Tuesday 15 November 2016

கரை சேர்க்கும் தோணிகள்

ஜாதகத்தில் ஆச்சார்ய கிரகங்கள் என அழைக்கப்படும் குருவும் சுக்கிரனும் வலுவோடிருப்பது அவசியம். இவற்றில் ஒன்று தோஷப்பட்டிருந்தாலும் மற்றொன்றாவது  தோஷப்படாமல் அமைவது அவசியம். இல்லையேல் ஜாதகரது வாழ்வு சிரமம்தான். காரணம் இவ்விரு கிரகங்களிடம்தான் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான காரகங்கள் உள்ளன.

குருவும் சுக்கிரனும்தான் ஆச்சார்ய கிரகங்கள் என்பதால்  ஒன்றின் காரகத்தை மற்றொன்று எடுத்துச் செய்யும் என்றாலும் ஜாதகத்தில் வாழ்க்கைக்கு ஆதாரங்களான பாக்கியங்களை குருவைக்கொண்டும் அதை அனுபவிக்கும் பாக்கியத்தை சுக்கிரனை கொண்டும் அளவிடலாம். இவை இரண்டும் ஜனன ஜாதகத்தில் தோஷப்பட்டிருந்தால் அவை நீங்க வாய்ப்புள்ளதா எனவும் உள்ளதெனில் தோஷ நிறைவு காலத்தையும் கணக்கிட்டு ஜோதிடர்கள் பலன் கூறுவது மிக முக்கியம். இதற்கு தண்டனை கிரகமான சனியின் நிலையையும் திசா புக்திகளையும் நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகத்தில் குடும்ப பாவமான 2 ஆமிடத்தில் ஒரு நீச கிரகம் சந்திரன் அமைந்துள்ளது. 2, 7 க்குரிய செவ்வாய் 7 ஆமிடத்தில் தனது வீட்டிலேயே வக்கிரமாகியதால் வலுவிழந்துவிட்டது. குடும்ப காரகன் குரு சுகஸ்தானமான நான்காமிடத்தில்  நீசமாகி மாந்தியுடன் சேர்க்கை. சர லக்னமான துலாத்திற்கு பாதகாதியான சூரியன் தாம்பத்யத்தை குறிக்கும் 12 ஆமிடத்தில் அமைந்துள்ளது. இவை அனைத்துமே ஜாதகத்தில் குடும்ப வாழ்க்கைக்கு கடும் பாதகத்தை ஏற்படுத்துபவை. இவற்றில் குடும்ப பாவமும் குடும்ப காரகனும் கடுமையாக பாதிக்கப்பட்டதிலிருந்து படைத்தவன் ஜாதகருக்கு குடும்ப வாழ்வில்தான் தண்டனையை வைத்துள்ளார் என்பதை கூறிவிடலாம்.


குடும்ப வாழ்க்கை தொடர்புடைய ஸ்தானங்கள் என்றால் அவை குடும்ப ஸ்தானமான 2, சுக ஸ்தானமான 4, களத்திர ஸ்தானமான 7, உடல் ரீதியான உறவை குறிக்கும் 8, தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடம் ஆகியவைகளாகும். எனவேதான் இவ்விடங்களில் அமையும் செவ்வாயை கவனித்து செவ்வாய் தோஷம் அளவிடப்படுகிறது.

எனவே இந்த பாவங்களுடன் இவற்றின் பாவாதிபதிகள் மற்றும் இந்த பாவங்களில் அமைந்த கிரகங்கள் இவற்றோடு இந்த பாவங்களை பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து பிறகே குடும்ப வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க இயலும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஒரே ஆறுதல் களத்திர காரகனும் லக்னாதிபதியுமான சுக்கிரன் விரையாதிபதியான புதனுடன் இணைந்து லக்னத்திலேயே ஆட்சியில் அமைந்ததுதான். மேலும் குரு நவாம்சத்தில் மீனத்தில் ஆட்சி பெற்றதும் ஒரு நல்ல அம்சம். திருமணத்திற்கு நவாம்சத்தை கண்டிப்பாக ஆராய்ந்தே பலன் கூற வேண்டும். பாவத்தில் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் விருச்சிகத்தில்  உள்ளதால் ஜாதகருக்கு சுக்கிரன் தொடர்புடைய (சுக்கிர திசை அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகத்தின்) திசைகளில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு சிறிதளவு உண்டு என்பதை அறியலாம்.

