Thursday 7 October 2021

மீன ராசிக்கு சுக்கிர திசையில் திருமண யோகம்!

                           


மீன ராசியினருக்கு சுக்கிரன், ராசிக்கு 3 ஆமதிபதி என்ற வகையில் திருமண யோகத்தையும் 8 ஆமதிபதி என்ற வகையில் அவமானம், கண்டம், பிரிவினை, நிரந்தர குறைபாடுகளையும் தர வேண்டியவராகிறார். மீன ராசியினருக்கு 2023 முதல் ஏழரை சனி துவங்கவுள்ள நிலையில் சுக்கிர திசை நடக்கையில் திருமணம் செய்யலாமா? என கலக்கத்துடன் ஓரளவு ஜோதிட அறிவுகொண்டோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் எடுத்து வருகின்றனர். சுக்கிர திசை 2௦ வருடங்கள் எனும் நிலையில் அத்தனை வருடங்கள் பாதிப்பு ஏற்படும்  என்று திருமணத்தை தள்ளிப்போடுவது  மடமையாகும். மேலும் ராசி மீனமாயினும் லக்னம் என்ன என்பதையும் அளவிட்டே இதற்கு பதிலளிக்க இயலும். ராசியும் லக்னமும் மீனமாக அமைபவர்களுக்கு சுக்கிர திசை சற்று கடுமையை அதிகம் கட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதையும் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக்கொண்டே கூற வேண்டும். மேலும் ஒருவரது இல்லற கொடுப்பினைகளை கூற கால புருஷனுக்கு 7 ஆமதிபதி என்ற வகையில் சுக்கிரனை முதன்மையாக எடுத்துக்கொண்டாலும் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தையும் அதன் அதிபதி நிலையையும் கவனத்தில்கொள்வது அவசியம்.  இந்தச் சூழலில் சுக்கிர திசை மீன ராசினருக்கு என்னென்ன பலன்களை எவ்வெப்போது வழங்க இருக்கிறது என்று தகுந்த ஜோதிடரிடம் சென்று தெளிவு பெறுவது சுக்கிர திசையின் சாதக-பாதகங்களை எதிர்கொள்ள உதவியாய் அமையும். இதை உதாரண ஜாதகங்கள் மூலம் இன்றைய பதிவில் அலசுவோம்.  

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 26 வயது நிரம்பிய ஒரு ஆண். ஜாதகருக்கு 2015 முதல் சுக்கிர திசை நடப்பில் உள்ளது. சுக்கிரன் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி ராசிக்கு 8 ல் பாவிகள் தொடர்பில் ஆட்சி பெற்று வக்கிரமாகி நிற்கிறார். இந்நிலையில் சுக்கிரனுக்கு பாதக வலு கூடும். இதனால் சுக்கிர திசை ஜாதகருக்கு பெண்கள், இல்லற வகையில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கால புருஷனுக்கு 7 ஆமிடமாகிய துலாத்திலேயே சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது. சுக்கிர திசை ஜாதகருக்கு அவரது 41 ஆவது வயது வரை உள்ளது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போட இயலாது. சுக்கிரன் ரிஷபம், துலாம் ஆகிய இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் இரு வீட்டு பலனையும் வழங்குவார். ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் ஒற்றைப்படை பாவங்களிலுள்ள கிரக திசா-புக்திகள் நடக்க வேண்டும். குறிப்பாக காமத்திரிகோணங்கள் எனப்படும் 3, 7, 11 ஆமிட கிரகங்களின் திசா புக்தியோடு குடும்பம் அமைவதை குறிக்கும் 2 ஆமிடமும்  தொடர்பாக வேண்டும்.

களத்திர பாவாதிபதியும் ஆயுள்  காரகருமான சனி 8 ல் மூலத்திரிகோண வலு பெற்றது ஆயுள் ஸ்தானத்திற்கும் களத்திர வகைக்கும் சிறப்பே எனினும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணத்தை தாமதப்படுத்துவார் எனலாம். எனவே ஜாதகர் சுக்கிர திசையின் துலாம் ஆதிபத்திய காலம் முதல் 1௦ வருடம் முடிந்து 2 ஆவது ரிஷப ஆதிபத்திய காலத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் சில காலமுள்ளது. இப்போது அதற்கான முயற்சி எடுத்தால் ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரன் பிரிவினையையும் அவமானத்தையும் தருவார். லக்னத்திற்கு 8 ல் நிற்கும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பது திருமண தடையையும் மீறி முயன்றால் அவமானத்தை தரும். (8 ஆமிடம் அவமானம்). கோட்சார சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தை தாண்டி ஜென்ம சனியாக மீனத்தில் சஞ்சரிக்கும்போது, லக்னத்திற்கு 5 ல் நின்று லக்னத்தையும் 9,11 பாவங்களையும் பார்க்கும் குருவின் புக்தியில் திருமணம் செய்வதே நல்லது. தற்போது திருமண செய்வித்தால் அது அவமானத்தை ஏற்படுத்தி அதன்  விளைவாக பிரிவினையை தரும்.

