Thursday 21 November 2019

வெளிநாட்டில் வீடு வாங்கும் யோகம்.


வாழ்க்கைப்போராட்டத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வெளிநாட்டு வாழ்வு என்பது கனவு. குடும்பத்தை பிரிந்து பலகாலம் வெளிநாட்டில் வாழும் குடும்பஸ்தருக்கு வெளிநாட்டு வாழ்க்கை என்பது தண்டனை என்பர். சிலருக்கு மட்டும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் சூழல் அமைகிறது. தாய் நாட்டில் இன்றைக்கு வீடு வாங்குவதே கடினம் எனும் சூழலில் வெளிநாட்டில் குடும்பத்துடன் வீடு, வாகன வசதிகளுடன் வசிக்கும் சூழல் அமைவது வெகு சிலருக்கே. இதை மீறி வெளிநாட்டில் வீடு வாகன வசதிகளை அடைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு ஜாதகத்தில் கொடுப்பினை இருக்க வேண்டும். நமது இந்த வாரப்பதிவு அதற்கான காரணிகளை ஆராய்வதே.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

மகர லக்ன ஜாதகிக்கு கேது ஒன்பதாவது பாவத்தில் கன்னியில் உள்ளார். ஒன்பதாம் பாவம் வெளிநாட்டு வாழ்வை குறிக்கும். ராகு-கேதுக்கள் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும். இதனால் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசிக்கிறார்.  வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்திற்கும் லாபத்தை குறிக்கும் 11 ஆம் பாவத்திற்கும் உரிய செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்று அமர்ந்துள்ளது.  பரிவர்த்தனைகளில் நீச்ச பரிவர்த்தனை என்பது ஒரு அருமையான அமைப்பு. ஏனெனில் பரிவர்த்தனைக்குப்பிறகு நீச்ச கிரகங்கள் தங்கள் ஆட்சி வீட்டுக்கு வந்துவிடுகின்றன.  பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் லாப ஸ்தானத்தில் சனியோடு இணைகிறது. நடப்பு திசா நாதன் கேது செவ்வாயோடு பரிவர்தனையாகும் சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் கேதுவுக்கு செவ்வாயோடு தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஜாதகி நடப்பு கேதுவின் திசையில் வீட்டை குறிக்கும் லக்னத்திற்கு நான்காமிடத்தில் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷத்தில் அமைந்த குருவின் புக்தியில் தற்போது வெளிநாட்டில் வீடுவாங்க தேர்வு செய்துகொண்டுள்ளார். பரிவர்த்தனைக்கு பிறகு ஏற்படும் சனி செவ்வாய் தொடர்பால் ஜாதகி பழைய வீட்டை வாங்கி சீர்செய்து குடிப்போக இருக்கிறார்.

