Friday 29 May 2020

நமது தெய்வம் எது?



உலக மக்கள் அனைவரும் தமக்கு பிடித்த வடிவில் தத்தம் மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் உண்டு. தந்தை சிவனை வணங்கினால் மகன் முருகனை வழிபடுவதிலிருந்து எதோ ஒரு சக்தி அல்லது ஜாதக அமைப்பு அவர்களை குறிப்பிட்ட வடிவத்தில் வழிபடும்படி ஈர்க்கிறது. அப்படி ஈர்க்கும் கிரகங்கள் சார்ந்ததாகவே அவர்களின் வழிபாடுகளும் இருக்கும். ஜோதிடத்தில் 9 ஆம் பாவம் குல தெய்வத்தையும் பாரம்பரியமாக வழிபட்டு வந்த வழிபாடுகளையும் சுட்டிக்காட்டும். லக்னத்திற்கு 5 ஆமிடம் ஒரு மனிதனின் விருப்பப்படியான வழிபாடுகளை அதாவது இஷ்ட தெய்வ வழிபாட்டை தெரிவிக்கும். லக்னத்திற்கு 4 ஆமிடம் வழிபட்டவுடன் உதவிக்கு வரும் தெய்வத்தின் அம்சத்தை தெரிவிக்கும். 4 ஆமிடம் 1௦ ஆம் பாவத்தின் நிவர்த்தி பாவமாக வருவதால் 4 ஆமிட தெய்வத்தை வழிபட்டால் ஜீவனத்திற்கு ஒரு வழி கிடைக்கும். இதனால் 4 ஆவது பாவத்தையே குலதெய்வத்திற்குறிய  பாவமாக எடுத்துக்கொள்வோரும் உண்டு. நாம் ஒரு ஜாதகனின் வழிபாட்டு முறையை நிர்ணயிக்கும் கிரகம் எது என  இப்பதிவில் ஆராயவிருக்கிறோம்.