சுக்கிர திசை சந்திர புக்தி நடக்கும் ஜாதகருக்கு தற்போது திருமண ஏற்பாடு நடந்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜாதகருக்கு தொழில் சிறப்பில்லை என பெண் வீட்டார் திருமணத்தை நிறுந்திவிட்டனர். ஜாதகர் இதனால் பெருந்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார். அவமான ஸ்தானமான ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரனும் சந்திரனும் தங்களுக்குள் சஷ்டாஷ்டகமாக (6-8 ஆக) அமைந்துள்ளனர். இதுவே ஜாதகருக்கு பெருந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனன சுக்கிரன் வக்கிரமாகி தற்போது கோட்சாரத்தில் லக்னத்தின் 7 ஆமதிபதி சனியும் வக்கிரத்தில் உள்ளதால் பெண் வீட்டார் பின்வாங்கிவிட்டனர். சுக்கிரன் மனைவியை குறிப்பதோடு மூத்த சகோதரியை குறிப்பவர். ஜாதகருக்கு அவரது மூத்த சகோதரிதான் பெண் பார்த்துள்ளார். இதனால் மூத்த சகோதரி ஏற்பாட்டாலும், திருமணதிற்கு பார்த்த பெண்ணின் மூலமும் ஜாதகருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் சுக்கிரனின் காரக உறவுகளான மூத்த சகோதரி, அத்தை ஆகிய சுக்கிரனின் காரக உறவுகள் ஜாதகரின் திருமண விஷயத்தில் தலைடாமல் பார்த்துக்கொள்வது பெருமளவு ஜாதகருக்கு ஏற்படும் அவமானங்களை குறைக்கும்.     

கீழே மற்றொரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 3௦ வயதான ஒரு பெண். இந்த ஜாதகிக்கு 2008 முதல் சுக்கிர திசை நடக்கிறது. தற்போது திசையின் இரண்டாவது பகுதியில் உள்ளார். ராசி மீனமானாலும் லக்னம் கும்பமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் முந்தைய ஜாதகம் போல சுக்கிரன் இங்கு கடுமை காட்ட மாட்டார். சுக்கிரன்  கும்ப லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாவதால் ராஜ யோகாதிபதியாவதுதான் காரணம். லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதியானாலும் அவர் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். மீன ராசிக்கு 3, 8 க்கு உரியவராகி ராசிக்கு 8 ல் நிற்பதுவும் சுக்கிரன் தனது திசையின் ஒரு பகுதியில் சிரமங்களை ஏற்படுத்துவார் எனலாம். சுக்கிரன் இங்கு முதலில் ஆராய்ந்த ஜாதகத்தில் போலன்றி பாவிகள் தொடர்பின்றி நிற்கிறார். இதனால் சுக்கிரன் ஏற்படுத்தும் சிரமங்கள் ஜாதகி பொருத்துக்கொள்ளுமளவு அல்லது வெளியில் தெரியாத அளவில் இருக்கும் எனலாம். களத்திர பாவாதிபதி சூரியன் ராகுவோடு லாபத்தில் தொடர்பு பெற்று 7 ல் நிற்கும் தனித்த குருவோடு பரிவர்த்தனை பெறுவதால், சுவாதி-4 ல் ராகு சாரத்தில் நிற்கும் சுக்கிரன் இந்த ஜாதகிக்கு பாதகத்தை, திருமண வாழ்வை தடைபடுத்துவதன் மூலமே தருகிறார். தாம்பத்ய ஸ்தானமான  12 ல் ஆட்சி பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் 2 ஆமிடத்தையும் 1௦ ஆம்  பார்வையால் திசாநாதன் சுக்கிரனையும் கட்டுப்படுத்துகிறார். இதனால் திருமணம் மூலம் ஜாதகிக்கு  பாதகம் ஏற்படுத்துவதை தவிர்க்க திசா நாதன் சுக்கிரனுக்கு சனி தனது 1௦ ஆம்  பார்வையால் உத்தரவிடுகிறார்.    

தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதியாக திசாநாதன் சுக்கிரனே வந்து, தந்தையை குறிக்கும் சூரியனே 7 ஆமதிபதியாகி 11 ஆமிட குருவோடு பரிவர்தனையாகவதால் இந்த ஜாதகிக்கு திருமண வாழ்வில்  ஏற்படவிருக்கும் சிரமங்களை கணவருக்குப்பதில் சூரியனாகிய தந்தை வாங்கிக்கொள்கிறார். எவ்வாறெனில், ஜாதகியின் தந்தைக்கு, குரு குறிக்கும் குடும்ப வகையிலும், பொருளாதார  வகையிலும் இழப்பு ஏற்பட்டது. சுக்கிர திசையில் 2 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் பெற்ற சனி புக்தியில் ஜாதகியின் 3௦ ஆவது வயதில் தற்போது தாமதமாக திருமண வாழ்வு கூடி வந்துள்ளது. மீன ராசி சுக்கிர திசை என்றாலும், சுக்கிரன் லக்னாதிபதி சனிக்கு நட்பென்பதால் தீவிர பாதகத்தை ஜாதகிக்கு ஏற்படுத்தவில்லை. அது தாங்கிக்கொள்ளும் அளவிலேயே இருந்தது. ஏழரை சனியில் களத்திர வகையில் ஜாதகிக்கு ஏற்படும் சிரமங்களும்  களத்திர பாவாதிபதி பரிவர்தனையாவதால் திசை மாறிவிடும்.  

எனவே சுக்கிர திசை மீன ராசிக்கு ஏழரை சனியில் திருமண வாழ்வில் பாதகத்தையே செய்யும் என்று பொதுவாக எண்ணி கலங்க வேண்டாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment