Sunday, 6 November 2016

சந்திராஷ்டமம் - சில சந்தேகங்கள்

நமது வாசகர் திரு.முத்துராமன் சந்திராஷ்டமம் பற்றிய சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நுட்பமான கேள்விகள் அவை. வாசகர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே பதிவிடப்படுகிறது.

1அமாவாசை திதியன்று வரும் சந்திராஷ்டமத்துக்கும், பௌர்ணமி திதியில் வரும் சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா?

வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி. எனவே இரண்டிற்கும் கண்டிப்பாக வேறுபாடு உண்டு. மேலும் வளர் பிறையில் சுபாவ சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் & ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேராத தனித்த மற்றும் சுபர்களோடு சேர்ந்த புதன் ஆகியோர் சுபாவ பாவக்கிரகங்களைவிட வலுவோடிருப்பர்.

தேய்பிறையில் சுபாவ பாவிகளான செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன்  மற்றும் ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேர்ந்த புதன் ஆகியோர் முதலில் சொன்ன சுபாவ சுபர்களைவிட  வலுவோடிருப்பர்.

இதில் புதன் ஜனன காலத்தில் அமைந்த நிலையை பொறுத்தும் சந்திரன் இரு பிறை காலங்களிலும் மாறுபட்ட பலன்களை வழங்க வல்லன என்பது கவனிக்கத்தக்கது
 
2. நட்சத்திர சந்தி என்று நீங்கள் குறிப்பிட்டபடி எனக்கு எப்போதும் ரேவதி நட்சத்திரத்துக்குக் காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் என்று சொன்னால் அது அஸ்வினிக்கு சந்திராஷ்டமம் ஆகி பாதி நாள் கழிந்த பிறகே சரியானதுபோல் உணர்கிறேன்.

ஜனன காலத்தில் இரு நட்சத்திரங்களுக்கான சந்தியில் சந்திரன் நின்றால் இரு நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகளும்  சந்திரன் மேல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரு நட்சத்திரங்களின் பாதிப்பைக்கொண்ட கலவையான பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். இதில் குறிப்பிட்ட இரு நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை சந்திரன் அதிகம் கிரகிக்கிறதோ அதையே பிரதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திராஷ்டமம் அக்குறிப்பிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டே பிரதானமாக பார்க்கப்படவேண்டும்.  

3. கே.பி.வித்யாதரன் தினப்பலன் கூறும்போது சந்திரன் நிற்கும் நட்சத்திர கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் பிற நட்சத்திரங்களையும்  சந்திராஷ்டமத்துக்குச் சமமாகச் சொல்கிறார். அதாவது சந்திரன் அஸ்வினியில் இருந்தால் சிம்ம ராசிக்குச் சொல்லும்போது மகம் நட்சத்திரக்காரர்களையும் தனுசில் மூல நட்சத்திரக்காரர்களையும் எச்சரிக்கை செய்கிறார்.

வேறு சிலர் சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தை நல்லவிதமாகவே பலன்  சொல்கிறார்கள்.

சந்திரன் நின்ற நட்சத்திர நாளும் சந்திராஷ்டமம் போல் கஷ்டப்படுத்துமா? நான் கவனித்த வரையில் தேய்பிறையில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் (ரேவதியிலிருந்து அஸ்வினிக்கு மாற்றம் பெறும் நாள்) என்னைப் படுத்தி எடுத்திருக்கிறது. வளர்பிறையில் வந்த ஜென்ம நட்சத்திர நாளில் ஏதும் பெரிதாகக் கஷ்டப்படவில்லை..

கே.பி.வித்யாதரன் சொல்வது சரியாக இருக்கக்கூடும். நான் இது பற்றி ஆய்வு செய்து பிறகு எனது கருத்தை பதிவு செய்கிறேன். இதர ஜோதிடர்கள் சொல்வது பொதுவானது. வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி என்பது உங்களது கேள்வியின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

4. உச்ச வீட்டிலும், நீச வீட்டிலும் இருக்கும்போது பலன் மாறுமா? மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் வரும்போது சந்திரன் நீசமாகிறது. அப்போதும் சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்குமா? அப்படியானால் துலாம் ராசிக்காரர்கள் நிலை?

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் நீசமாகி ஏற்படுகிறது. இதனால் இதர ராசியினரைவிட பாதிப்பு அதிகமாகவே ஏற்பட வாய்ப்புண்டு. துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் உச்சமாக அமைகையில் ஏற்படுகிறது. பொதுவாக பார்க்கையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனலாம். ஆனால் துலாம் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடம் கடகத்திற்கு பாதகஸ்தானமான 11 ல் உச்சமான சந்திரன் அமைவது தொழில் வகையில் அவசர முடிவெடுத்து அதனால் சிரமப்பட நேரிடுகிறது. தொழில்வகையில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தும்.  

5. சந்திராஷ்டம் போலவே அஷ்டம சனி காலமும் ஜோதிடத்தில் மிக முக்கியமானது. மீனத்துக்கு உச்சமான அஷ்டம சனி, கன்னிக்கு நீசமான அஷ்டம சனி. இதற்குப் பலன் எப்படி இருக்கும்?

ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு சனியின் அமைவிடம், ராசிக்கு சனியின் அமைவிடம் மற்றும் ஜனன ஜாதகத்தில் சனி அமைந்த இடத்திற்கு கோட்சார அஷ்டம சனி எந்த இடத்தில் அமைகிறது என்பதையும்  கவனிக்க வேண்டும். மேலும் சனியின் சுற்றுகளையும் அதாவது ராசி மண்டலத்தில் அஷ்டம சனி முதல் சுற்றாக வருகிறதா அல்லது இரண்டு மூன்றாவது சுற்றில் வருகிறதா என்பதோடு திசா புக்திகளையும் கவனிக்க வேண்டும்.

இதில் திசா புக்திகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
 
6. ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு சந்திரன் மறைவுஸ்தான அதிபதி. கோச்சாரத்தில் மறைவுஸ்தான அதிபதி இன்னொரு மறைவுஸ்தானமான எட்டாம் இடத்துக்கு வருவதால் இந்த நான்கு ராசியினருக்கு சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்காதா? பெரிய பாதிப்பைத் தராதா?

கண்டிப்பாக பாதிப்பை தரும். குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும்.

7. ராகு, கேதுவுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும், குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்களுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? தற்போது மகரத்துக்கு ராகுவுடன் சந்திரன், கடகத்துக்கு கேதுவுடன் இணைந்த சந்திரன் சந்திராஷ்டமத்தைக் கொடுக்கிறது. கும்பத்துக்கு குருவுடன் இணைந்த சந்திராஷ்டமம்.

சுபர்களுடன் இணைந்த சந்திராஷ்டமம் மனோ ரீதியில் சிறிதாக சிரமப்படுத்தும். ராகு கேதுக்களுடன் சேர்ந்த சந்திராஷ்டமம் அதீத மனக்குழப்பத்தையும் எதிலும் பிடிப்பற்ற ஞான நிலையையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக சந்திராஷ்டமத்தின் பதிப்பை துல்லியமாக அளவிட இதர கிரகங்களுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை கொண்டு அளவிடுவதே சிறப்பாக இருக்கும். உதாரணமாக கடகத்தில் நீச செவ்வாயுடன் சந்திரன் அமைந்துவிட்டால் அது தனுசு ராசிக்கு பாதிப்பை தராது (திசா புக்திகள் மோசமாக இருந்தாலன்றி).

மேலும் ஒரு கிரகத்தில் செயல்பாட்டை அதற்கு கேந்திரங்களின் அமைந்த கிரகங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஒரு கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் அமைந்த கிரகங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் செயல்பாட்டை பாதிப்பதில் முக்கிய பங்குவகிக்கும். .மேலும் அஷ்டம சந்திரனுடன் ராசியாதிபதி அல்லது ஜனன லக்னாதிபதி அமைத்தால் சந்திரனால் ஏற்படும் மனோ ரீதியிலான  தடுமாற்றம் வெகுவாக குறையும். 

ஆய்வுகள் தொடரும்.

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி  எண்:  7871244501

Friday, 21 October 2016

செவித்திறன்

மருத்துவ ஜோதிடம் - பகுதி1
ஜோதிடத்தில் பல வகைகள்.

நிமித்தம்
சகுனம்
சாமுத்ரிகா லக்ஷணம்
மச்ச சாஸ்திரம்
கௌரி சாஸ்திரம்
கைரேகை
எண் கணிதம் என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

இவற்றுள் இயற்கை & அரசியல் நிகழ்வுகளை கணித்தல், மருத்துவ ஜோதிட முறைகள் முக்கியமானவை.

இப்பதிவில் நாம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவ ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

மருத்துவ ஜோதிட முறை பாரம்பரிய ஜோதிடத்தில் முக்கியமானது. ஒருவரது உடலில் என்ன வகையான நோய் ஏற்படும் அது எந்த திசா-புக்தி & கோட்சாரத்தில் ஏற்படும். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.

பெற்றோரின் சர்க்கரை வியாதி தனக்கு வர வாய்ப்புள்ளதை அறிந்து உணவுக்கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலும் அதை தள்ளிப்போட தவிர்க்க முயற்சி செய்வது போலத்தான் இதுவும்.

பொதுவாக சூரிய கிரகணங்கள் பூமியில் அதிகமாக விழும் உத்ராயணத்தில் பிறந்தவர்கள் சூரிய ஒளி குறைவாக பூமியில் விழும் தக்ஷிணாயனத்தில் பிறந்தவர்களைவிட நல்ல உடல்கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பர். நமது அணியில்தான் இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற ஒல்லிப்பிச்சான்கள். மேற்கிந்திய அணியில் மட்டுமல்ல பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் உள்ள மேற்கிந்திய தீவுகளில் ஒல்லிப்பிச்சான்களே இல்லை என்பதை அறியவும். அதுபோல் சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.

ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.

கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. சனியின் ஆதிக்க காலங்களான திசா-புக்திகள், கோட்சாங்களில்தான் வியாதியின் வெளிப்பாடு தெரிகிறது. வயதில் மூத்தோர் உடல் ரீதியான சிரமங்களையும் வியாதிகளையும் கொண்டிருப்பதால்தான் அவர்களை சனியின் அம்சங்களாக குறிப்பிடுகிறோம். ராகு நோயின் தீவிரத்தையும் குரு நோயிலிருந்து விடுபடுவதையும் குறிப்பிடுகிறது.

ராசிக்கட்டத்தில் சர ராசிகள் உடலையும், ஸ்திர ராசிகள் உயிரையும், உபய ராசிகள் ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 



ஜாதகத்தில் இரண்டாம் பாவமும் கிரகங்களில் புதனும், ராகுவும் காதுகளை குறிப்பிடுகின்றன. மேற்கண்ட ஜாதகத்தில் புதனின் உச்ச ராசியான கன்னியில் ராகு அமைந்துள்ளது. இரண்டாமிடத்தில் மாந்தி அமைந்து இரண்டாம் வீட்டிற்குரிய சுக்கிரன் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியுடன் இணைந்து தன் 2ஆம் வீட்டிற்கு 8ல் அமர்ந்துள்ளார். இத்தகைய அமைப்பு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் காரக கிரகமும் லக்னாதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பாதிப்பு குணமடையும் வாய்ப்பும் உள்ளது. லக்னாதிபதிக்கு உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டிக்காக்கும் சக்தி உண்டு என்பது முக்கியமாக அறிய வேண்டிய ஒன்று. 

ஜாதகருக்கு 1996 பிற்பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.

செவிக்கு உரிய பாவமான இரண்டாம் பாவாதிபதி சுக்கிரனின் திசையில் செவித்திரனுக்கு காரக கிரகமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்துவிட்ட பிணி காரகனும் வியாதியை குறிப்பிடும் பாவமான ஆறாம் பாவாதிபதியுமான  சனியின் புக்தியில் லக்னத்திற்கு பாதகாதிபதியும் அஷ்டமாதிபதியான அறுவை சிகிச்சை காரகன் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் அந்தரத்தில் ஜாதகருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இங்கு குரு லக்னத்திற்கு பாதகாதிபதியாகி லக்னாதிபதி புதனுக்கு 12 ல் மறைவு பெற்று கேந்திரத்தில் அமர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டு தோஷத்தை கொடுத்தாலும் வியாதியிலிருந்து குணமடைவதற்கு காரகத்துவம் பெற்றதால் குணமடையவும் வைத்துவிட்டார். அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சைக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்ததால் அறுவை சிகிச்சை குரு அந்தரத்தில் நடந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. லக்னாதிபதியின் வீட்டில் அமரும் கிரகம் தோஷத்தை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் லக்னாதிபதியின் பணியையும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதியாகும்.