கீழ்க்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது.
சிம்ம லக்ன ஜாதகம். லக்னாதிபதி சூரியன் பிராமண ராசி என அழைக்கப்படும் சந்திரனது வீட்டில் கடக ராசியில் செவ்வாய், சூரியன்  மற்றும் புதனோடு  அமைந்துள்ளார். சிம்ம ராசி என்பதால் ஜாதகர் சத்ரியனின் அம்சமாக அதாவது நிர்வாகத் திறமை உள்ளவராக இருப்பார்.  லக்னாதிபதி சூரியன் பிராமண ராசியில் அமைந்ததால் ஜாதகர் பிராமணர். சூரியன் கடகத்தில் அமர்ந்து சந்திரனின் பார்வையை பெறுகிறார்.. சந்திரன் தமிழ் மொழியை குறிப்பவர் என்பதால் ஜாதகரின் தந்தை தமிழ் மொழி பேசும் பிராமண வகுப்பை சார்ந்தவர். தாயாரை குறிக்கும் நான்காம் அதிபதி செவ்வாய் கடகத்தில் அமைந்ததால் ஜாதகரின் தாயாரும் ஒரு பிராமண பெண்மணி. குருவே தந்தையை குறிக்கும் 9 ஆமதிபதியாகி லக்னத்தை 5  ஆம் பார்வை செய்வதால் ஜாதகர் பிராமணத்தன்மை நிறைந்தவர். தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனி வக்கிரமாகியுள்ளது ஒரு தோஷமே. 6 ஆமிட சந்திரனையும் சனி தனது 3 ஆம் பார்வையாக பார்க்கிறது. இந்த அமைப்பு எதோ ஒரு குறைபாட்டை தாயார் வழியில் சுட்டிக்காட்டுகிறது. தமிழ் மொழியை குறிக்கும் சந்திரன் நீசமாகும் விருட்சிக ராசியில் சனி வக்கிரம் பெற்று 4 ஆம் பாவத்தின் 5 ஆவது திரிகோணமான  மீனத்தில் அந்நிய பாஷையை குறிக்கும் ராகு அமர்ந்து, 4 ஆம் பாவத்தின் 9 ஆவது திரிகோணமான கடகத்தில் தெலுங்கு மொழியை குறிக்கும் சூரியன் இதர கிரகங்களை விட வலுவாக அமைந்ததால் தாயார் தெலுங்கு மொழி பேசும் பிராமண பெண்மணியாவார். ராகுவும் சூரியனை பிரதிபலிப்பவர் என எடுத்துக்கொண்டால் ராகுவும் தெலுங்கு மொழியை குறிப்பார்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.
இதுவும் ஒரு ஆணின் ஜாதகமே. லக்னத்தில் இரு சுப கிரகங்களான குருவும் சந்திரனும் அமைந்துள்ளது. குரு திக்பலத்தில் அமைந்து 5 ஆமிட ராகுவை பார்ப்பதால் ஜாதகர் தீவிர  மத நம்பிக்கை கொண்டவர். 9 ஆமதிபதி புதனாகி 1௦ ஆமிடத்தில் நீச செவ்வாயோடு இணைந்த நிலையில் செவ்வாய் லக்னத்தை பார்க்கிறது. இதனால்  ஜாதகர் மகாவிஷ்ணுவை வழிபடுகிறார். 9 ஆமிடத்தில் அமைந்த சூரியன் குரு பார்வை பெறுகிறார். இதனால் தந்தை சிவனை வழிபடுகிறார். தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி சனி நீசம் பெற்றுள்ளது. 4 க்கு 9 ஆமிடாதிபதி புதன் நீச செவ்வாயுடன் இணைந்துள்ளார். நீச சனியின் பார்வை திக்பல குருவை பெரிதும் பாதிக்காவிட்டாலும் நீசத்தை நோக்கி செல்லும் சந்திரனை பெரிதும் பாதிக்கும். இதனால் தாயாரின் வழிபாட்டில் ஒரு தவறோ குழப்பமோ இருக்கும். ஜாதகர் பகலில் பிறந்தவர் என்பதால் பகலில் பிறந்தவர்களுக்கு தாயாரை குறிக்கும் சுக்கிரனுடன் கேது இணைந்து சந்திரனை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஜாதகரின் தாயார் கேது குறிப்பிடும் கிரிஸ்தவ மதத்தை சார்ந்தவரவார். தந்தையும் தாயும் கலப்பு மணம் புரிந்தவர்கள்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
ரிஷப லக்ன ஜாதகத்தில் குல வழிபாடுகள் மற்றும் தந்தையை குறிக்கும் 9 ஆமிடத்ததிபதி சனி, 9 க்கு 8 ல் சிம்மத்தில் அமைந்துள்ளார். தாயாரை குறிக்கும் பாவமான சிம்மத்தின் 9 ஆமதிபதி செவ்வாய் நீசமாகியுள்ளார். இதனால் ஜாதகரின் தாயும் தந்தையும் ஓரிரு தலைமுறைக்கு முன்னதாக கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள். ஜாதகத்தில் சூரியன் சந்திரனின் ரோகிணியிலும் சந்திரன் சூரியனின் உத்திராடத்திலும் அமைந்து சாரப்ப்பரிவர்தனை பெற்றுள்ளனர். இது ஜாதகர் தாய் மதம் திரும்புவதை குறிக்கிறது. ரிஷப லக்னம் ஒரு சுப கிரகத்தின் லக்னமாக அமைந்து சுப கர்த்தாரியோகம் பெறுகிறது. கால புருஷனுக்கு 9 ஆம் பாவமான தனுசுவை அதன் அதிபதி குரு லக்னாதிபதியுடன் இணைந்து பார்க்கிறார். இரண்டும் சுப கிரகங்களாகும். இதனால் ஜாதகர் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி இந்து  தர்மங்களை தற்போது கடைபிடித்து வருகிறார். 

