Saturday 2 May 2020

7 ஆம் பாவ சூட்சுமங்கள்



ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் வாழ்க்கைத்துணை என்பதை தாண்டி தொடர்பு ஸ்தானம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவரின் தொடர்புகள் நன்கு அமைந்தால்தான் அவரது வாழ்க்கை சுகமானதாக, நிம்மதியானதாக அமையும். 7 ஆமிடம் கெட்டுவிட்டால் ஜாதகருக்கு அமையும் தொடர்புகள் மோசமானதாக நிச்சயம் இருக்கும் எனலாம். ஜாதகத்தில் லக்னம் ராசி அதன் அதிபதிகளுக்குப்பிறகு முக்கிய கிரகமாக 7 ல் நிற்கும் கிரகம் வரையறை செய்யப்படுகிறது. அதனால்தான் 7 ஆம் பாவத்தை நிவர்த்தி பாவம் என்கிறார்கள். பொதுவாக 7 ஆம் பாவத்தை நிவர்த்தி பாவம் என்று பார்ப்பதை விட ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 7 ல் நிற்கும் கிரகத்தை அந்த பாவத்தின் நிவர்த்தி கிரகம் என்று பார்ப்பதும் சிறப்பு வாய்ந்தது.  இக்கருத்தின் பின்னணியிலும் சில சூட்சுமங்கள் உள்ளன. அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.

ஜாதகர் 1980 ல் பிறந்த ஒரு ஆண். லக்னத்திற்கு 7 ல் நிவர்த்தி ஸ்தானத்தில் சனி திக் பலத்தில் லக்னாதிபதி குருவோடு இணைந்து நிற்கிறது. இது பொருளாதாரத்திற்கு சிறப்பான அமைப்பாக கூறப்பட்டாலும் இவ்வமைப்பு பிரம்மஹத்தி தோஷத்தை சுட்டிக்காட்டுகிறது. இதனால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படவேண்டும். நிவர்த்தி ஸ்தானமே இங்கு பாதகஸ்தானமாவதால் 7 ஆமிட கிரகங்களை சாந்தப்படுத்தினால் ஜாதகருக்கு சிரமங்கள் குறையுமா என்றால் நிலைமை குறைந்தது போலவும் இருக்கும் குறையாதது போலவும் இருக்கும். ஏனெனில் பாதக ஸ்தான கிரகங்கள் பாதகத்தை செய்யாமல் விடாது. ஆனால் லக்னாதிபதியும் திக்பல சனியும் ஜாதகரை தாங்கிப்பிடிக்கவும் செய்ய வேண்டுமே என்றால் உண்மையாகவே ஜாதகரை தாங்கிப்பிடிக்கவும்தான் வேண்டும். இங்கு குரு லக்னத்தை 7 ல் இருந்து பார்ப்பது சிறப்பு என்றால், குரு தான் இருக்கும் இடத்தை அழித்துத்தான் லக்னத்தை பாதுகாப்பார். ஆனால் சனி குருவிற்கு எதிராக செயல்படுவார். அதாவது சனி இருக்கும் இடத்தை வாழவைப்பார் மாறாக பார்க்கும் இடத்தைத்தான் அழிப்பார். இதனால் 7 ஆமிடம் இங்கு சம நிலை பெறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குரு பாதகாதிபதி புதனுடன் பரிவர்த்தனை ஆகிறார்.இப்போது எப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்றால் ஜாதகர் ஜீவன வகையில் பல கசப்பான சூழல்களை எதிர்கொள்ளவேண்டும். ஜாதகருக்கு புதன் சார்ந்த வகைகளில் ஜீவனம் அமையும் எனக்கூறலாம். திக்பபல சனியுடன் உச்ச புதன் சேர்வதால் சனி-புதன் தொடர்புடைய தொழில்களை செய்வதே நிவர்த்தி என்றாவதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படும். அப்படியானால் மனைவியுடனான குடும்ப வாழ்வு என்னவாகும் என்றால், புதன் 7 ஆமதிபதி ஆவதால் தனது காரகத்துவம் சார்ந்த கூட்டாளி வகைக்கே முக்கியத்துவம் அளிப்பார். இந்த ஜாதகத்தில் சனியோடு பரிவர்த்தனை புதன் சேர்வதால் ஜாதகர் களத்திர வகை பாதிப்புகளைவிட தொழில் வகை பாதிப்புகளையே அதிகம் அடைவார் எனலாம். அதற்கு சனி புதன் சேர்க்கையே ஏமாற்றத்தை குறிப்பதும் ஒரு காரணம். மனைவி வழி பாதிப்பிற்கு சுக்கிரனின் நிலையையும் கவனிக்க வேண்டும். இந்த ஜாதகர் ஜீவன வகைகளில் பல்வேறு கசப்பான சூழ்நிலைகளை எதிர்கொண்டார். குடும்ப வகையில் பாதிப்பில்லை.