ஜாதகர் அனுஷம்-2 ஆம் பாதத்தில் விருச்சிக ராசியில் பிறந்துள்ளார். எனவே 12 வயது வரை சனி திசை. அதன் பிறகு 9, 12 க்குரிய புதன் திசை 29 வயது வரை. புதன் 2, 7 க்குரிய செவ்வாயின் நட்சத்திரத்தில்  அமைந்திருந்தாலும் செவ்வாய் வக்கிரமாகிவிட்டதாலும் புதனின் பாவங்களான மிதுனமும் கன்னியும் பாவிகளான சனி, கேது, சூரியனால் கெட்டுவிட்டதாலும் ஜாதகருக்கு திருமணம் செய்துவைக்க இயலவில்லை. அதனை அடுத்து பாக்ய, விரைய ஸ்தானத்தில் அமைந்த ஞானகாரகன் கேதுவின் திசை. கேது ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்து அந்த ராகு லக்னத்திற்கு 3 , 6 க்குரிய நீச குருவின் வீட்டில் அமைந்துவிட்டதால் வலுவிழந்து போனது.

கேது சுக ஸ்தானாதிபதி சனியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகஸ்தானத்தில் நீச குரு அமைந்து சுகஸ்தானாதிபதி சனி 4 க்கு 6 ல் அமைந்துவிட்டதால்  கேதுவால் சனியின் பாவ காரகத்தை எடுத்து செய்ய இயலவில்லை.

இவற்றை அடுத்து லக்னத்தில் ஆட்சியில் அமைந்த லக்னாதிபதியும் களத்திர காரகனுமாக சுக்கிரனின் திசை ஜாதகருக்கு 2௦௦9 ஜனவரியில் துவங்கியது. சுக்கிரனின் சுய புக்தியான 40 மாதங்களில் திருமணம் கை கூட வில்லை. இதற்கு கிரகங்கள் சுய புக்தியில் நன்மையை செய்தால் அது ஆயுளுக்கு தோஷத்தை தர வாய்ப்புள்ளது என்பதும் ஒரு காரணம். லக்னத்திற்கும் சுக்கிரனுக்கும் இரு புறமும் நீச சந்திரனும் பாவியான சூரியனும் அமைந்து கடும் “பாவ கர்த்தாரி” யோகத்தை வழங்கிக்கொண்டிருப்பதும் மற்றொரு காரணம்.

சுக்கிர திசையில் சுய புக்தியை கடந்து பாதகாதிபதி சூரியனின் புக்தி. பாதகாதிபதி 12 ல் மறைந்தாலும் அது தாம்பத்ய ஸ்தானம் என்பதால் அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அந்த பாக்கியம் கிடைக்காமல் தடுத்துவிட்டார். சுக்கிர திசையில் சூரிய புக்தியை கடந்து வந்த நீச சந்திரனின் புக்தி சுக ஸ்தானாதிபதியான சனியின் அனுஷம் – 2ல் அமைந்ததால் ஜாதகருக்கு குடும்ப சுகம் அமைய வழி செய்து ஜாதகருக்கு 02.07.2014 ல் ஜாதகரின் நாற்பத்து ஒன்றாவது வயதில் திருமணம் செய்வித்தார். பாவ அடிப்படையில் சுக்கிரன் சந்திரனோடு தொடர்புகொண்டது முக்கிய காரணம். சுக்கிர திசையில் பாதகாதிபதியான சூரியனின் புக்தி முடியும் வரை ஜாதகருக்கு குடும்ப வகையில் பாதகம் ஏற்படாமல் ஏழரை சனியாக வந்து திருமணத்தை தடை செய்த சனி. சந்திர புக்தியில் ஜென்ம சனியாக வந்து ஜாதகரின் வாழ்வில் குடும்பம் அமைய காரணமாக நின்றது.

