ளதை உணரலாம். இவருக்கு பரிகாரங்களோ வழிபாடுகளோ பலனளிக்காது.

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். சூரிய சுக்கிர இடைவெளி 42 பாகைகள். ஜாதகர் 5 , 10 க்குரிய சுக்கிர திசையில் திருமணம் செய்துகொண்டார். ஜாதகருக்கு கப்பலில் பணி. எனவே பல காலத்திற்கு பிறகுதான் குடும்பத்தோடு இணைவார். 5 ஆமிடம் என்பது 7 க்கு லாபமாக வரும் பாவம் என்பதால் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 1௦ ஆம் பாவம் என்பது 7 க்கு 4 ஆம் பாவமாக வரும் இரட்டைப்படை பாவமாகும். பொருளாதாரத்திற்கு சிறப்பை வழங்கும்  இரட்டைப்படை பாவங்கள் இல்லறதிற்கு சிறப்பல்ல. எனவே மனைவியை பிரிந்திருந்தார். அடுத்து வந்த சன்னியாசி கிரகமான கேது திசையும் இல்லற சிறப்பை தரவில்லை.  தற்போது 11 ஆமிடத்தில் இருந்து செயல்படும் புதன் திசையாவது குடும்பத்தோடு தன்னை இணைத்து வைக்குமா என எதிர்பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் சூரிய-சுக்கிர இடைவெளி பாதிப்பை தருவதற்கு திசா-புக்திகள் காரணமாகின்றன. கணவனை குறிக்கும் செவ்வாய்க்கு மனைவியை குறிக்கும் சுக்கிரன் பாதகம் பெற்றதும் இவரின் நிலைக்கு காரணம்.

ஜாதக ரீதியாக சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிகம் இருப்போர் எதிர்கொள்ளும் விளைவுகள்.

இத்தகைய ஜாதக அமைப்பினர் பலருக்கு சிறு வயதில்  பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் ஏனையோரைவிட மிக அதிகம். இதனால் அவர்களது எதிர்கால குடும்ப வாழ்வு பாதிக்கும். சிறு வயதில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தங்களது மகன்களை தவறான நபர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பது.

சிற்றின்ப ஆசை தலைதூக்கும் பதின்ம வயதில் தவறான நண்பர்களாலும், நவீன தொலை தொடர்பு சாதனங்களாலும் பாலியல் காட்சிகளை பார்த்து கெட்டுப்போகும் சிறார்களுக்கும் குடும்ப வாழ்வு பாதிக்கும். எனவே பெற்றோர் தங்கள் மகன்களின் நண்பர் வட்டாரத்தின்மீது ஒரு கண் வைத்திருப்பது மிக முக்கியம்.

இயல்பான மனிதர்களோடு பழகாமல் மிக வித்தியாசமான நபர்களை தங்களது ஆதர்ஷ நாயகனாக பாவித்தல் இவர்களது மன ஓட்டத்தை சொல்லும். 

சிறுவயதில் ஜாதகரை தனியாக இருக்க விடாமல்  குடும்பத்தோடும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பெரும்பாலான நேரங்களை செலவிட வைப்பது உதவிகரமாக இருக்கும்.

ஜாதகரை தொடர்ந்து ஓய்வு நேரங்களில் பல்வேறு வகை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு உட்படுத்துவது மிகுந்த பலனளிக்கும்.

அவசியமின்றி நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பக்கம் செல்வதை தடை செய்வதும், குறிப்பாக Video Games போன்றவற்றில் ஒருவரின் கவனம் செல்லாமல் தடை செய்வதும் அவசியம். பொதுவாகவே செயற்கை சாதனங்களை அதிகம் நாடுவோருக்கு இல்லற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதை சமீபதித்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்கிறது.

இயற்கையை நேசித்தல், புதிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல், மனவளக்கலை, யோகா, தியானம், தோட்டக்கலை, வீட்டு விலங்குகளை பராமரித்தல் இவற்றோடு திருவிழா போன்ற ஊர் பொது விஷயங்களில் ஜாதகரின் பங்களிப்பு இருக்குமாறு பார்துக்கொள்வது இத்தகையோரை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க பெருமளவில் உதவும்.

 தீர்வுகள்.

பல காலம் ஒரே இடத்தில் வசிப்பதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக இருக்குமென்பதால் இடமாற்றமும் இவர்களுக்கு சிறந்தது. 

இவர்களாக திருமணதிற்கு தயாராகும் முன் திருமணம் செய்விப்பது மணமுறிவுக்கு வழிவகுக்கும். எனவே ஜாதகர் தனது எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீண்டு வரும் வரை பெற்றோர் ஜாதகருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு இல்லற நாட்டம் குறைவு எனில் அவரது துணைவருக்கும் அதுபோன்றே ஜாதக அமைப்பு இருக்குமாறு தேர்ந்தெடுப்பது நன்று.

இதர ஜாதக அமைப்புகள் சாதகமற்று இருப்பின், அதிகமான சூரிய-சுக்கிர இடைவெளி  ஒரு சந்நியாசி யோகம் போல செயல்படும் என்பதை மேலே பார்த்த இரண்டாவது ஜாதகம் உணர்த்துகிறது. இத்தகையோர் குடும்பத்தோடு எப்போதும் இணைந்து இருப்பதை கிரகங்கள் அனுமதிக்காது. மீறி இருப்பின் பிரிவினையை தூண்டும் என்பதால் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து வெளியிடம் சென்று வேலை பார்ப்பது குடும்பம் பிரியாமல் இருக்க வழிவகுக்கும்.

இத்தகையோருக்கு உளவியல் சிகிச்சையே மிகுந்த பலனளிக்கும்.

வழிபாடுகள்.

வழிபாடுகளை பொறுத்தவரை ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரக அம்சங்களை வழிபடுவது பலனளிக்கும்.

இத்தகையோருக்கு சர்ப்ப தோஷம் இயல்பாகவே செயல்படும் என்பதால் சர்ப்ப தோஷங்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளும் உதவும்.

சிவன் கோவிலில் இரவு இறுதியாக செய்யப்படும் பள்ளியறை பூஜையில் ஜாதகரை பங்கேற்க செய்வது பலனளிக்கும்.   

ஜாதக ரீதியாக திசா-புக்திகள் சாதகமற்று இருப்பின் அதற்குரிய வழிபாடுகளை தகுந்த ஜோதிடரை நாடி தெரிந்து செய்வது பலன் தரும்.  

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

No comments:

Post a Comment