நான்காவது ஆணின் ஜாதகம் கீழே.
கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். இதனால் ஜாதகருக்கு குடும்பம் அமையும்போது ஒரு மாறுதலை சந்தித்து குடும்பம் அமையவேண்டும் என்பதை இது குறிக்கிறது. ஜாதகர் திருமணத்தின்போது வேற்று மதத்தை சார்ந்த தனது மனைவியை, தனது தந்தையாரின் வற்புறுத்தலின் பேரில் தனது மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துகொண்டார். லக்னத்தில் குரு திக்பலம் பெறுகிறார். இதனால் குருவின் பாதகாதிபத்திய தோஷம் அடிபடுகிறது. குல வழிபாடுகளை குறிக்கும் 9 ஆமதிபதி சுக்கிரன் லக்னதில் நீசமாகியுள்ளார். லக்னாதிபதி புதன் நீசன் சூரியனுடன் அமைந்துள்ளார். கடவுள் நம்பிக்கைக்குரிய 9 ஆம் பாவத்தை 9 இன் விரையாதிபதியான 8 ஆமதிபதி செவ்வாய் 3 ஆமிடதிலிருந்து பார்க்கிறார். இந்த அமைப்புகளால் ஜாதகருக்கு இறை நம்பிக்கை இல்லை. லக்னத்தை 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்தும் ராகு லக்னாதிபதி புதனின் சாரம் பெற்றுள்ளார். லாபாதிபதி சந்திரன், ராகு சாரம் பெற்று  சந்திரனை நோக்கிச்சென்றுகொண்டுள்ளார். இதனால் பிறப்பில் ஜாதகர் ஒரு இஸ்லாமியர். திக்பலம் பெற்ற குரு சுக்கிரனுடன் இணைந்து 7 ஆம் பாவத்தையும் பார்க்கிறது. இதனால் மனைவிக்கு இறை நம்பிக்கை உண்டு. மனைவி ஒரு இந்து. மனைவியின் மத நம்பிக்கையில் ஜாதகர் தலையிடுவதில்லை. 
  
இறுதியாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்று பாதகத்தில் அமைந்துள்ளது. இதனால் மனைவி வகையில் ஒரு நெருடல் ஜாதகருக்கு ஏற்படும். பாதகாதிபதி புதனுடன் பரிவர்த்தனைக்கு பிறகு லக்னத்தில் குரு வந்து அமருகிறார். புதனுக்கு 7 ல் திக்பலம் இல்லை. இதனால் இங்கு லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்று பரிவர்த்தனையில் வந்து லக்னத்தில் அமர்ந்தாலும் திக்பலம் வேலை செய்யும். இதனால் இங்கு 7 ஆமதிபதி புதனைவிட லக்னத்தில் அமரும் லக்னாதிபதி குருவிற்கே வலு அதிகம். 1 ம் 7 ம் பரிவர்த்தனையாவதால் இவ்விரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் பாதகத்தை செய்ய இயலாது. 4 ஆமிடத்தில் 7 ஆமதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் கேது அமர்ந்து லக்னத்தில் அமைந்த 7 ஆமதிபதி புதன் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்து சாரப்பரிவர்த்தனை பெறுகிறார்கள். சாரப்பரிவர்தனைக்கு முன் கேது சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் சாரப்பரிவர்த்தனைக்கு பிறகு கேது சுக்கிரனை நோக்கியும் வருகிறார்கள். இதனால் ஜாதகரின் மனைவி திருமணதிற்கு சில வருஷங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது கிறிஸ்தவத்தை பின்பற்ற மருத்துவமனையில் அறிவுறுத்தப்பட்டார். திருமணத்திற்கு பிறகு தற்போதும் சர்ச்சுக்கு சென்று வருகிறார். இங்கு 7 ஆமதிபதியைவிட லக்னாதிபதிக்கு வலு கூடுவதால் பரிவர்த்தனை குரு பரிவர்த்தனை கேதுவோடு இணைந்தாலும் லக்னத்தில் அமரும் கேது லக்னாதிபதியின் தன்மையை சார்ந்தே செயல்படுவார். மேலும் வக்கிரம் பெற்ற கிரகங்களை ராகு-கேதுக்கள் பாதிப்பதில்லை. இதனால் இங்கு ஜாதகரை மீறி மனைவியால் தனது குழந்தைகளை கிரிஸ்தவத்திற்கு  மதம் மாற்ற இயலாது. எனினும் கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதியான குரு வக்கிரமடைவது இதர மதம் சார்ந்த விஷயங்களில் தொடர்பை ஏற்படுத்தும் பாதகமான அமைப்பே.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

No comments:

Post a Comment