துலாம் லக்னத்திற்கு 4, 5 ஆதிபத்தியம் பெறுவதால் பரம யோகாதிபதி என்பதுடன் விருட்சிக ராசிக்கும் சனி காம ஸ்தானமான 3 க்கும் சுக ஸ்தானமான 4 க்கும் அதிபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனி தடுப்பதற்கும் காரணமுண்டு கொடுப்பதற்கும் காரணமுண்டு என்பதை இதன் மூலம் அறியலாம். 

முப்பது வயதிற்கு மேல் வரும் சனியின் இரண்டாவது சுற்று ஏழரை பொங்கு சனி என அழைக்கப்படும். இது போராட்டத்திற்கு இடையில் ஜாதகரை வாழ்வில் முன்னேற வைக்கும்.

ஜாதகரின் திருமண நாளின் கிரக அமைப்புகள் கீழே.

               

ஜனன ஜாதகத்தில் நீசமான குரு கோட்சாரத்தில் உச்சமடைந்ததால் ஜனனத்தில் இருந்த நீச தோஷம் நீங்கியது. சந்திரனின் வீட்டில் குரு உச்சமடைந்ததால் ஜனன காலத்தில் நீசமடைந்திருந்த சந்திரனும் வலுவடைந்தது. பூச நட்சத்திரத்தில் குரு உச்சமானதால் நட்சத்திராதிபதி கிரகமான சனியும் வலுவடைந்தது.பாதகாதிபதியான சூரியன் ஆட்சியில் அமைந்த புதனுடன் மிதுனத்தில் இணைவு பெற்று  அதன் இரு புறமும் சுபர்களான குருவும் சுக்கிரனும் வலுவுடன் நின்றதால் சூரியன் தனது பாதக நிலையில் இருந்து மாற்றம் பெற்று சாந்தமானார். ஜனன காலத்தில் வலுகுன்றி நின்ற 2, 7 ஆமதிபதி செவ்வாய் தனது சொந்த சித்திரை நட்சத்திரத்தில் புதனின் வீட்டில் நின்று அந்த புதனும் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நின்றதால் வலுவடைந்தது. ராகுவும் கேதுவும் லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்பு என்பதுடன் ராகு சனி போன்றும் கேது செவ்வாய் போன்றும் பலன் தரும் என்ற விதிப்படி ராகு கேதுக்களும் திருமணத்திற்கு சாதகமான நிலையிலேயே அமைந்துள்ளனர்.

ஒருவரது ஜாதகத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ஒரு நல்ல திசை அதுவும் ஆட்சார்யர்கள் என வருணிக்கப்படும் குரு மற்றும் சுக்கிரனின் திசைகளோ அல்லது இவற்றின் நட்சத்திரங்களில் நின்ற கிரகத்தின் திசைகளோ வந்துவிட்டால் அது ஜாதகரை கடைத்தேற்றிவிடும். 

இக்கிரகங்களே திக்குத்தெரியாத வாழ்க்கை எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மனிதனை கடைத்தேற்றும் தோணிகள் என்றால் அது மிகையல்ல.

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501.

2 comments:

  1. அருமையான பாடம் சார்....

    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. டியர் சார் வணக்கம்.
    கரை சேர்க்கும் தோணிகள் குரு & சுக்கிரன் கிரகங்கள் எப்படி நம் வாழ்க்கையில் குறிப்பாக திருமணம் பாக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது என்பதை சரியான உதாரண ஜாதகத்துதுடன் மிக அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் .
    மிக சிறப்பான பதிவு . வாழ்த்துக்கள் . உங்கள் ஜோதிட ஆராய்ச்சி பதிவுகளை வரவேற்கிறோம் .

    ReplyDelete