Thursday 28 November 2019

புத்திர பாவ நுட்பங்கள்


மேலோட்டமாக பார்க்கும் சில ஜாதக விஷயங்கள் உள்ளார்ந்து பார்க்கும்போது மாறுபட்டுத் தெரியலாம். புத்திர வகையில் தம்பதியர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்வது முக்கியம். இரு ஜாதகங்களை இணைக்கும்போது ஒருவரது ஜாதகத்தை மற்றொருவரது ஜாதகம் பாதிக்கும். உதாரணமாக பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பின் ஆணின் ஜாதகத்தில் வலிமையான குரு பெண்ணின் பாதிக்கப்பட்ட 5 ஆம் பாவத்தை பார்க்கும் அமைப்பில் பெண்ணின் புத்திர பாவ தோஷம் கட்டுப்படுத்தப்படும்.  இன்றைய பதிவில் தனிப்பட்ட ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை அலசுவதில் உள்ள சில நுட்பங்களை உதாரண  ஜாதகங்களுடன் பார்ப்போம்.



ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கன்னி லக்ன ஜாதகத்தில் 5 ஆமதிபதியான சனி விரையாதிபதி சூரியனுடன் இணைந்து 1 பாகை முன்னிலையில் அஸ்தங்கம் பெற்றுள்ளார். உயிரணு உற்பத்திக்கு காரகன் சூரியனுடன் சூரியனின் பகைக்கிரகம் சனி இணைவது புத்திர பாக்கியத்திற்கு தடை, தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  ராகு புத்திர ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்து குழந்தைபேறுக்கு சாதகமான அமைப்பு அல்ல. புத்திர காரகன் குரு வக்கிரமடைந்து அஷ்டமத்தில் மறைந்த நிலையில் உள்ளார். பொதுவாக இத்தகைய அமைப்புகள் புத்திர பாக்கியத்திற்கு தடை என பொதுவாக ஒதுக்கிவிடக்கூடாது. இத்தகைய தடைகளுக்கு எதிர் அமைப்புகள் உள்ளதா? அதன் அளவு என்ன? அது வெளிப்படும் திசா புக்திகள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும்.

அப்படி கவனிக்கையில் லக்ன பாதகாதிபதி  குரு வக்கிரமடைவது குருவால் ஏற்படும் பாதகத்தன்மை மாற்றமடைவதையும் 8 ல் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கிணங்க குருவால் நன்மையே ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. லக்னாதிபதி புதனுக்கும் குடும்ப பாக்யாதிபதி சுக்கிரனுக்கும் 8 ஆமிட குருவின் பார்வை கிடைப்பது சிறப்பானது. குரு  பார்வை இவ்விரு கிரகங்களுக்கும் ராசிக்கு 5 ஆமிடத்தில் கிடைக்கிறது என்பது கூடுதல் பலமாகும். மேலும் மேஷ குரு பரணி – 4 லிலும் துலாச்சுக்கிரன் விசாகம் – 1 லிலும் அமைந்து சாரப்பரிவர்தனை பெறுகின்றனர். குடும்பத்திற்கு புதிய வரவை குறிக்கும் சுக்கிரன் 5 க்கு 5 ஆமிடமான (பாவத் பாவ)  ரிஷபத்திற்கும் உரியவராகி குருவுடன் பரிவர்த்தனை பெறுவது மிகச்சிறப்பானதாகும்.  இது மட்டுமின்றி இந்த ஜாதகத்தில் குரு – சுக்கிரன் சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள் என்றால் குருவும் சதுர்த்த கேந்திரத்தில் குருவின் வீட்டில் அமைந்த செவ்வாயும் நேரடியாகவே பரிவர்த்தனை பெறுகின்றனர். இதனால் நன்மை செய்யும் நிலையில் அமைந்த லக்ன பாதகாதிபதி குருவுடன் தொடர்புகொள்ளும் செவ்வாயும் ஜாதகத்தில் நன்மை செய்யும்  நிலையிலேயே அமைந்துள்ளது. இத்தகைய பரிவர்தனைகளால் குரு, சுக்கிரன், செவ்வாயும் இவை சாரம் பெரும் கிரகங்களும் நன்மையையே செய்ய வேண்டிய நிலை பெறும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும் சூரியனும் சனியும் செவ்வாயின் சித்திரையில் அமைந்துள்ளனர். ஐந்தாம் பாவத்தில் அமைந்த ராகுவும் செவ்வாய் சாரத்தில் அவிட்டத்தில் நிற்கிறது. இதனால் சுபத்துவமடைந்த செவ்வாயின் சாரம் பெற்றதால் சனி சூரியன் சேர்க்கையால் ஏற்படும் உயிரணு குறைபாடு ஜாதக அமைப்பிலேயே நிவர்த்தியாகிவிடுகிறது. ஜாதகருக்கு சனி திசையில் புதனின் புக்தியில் பெண் குழந்தை பிறந்தது.