சனி புக்தி துவங்கிய 1993 பிற்பகுதி முதல் ஜாதகர் செவித்திரனால் பாதிக்கப்பட்டிருந்தார். சனி வியாதியை குறிப்பிடும் ஆறாம் பாவாதிபதி மட்டுமல்ல, வியாதி குணமடைவதை குறிக்கும் ஐந்தாம் பாவத்திற்கும் அதிபதி ஆவதால் குணமடையவும் வைத்தார். நீதிமான் அல்லவா தனது பணியை இரு வகையிலும் செவ்வனே செய்துள்ளார். அது மட்டுமல்ல இரு பாவங்களுக்கு அதிபதியாகும் ஒரு கிரகம் அதன் திசா - புக்தி காலங்களில் இரு பாவ பலன்களையும் கலந்து வழங்காது. முதலில் ஒரு பாவ பலனையும் பிறகு மற்றொரு பாவத்தின் பலனையும் தனித்தனியாகவே வழங்கும். இது பற்றிய எனது பதிவை கீழ்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம்

.கிரகங்கள் ஆடும் இரண்டாவது இன்னிங்க்ஸ் 

ஆராய்ச்சி அன்பர்களுக்கு

ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் இணைந்து இரண்டிற்கு எட்டில் மறைந்துள்ள அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சை காரகனுமான செவ்வாயின் திசை  சென்ற மாதம் (செப்டம்பர்-2016) முதல் துவங்கியுள்ளது. தற்போது ஜாதகர் செவித்திரனில் சில சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாதிகளுக்கு ஜோதிட பரிகாரமாக
குறிப்பிட்ட வியாதிக்கான காரக கிரகம் மற்றும் பாவாதிபதி கிரகங்களுக்கான அதிதேவதைகளை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது மிகுந்த உதவியாக இருக்கும். இந்த வகையில் குறிப்பிடப்படும் கிரகங்களின் அதிர்வலைகள் கிடைக்கும் திருக்கோவில்களுக்கு  சென்று அவற்றை பெறுவதும் உதவிகரமாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட வியாதியை அதிகப்படுத்தும் காரணிகளை தவிர்த்து குணப்படுத்தும் காரணிகளை நோக்கி நாம் உணவு, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் என்ற வகையில் சென்றால் வியாதியிலிருந்து விடுபடவும் வியாதியின் தீவிரத்தை குறைக்கவும் அவை உதவும். 

"அம்மா"வின் ஜாதகத்தை அலசி ஆராயும்படி அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஜோதிடரின் முதுகை பிராண்டிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு,

அடியேன் சிறை செல்ல தயாரில்லை என்பதை அறியவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
அலை பேசி எண்:7871244501.

Wednesday, 12 October 2016

லக்ன நட்சத்திராதிபதி

ஜோதிட பலன்களை வரையறுப்பதில் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. லக்ன நட்சத்திராதிபதி கிரகத்தையும் ஜாதகத்தில் அது தொடர்புகொண்ட பாவங்களையும் அலசினால் ஜாதகரின் ஒட்டுமொத்த இயல்பையும் மற்றவற்றை ஆராயுமுன் அனுமானித்துவிடலாம். ஒரு உயிர் என்ன காரணத்திற்காக பிறவி எடுத்திருக்கிறது என்பதையும் அது என்ன கர்மங்களில் ஈடுபடும், அனுபவிக்கும் என்பதையும் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகம் தெளிவாய் கூறிவிடும். தேர்ந்த ஜோதிடர்கள் லக்ன நட்சத்திராதிபதி கிரகம் முதற்கொண்டே ஒருவரது ஜாதகத்தை ஆராய்வர்.    

மகாபாரதத்தின் நாயகன் தருமபுத்திரரின் ஜாதகம் கீழே.