இப்போது பின்வரும் இரண்டாவது ஜாதகத்தை கவனியுங்கள்.
இந்த ஜாதகத்தில் நிவர்த்தி ஸ்தானத்தில் உச்ச குரு அமைகிறது. இதனால் உச்ச குரு  நிவர்த்தி கிரகமாகிறார். ஜாதகர் குரு சார்ந்த ஆன்மீக விஷயங்களில் ஈடுபடும்போது மனச்சாந்தி பெறுவதாக கூறுகிறார். ஆனால் குரு இருக்குமிடத்தை அழிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகத்தில் குரு 7 ஆமிடத்தை அழிக்கிறார். ஜாதகருக்கு வாழ்க்கைத்துனைவர் வகைகளில் சிறப்பிருக்காது. இப்பாதிப்பை தவிர்க்க குருவிற்கு நிவர்த்தி ஸ்தானமான லக்னத்தில் இருக்கும் கிரகத்தை அமைதிப்படுத்த வேண்டும். லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டால் லக்னத்தோடு தொட்டர்புகொள்ளும் கிரகங்களையோ அல்லது குருவின் சார நாதனையோ வணங்க வேண்டும். இதே குரு லக்னத்தில் அமைந்தால் ஜாதகருக்கு தான் இருக்கும் இட அமைப்பில் பாதிப்பை தருவாரா என்றால் லக்னத்தில் குரு திக்பலம் பெறுவதால் லக்ன குரு ஜாதகருக்கு பாதிப்பைத்தரமாட்டார்.

மூன்றாவது ஜாதக அமைப்பு கீழே.
உபய லக்னங்களுக்கு 7 ஆமிடமே நிவர்த்தி மற்றும் பாதக ஸ்தானமாக வருகிறது. இங்கே நிவர்த்தி ஸ்தானத்தில் கிரகங்கள் இல்லை. ஆனால் நிவர்த்தி ஸ்தானத்தை லக்னாதிபதி புதன் தனது நட்புக்கிரகமான சூரியனுடன் இணைந்து பார்க்கிறது. லக்னத்தில் புத-ஆதித்ய யோகமும் செயல்படுகிறது. இந்த ஜாதகர் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் சூரியன் மற்றும் புதன் இணைந்த தொடர்புகளையோ  அல்லது  செயல்களிலோ தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அவைகளே ஜாதகருக்கு நிவர்த்தியை வழங்கி சிறப்பைச்செய்யும். லக்னத்தில் சூரியன் இருப்பதால் ஜாதகரின் தொடர்புகள் அரசு சார்ந்த வகைகளில் இருக்கலாம். புதனும் தொடர்பு ஸ்தானத்தை பார்ப்பதால் புதனின் காரகத்துவங்களிலும் ஜாதகருக்கு தொடர்புகள் இருக்கலாம். ஜாதகர் புதன் குறிப்பிடும் வலையுலகில் புகழ் பெற்ற ஒரு ஜோதிடர். சூரியன் குறிப்பிடும் தலைமைச்செயலக  ஊழியர்.

நான்காவதாக மற்றொரு ஜாதகம்.
மகர லக்ன ஜாதகத்தில் காதலுக்குரிய காரக கிரகமான புதன் லக்னத்தில் திக்பலம் பெற்று 7 ஆம் பாவத்தை பார்வை செய்கிறது. இதனால் ஜாதகி காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திக்பல புதனும் 7 ஆமதிபதி சந்திரனும் ஒன்றுக்கொன்று 5 – 9 ஆக அமைந்ததால் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. ஆனால் இங்கு புதன் 6 மற்றும் 9 ஆமதிபதி என்பது கவனிக்கத்தக்கது. 7 ஆமதிபதி சந்திரன் 7 க்கு பாதகத்தில் உச்சமாகியுள்ளதால் இவரது குடும்ப வாழ்விலும் புயல்வீசிக்கொண்டிருக்கிறது. இப்போது 7 க்கு விரையாதிபதியான 6 ஆமதிபதி புதன் லக்னத்திலிருந்து 7 ஆம் பாவத்தை பார்வை செய்வதால் குடும்ப வாழ்வு மேம்பட நிவர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்யும் புதன் குறிப்பிடும் மகாவிஷ்ணுவை வழிவடுவது பலனளிக்குமா என்றொரு கேள்வி எழும். மேலும் 7 ஆமாதிபதி 7க்கு பாதகத்தில் நிற்கையில் அது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று குழப்பம் வரக்கூடும். இங்கு புதன் திக்பலம் பெற்றுவிட்டதால் மேற்கண்ட கேள்விகளுக்கு இடமே இல்லை. நிச்சயம் இவர் மகாவிஷ்ணுவைத்தான் வழிபட வேண்டும். மேலும் இவர் திருப்பதி பெருமாளை வழிபடுவது மிகச் சிறப்பு.

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

No comments:

Post a Comment