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் 5 ஆவது பாவத்தில் சனி அமைந்து லக்ன பாதகாதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறது. குருவின் வீட்டில் சனி-செவ்வாய் தொடர்பு பெறுவது இவ்விரு கிரகங்களின் கடுமையை மட்டுமே குறைக்கும். குரு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்து குடும்ப ஸ்தானத்தில் சுய சாரம் ஹஸ்தம்-2ல் நிற்கும்  சந்திரனை பார்ப்பது ஒரு நல்ல அமைப்பு. இது ஜாதகியின் இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருப்பதை குறிக்கிறது. பாக்கிய ஸ்தானாதிபதி செவ்வாய் புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். மேலும் லக்னாதிபதி சூரியன் பெண்களுக்கு முக்கிய புத்திர ஸ்தானமான 9 ஆமிடத்தில் உச்சமாகி அந்த ஸ்தானத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். குரு 5 ஆவது பாவமான தனுசுக்கு 6 ல் அமைந்துள்ளது. 5 ஆம் இடத்து அதிபதி மற்றும் கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதி என்பது மட்டுமே ஓரளவு புத்திர பேறுக்கான சாதக நிலையாகும்.

5 ல் அமைந்த சனி பாதகாதிபதி செவ்வாயின் பார்வையை பெறுவதால் புத்திர பாக்கியத்தை ஒரு பாதகத்தை அடைந்த பின்னரே  பெறமுடியும் என்பது விதி. லக்னாதிபதி பாதகத்தில் இருப்பதும் இதையே உறுதி செய்கிறது.  ஜாதகி புத்திரப்பேறு தொடர்பாகவே ஜாதகம் பார்க்க வந்திருந்தார். பிரசன்ன ஜாதகமும் ஜாதகி விரைவில் புத்திரப்பேறை அடைய இருக்கிறார் என்பதையே காட்டியது. உண்மையில் அடியேன் குழம்பித்தான் போனேன். பிறகு கூறினேன் “ அம்மா பூர்வீகம் தொடர்பாக ஒரு பாதிப்பை நீங்கள் அடைந்து பிறகே புத்திரம் வாய்க்கும் அமைப்பு தங்கள் ஜாதகத்தில் உள்ளது” எனக்கூறினேன்.  அதற்கு ஜாதகி கூறிய பதிலில் ஆச்சரியமுற்றேன். ஜாதகி பிறப்பால் கிறிஸ்தவர். லக்ன கேது இதை குறிப்பிடுகிறது. சனி செவ்வாய், 5 – 9 தொடர்பால் ஜாதகி மதம் மாறி ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளார். எனவே 5 ஆமிடம் குறிப்பிடும் பூர்வீக வழிபாட்டு முறையிலிருந்து ஜாதகி மாறியுள்ளார். இதனால் 5 ஆமிடம் தனது பாதிப்பை அடைந்துவிட்டது. இனி புத்திரம் அடைய தடையில்லை. பாதிப்பை அடைந்த 5 ஆம் பாவ சனி ஜாதகியின் 3௦ வயது வரை புத்திரப்பேறை தாமதப்படுத்தியுள்ளது.  இந்த பதிவை எழுதும் சமயம் லக்னத்திற்கு 5 ஆமிடத்திற்கு வந்த கோட்சார குருவின் நிலையால் குரு  திசை சுய புக்தியில்  ஜாதகி கருவுற்றிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த ஜாதகத்தில் புத்திர தோஷம் கடுமையாக உள்ளதாகவே தெரியும்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் 1, 6 ஆமதிபதி செவ்வாய் அமர்ந்துள்ளார். கடகத்தில் புத்திர காரகனும் 5 ஆம் அதிபதியுமான குரு உச்சமாகி வக்கிரமும் ஆகியுள்ளார். உச்ச வக்கிரம் என்பது நீச நிலைக்கு ஒப்பானது. குரு பாதகாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். குருவின் 5 – 9 ஆமிட தொடர்பால் புத்திரம் உறுதியாக அமையும் என்றாலும் குருவின் உச்ச வக்கிரமாகி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றதால் பாதிப்பையும் அடையும் என உறுதியாகக்கூறலாம்.  இந்த ஜாதகத்திலும் 5 – 9 பாவங்கள் தொடர்பு பெறுவதால் ஜாதகரின் மகன் ஜாதி மாறி திருமணம் செய்துள்ளார். 5 ஆமிடமான பூர்வ புண்ணியம், முன்னோர்களை குறிக்கும் 9 ஆம் பாவங்களின் வடிவில் தோஷம் வெளிப்பட்டுவிட்டது.

புத்திர பாவத்தை ஆய்வு செய்வதில் குரு, 5 ஆம் பாவாதிபதிகளின் நிலைமை. மற்றும் இவர்களின் சாரத்தில் அமைந்த கிரகங்கள், இவை பெற்றுள்ள ஆதிபத்தியங்கள், திசா புக்திகள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்தால் புத்திரத்தின் தன்மையை தெளிவாக அறியலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501

No comments:

Post a Comment