                 


லக்னம் ஞான காரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது ஏழாமிடத்தில் அமைந்த குருவை கெடுத்து குடும்ப வாழ்வில் குளறுபடிகள் ஏற்பட வழிசெய்துவிட்டார். ஆனால் அதே கேது நுட்ப அறிவுக்குரிய 5 ஆம் பாவாதிபதியும் காரகனுமான குருவுடன் இணைந்ததால் ஜாதகருக்கு பகைவனும் போற்றும் தரும சிந்தனையை கொடுத்தது. 7 க்கு சுகஸ்தானமான 1௦ ஆம் பாவத்தில் நான்கு கிரக சேர்க்கை என்பது ஏழாமிட தோஷம் எத்தனை   இணைவுகளுடன் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.. தர்மரின் 4 சகோதரர்களுக்கும் ஜாதகரின் மனைவியான திரௌபதி குடும்ப வாழ்வில் இணைந்து பாஞ்சாலியாக வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.

இவ்விடத்தில் வேறு சில விஷயங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். லக்னத்திற்கு 10 ஆமிடத்தில் ஏற்பட்டுள்ள 4 கிரக சேர்க்கை சன்யாச யோகமாகும்.  குரு, 12 ஆமிடம் ஆகியவை வலுவிழந்து இருப்பது இல்லற வாழ்வில் பிடிப்பற்ற நிலையை குறிப்பிடுகிறது. துவாபர யுகம் வரை மனிதர்கள் இத்தகைய அமைப்புகளிலேயே பிறப்பார்கள் என்று சுக்ர நீதி போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த யுகங்களில் மனிதர்களில் பெரும்பான்மையினர் நற்குணவான்களாக (ரஜோ குணம்) இருந்தனர். கலி யுகத்தில் பிறக்கும் மனிதர்களில் பெரும்பான்மையோர் ராக்ஷச குணம் கொண்டவர்களாக அதாவது  சனி,செவ்வாய், ராகு-கேது போன்ற கிரகங்கள் மனிதர்களை தவறாக வழிநடத்தும் ஜாதக பாவங்களில் கலி புருஷனின் கட்டளைப்படி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இரண்டாவதாக மற்றுமொரு ஜாதகம்.

              
சுக்கிரனின் பூராடம் – 4 ல்   லக்னம் அமைந்துள்ளது. சுக்கிரன் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில் அமைந்துள்ளது. ஜாதகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். மருத்துவ கிரகங்கள் சூரியன், கேது, செவ்வாய், புதன் ஆகியவர்களின் நிலையை ஆராய்ந்தால் ஜாதகி ஒரு மருத்துவர் என்பதை அறியலாம்.

இரண்டாமிடத்தில் கேது நின்று 2 க்கு எட்டாமதிபதியான சூரியனுடன் சனி தொடர்புகொண்டதால் ஜாதகி சனியின் காரக அடிப்படையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் அவர் சொந்த ஊரில் இருந்தால் வருமானம் பாதிப்படையும் என்பது ஒரு முக்கிய ஜாதக விதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஜாதகர்கள் சொந்த ஊரைவிட்டு முடிந்தவரை விலகிச்சென்று வருமானம் ஈட்ட முயலவேண்டும். 

மூன்றாவதாக அறிஞர் அண்ணாவின் ஜாதகம் கீழே.

                 
லக்னம் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. ராகுவிற்கு வீடு கொடுத்த லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சியில் உள்ளார். உச்சமான வாக்கு காரகன் புதனின் கன்னி ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2 ஆமிடத்தில் ராகு தொடர்பில் இருப்பது ஜாதகர் பேச்சுத்திறமையில் வல்லவர் என்பதை குறிக்கிறது. ராகு ராஜ்ய ஸ்தானமான பத்தாம் அதிபதியும் அரசியல் தொடர்புகளுக்கும் உரிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்ததும். பத்தாம் அதிபதி சந்திரன் ராஜ்யாதிபதி எனப்படும் அரசாங்கத்திற்கு காரகத்துவம் பெற்ற சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்ததும் ஜாதகரின் கர்மா அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பதை குறிப்பிடுகிறது. 

லக்னம் அமைந்த நட்சதிராதிபதி ராகு ஆயுள் ஸ்தானமான 8 ஆமிடத்துடன் தொடர்பு கொண்டதும் ராசிக்கு எட்டில் நீசம்பெற்று வக்கிரமடைந்த சனியும், சனிக்கு 12 ல் ராசிக்கு  ஏழில் அஷ்டமாதிபதியான செவ்வாய் வக்கிர நிலையில் அமைந்ததும் ஜாதகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவார் என்பதை குறிப்பிடுகிறது. புற்றுநோய்க்கு ராகு,சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் கதிர்வீச்சுகளே காரணமென்பது ஜோதிடம் ஆராய்ந்து அறிந்த உண்மை. ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பில் அடுத்தடுத்த ராசிகளில் அமைந்தது கவனிக்கத்தக்கது.