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே முதன்மையான நீர்க்கோளான குரு அமைந்து 7ஆமிடத்தில் வர்கோத்தமம் பெற்று நிற்கும் பூமிகாரகன் செவ்வாயின் பார்வையை பெறுகிறது. வீடுகாரகன் சுக்கிரன் 4 ஆமிடத்தில் செவ்வாயின் வீட்டில் திக்பலத்துடன் நின்று நவாம்சத்தில் உட்சம் பெறுகிறது. இதனால் ஜாதகர் குரு  திசையில் வெளி நாட்டில் வீடு வாங்கினார். லக்னத்தில் நிற்கும் குரு வக்ரமாகி இழப்பை குறிக்கும் 12 ஆவது பாவத்தை நோக்கி போகிறது. வக்கிர குரு என்பதால் குருவின் திக்பலம் அடிபட்டுவிடுகிறது. செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 4 ல் திக்பலத்தில் அமையும் சுக்கிரனும் 4 ன் விரைய பாவமான 3ஆமதிபதியாகிறார். மேலும் சுக்கிரன் லக்னாதிபதி சூரியனுக்கு  பகைவராகி சூரியனுக்கு பாதகத்தில் நிற்கிறார். இந்த ஜாதக அமைப்புகள் வீடு வாங்கினாலும் அதை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதை உணர்த்துகிறது. வெளி நாட்டு வீடு பாக்கியத்தில் ஏற்படும் தடைகளை 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவமான 8 ஆவது பாவத்தை ஆராய்ந்தால் புரியும். குரு 5 ஆவது பாவாதிபதியாகி அதன் பார்வையை பெறுவதாலும் வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 9 ஆம் பாவத்திற்கு பாவத்பாவமானதாகவும் தனுசு அமைவதாலும்   5 ஆமிட சிறப்பால் ஜாதகர் வெளிநாட்டு வேலை, வீடு பாக்கியங்களை அடைந்தார். அதே குரு வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 9 ஆமிடத்திற்கு விரைய பாவமான அஷ்டமத்திற்கும்  அதிபதியானதால்  குரு திசையின் இரண்டாவது பகுதியில் அஷ்டமத்தில் ராகுவோடு இணைந்து நின்ற சனியின் அமைப்பால் பணியிழப்பை சந்தித்து இந்தியா திரும்பினார். வீடு உள்ள நாட்டில் இதுவரை சரியான வேலை அமையாமல் வாங்கிய வீட்டை அனுபவிக்க இயலாமல் ஜாதகர் இந்தியாவில் உள்ளார்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்ன ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்ற நான்காம் அதிபதி சனியோடு லக்னத்தில் ஆட்சி பெற்ற பூமி காரகன் செவ்வாய் உள்ளது. லக்னாதிபதி செவ்வாய் ஜீவன காரகன் சனியோடு இணைந்து நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்திருப்பதால் ஜாதகரின் ஜீவனம் வெளிநாட்டில் அமைகிறது.  லக்ன செவ்வாய் வீட்டை குறிக்கும் 4 வது பாவத்தை பார்க்கிறது. வீடு காரகன் சுக்கிரன் மீனத்தில் உச்ச நிலையில் உள்ளார். இதனால் ஜாதகர் நடப்பு செவ்வாயின் திசையில் 4 ஆம் பாவத்தில் நிற்கும் குருவின் புக்தியில் வெளிநாட்டில் வீடு வாங்க உள்ளார். செவ்வாய் சனியோடு தொடர்பு பெறுவதால் பழைய வீட்டை வாங்கும் முனைப்பில் உள்ளார். 

நான்காவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.

மகர லக்ன ஜாதகத்தில் கணவன் மற்றும் வீட்டை குறிக்கும் செவ்வாய் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் வீடுகாரகன் சுக்கிரனின் வீட்டில் நிற்கிறது. செவ்வாய் சந்திரனின் சாரம் பெற்றதால் கணவர் வெளிநாட்டில் தொழில் செய்தவர். சந்திரன் வீட்டை குறிக்கும் 4 ஆவது பாவத்தில் நின்றதால் கணவர் செவ்வாய் திசையில் வெளிநாட்டில் பூமி வாங்கி வியாபர நிறுவனம் அமைத்து வியாபாரம் செய்தார். செவ்வாய்க்கு வீடு கொடுத்த சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்புகொண்டு நீசத்தை நோக்கி செல்வதால் வெளிநாட்டில் அமைந்த சொத்தை அனுபவிக்க முடியாது என்பது தெரிகிறது. செவ்வாய் திசைக்கு அடுத்து மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமத்தில் அமைந்த ராகுவின் திசையில் கணவர் மரணமடைந்தார். ஜாதகிக தற்போது 12 ஆவது பாவத்தில் ஜீவன காரகன் சனியோடு இணைந்த குருவின் திசையில் உள்ளார்.  தன வரவை குறிக்கும் 2 ஆமிடத்திற்கு லாபத்தில் 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் மூல நட்சத்திரத்தில் திசா நாதன் குரு அமர்ந்து திசை நடத்துகிறார்.  ஜீவன காரகன் சனியும் திசா நாதன் குருவும் வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளனர். இதனால் வெளிநாட்டில் கணவர் வாங்கிய சொத்தை ஜாதகி நேரடியாக அனுபவிக்க முடியவில்லை. ஆனால் வெளிநாட்டில் கணவர் ஏற்படுத்திய நிறுவனம் மூலம் ஜாதகிக்கு இன்றும் வருமானம் வந்துகொண்டிருக்கிறது. என்னே கிரகங்களின் லீலைகள்.

எந்த பாக்கியங்களை ஒரு ஜாதகர் அடைய வேண்டும் என்பதையும் அதை எப்போது அடைய வேண்டும் என்பதையும் அதையும் எதுவரை அடைய வேண்டும் என்பதையும் ஜாதகத்தை ஆராய்ந்தால் கிரகங்களே முடிவு செய்கின்றன என்பது தெளிவாக புலனாகிறது. தெளிந்த மனம் சாந்தமடைகிறது. தெளியாத மனம் ஆத்திரங்கொண்டு தவிக்கிறது.

மீண்டும் அடுத்த வாரப்பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501. 

No comments:

Post a Comment