கீழே தமிழர்கள் இன்னும் இயந்திரங்களாக மாறிவிடாமல் தனது இசையால் தடுத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்.



                    
விரயாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்துள்ளது. செவ்வாய் சிம்ம ராசிக்கு எட்டில் மறைந்துள்ளார். மேலும் சூரியன் அமைந்த ரிஷப ராசிக்கு செவ்வாய் விரயாதிபதியாகிறார். தந்தையின் பாக்கியத்தை பெற இயலாத நிலையை இது குறிப்பிடுகிறது. லக்னத்தில் பித்ரு காரகன் சூரியன் மாத்ரு காரகனான உச்ச சந்திரனுடன் சேர்ந்து சனியுடன் இணைவு பெற்றது தந்தையின் பாக்கியங்களை தனது சுய அனுபவங்களின் மூலமே பெற்று உயர வேண்டும் என்பது ஜாதகறது கர்மா. சனி சூரிய புத்திரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஒருவரது ஜாதகத்தில் இசைத்துறை தொடர்பை குறிப்பது மூன்றாமிடமாகும். இசைத்திரையில் ஒருவர் கோலோச்ச வேண்டுமானால் லக்னத்திற்கு மூன்றாமிடம், சுக்கிரன், புதன் ஆகியவை வலுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமதிபதி சந்திரன் லக்னத்தில் உச்சம். கலை மற்றும் திரைத்துறைக்கு காரகத்துவம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரன் உச்ச சந்திரனின் வீட்டில் அமர்ந்ததால் உச்ச வலு பெற்றதோடல்லாமல் பரிவர்த்தனையும் பெற்றதால் ஜாதகர் உலகம் போற்றும் உன்னத இசை வல்லுனராக ஒளிர்கிறார்.



வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

எனது பதிவுகள் சாமான்யர்களுக்கும், ஜோதிட நேசர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை.. எனது சுய ஆய்வு கொண்டு வரும் கருத்துக்கள் இப்பதிவுகள். அதனால்தான் பிற ஜோதிட வலைப்பதிவுகளுக்கும் எனது பதிவுகளுக்கும் வித்தியாசங்கள் காணப்படும். ஜோதிட விதிகளை புத்தகங்களில் இருந்து வலை ஏற்றுபவை அல்ல எனது பதிவுகள். உதாரண ஜாதகங்கள் மூலம் ஜோதிட விதிகளை பூப்போல எனது பதிவுகளில் தூவியிருப்பேன். எனது ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் தங்களது ஜோதிட அறிவை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதோடல்லாமல் பதிவுகளில் தவறிருப்பின் பின்னூட்டங்கள் மூலமும் என்னை செம்மைப்படுத்தவும் உதவலாம். எனது ஆய்வுக்கருத்துகளை பலர் தங்களது ஜோதிட மாணவர்களுக்கு பாடங்களாக்கி பயன்படுத்துகின்றனர் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதில் எனது ஆக்கம் என்பதை மறைத்து பயன்படுத்துவது வேதனைப்படுத்துகிறது. எனது ஆய்வுக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி பல வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  நூல்வடிவில் கொண்டுவர இருக்கிறேன். ஜோதிடம் பயில வேண்டும் என்பவர்களுக்காக தங்களுக்கு இயன்ற நேரத்தில் இயன்ற வகையில் கட்டுப்பாடுகள்;;இல்லாமல் மின்னஞ்சலில் ஜோதிட ஜோதிட பாடங்கள் நடத்திடவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எனது ஆக்கங்களை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?, தசாம்சமும் தொழிலும் போன்ற சில பதிவுகளை PDF கோப்புகளாக மாற்றி எனது பெயரை மறைத்து வெளியிட்டிருக்கும் ஒரு வலைப்பூ..

https://vedicfastro.blogspot.in/p/pdf-tamil-books.html


மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

அன்பன்,


பழனியப்பன்.     .