Thursday 4 June 2020

ஜீவனமும் கோட்சாரமும்!


2020 ஆம் ஆண்டு எண்கணித அடிப்படையில் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ன் கீழ் வரும் ஆண்டாகும். ராகு தனது உச்ச வீடான ரிஷபத்தை நோக்கி வரும் சூழலில் இன்று கொரானாவினால் உலகப்பொருளாதாரம் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவிருக்கிறது. கால ஓட்டத்திற்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்தும் கிரகங்களில் முக்கியமானது ராகுவாகும். நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நவீனத்துவங்களுக்கு அதிபதி கிரகம் ராகு. ராகுவும் கேதுவும் தங்களது உச்ச வீடுகளான ரிஷபத்தையும் விருட்சிகத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஜீவன காரகன் கால புருஷனுக்கு ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியில் இருக்கிறார். வருட இறுதியில் உலகியல் ஜோதிட விதிகளின்படி தர்ம கர்மாதி யோகம் செயல்பட இருக்கிறது. கால புருஷனுக்கு தன ஸ்தானமான ரிஷபத்தில் உச்சமடையும் ராகுவும் உலக பொருளாதாரத்தின் போக்கை  மாற்றியமைக்க இருக்கிறார்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது. முக்கியமாக வருடக்கோள்களின் பெயர்ச்சியும் இந்த வருடம் நடக்கின்ற சூழலில் இந்நிகழ்வு நடைபெற இருப்பது எதிர்பார்க்கத்தக்கது. அனைத்து துறைகளும் திடீரென்று ஏற்பட்ட இந்த கொரானா சூறாவளியால் திகைத்து நிற்கும் இந்நிலையிலும் எதிர்வரும் கோட்சார நிலைகளுக்கேற்ப தங்களது ஜாதக அமைப்பைக்கொண்டு தங்கள் சம்பாத்திய நிலையை திட்டமிட இப்பதிவு உங்களுக்கு உதவும்.


ரிஷப ராசியில் புதுமைகளுக்குரிய ராகு வந்து உச்சமடைவதால் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையேயான உறவிலும் புதிய மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தங்களுக்கான தனித்த திறமையைகளை பயன்படுத்தி பொருளீட்டும் சூழல் உருவாகும். இதனால் நிர்வாக தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதில் பாதிப்பு ஏற்படும். காரணம் நிர்வாகத்தை குறிக்கும் சிம்ம ராசிக்கு 1௦ ஆமிடத்தில் ராகு வந்து உச்சமடைவதே. குருவும் சனியும் இணைந்து கால புருஷ ஜீவன ஸ்தானத்தில் நிற்பதால் அடித்தட்டு மக்களுக்கும் உண்மையாக உழைக்கும் மக்களுக்கும் மேன்மையான காலமே. குரு சனி இணையும் மகர ராசிக்கு திரிகோணத்தில் ராகு உச்சமடைவதால்  செய்தொழிலில் காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் பாதிப்படைவர். பெரிய தொழில்களை பல சிறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்து செய்யும் நடைமுறை பரவலாகும். ரிஷப ராசி திரைத்துறையை குறிக்கும் சுக்கிரனின் ராசி என்பதால் நூற்றாண்டு பழமை வாய்ந்த திரை அரங்குகளின் காலம் படிப்படியாக முடிவுக்கு வரும்.

கீழே ஒரு ஜாதகம்.
ஜாதகர் வட்டித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர். ஜனன காலத்தில் மிதுனத்தில் நின்ற ராகு கோட்சாரத்திலும் அதே இடத்தில் நின்று 2 ஆமிடதில் உள்ள சுக்கிரனை நோக்கி வருகிறார். சுக்கிரன் சிறிய தனத்தையும் குரு பெரிய தனத்தையும் ராகு மிக அதிக அளவிலான தனத்தையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். கடந்த கோட்சார காலத்தில் சனியோடு சேர்ந்திருந்த கேதுவால் இவர் செய்த வட்டித்தொழிலில் நிறைய பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பார். ஜனன சுக்கிரனை தொடும் சூழலில் கேதுவும் அடுத்து குருவைத்தான் தொட இருக்கிறார். ராகு-கேதுக்கள் வட்டித்தொழிலை குறித்தாலும்  தனத்தின் காரக கிரகங்களின் மீது அவை செல்லும்போது தன வகையில் இழப்பு ஏற்படுத்த தயங்கமாட்டார்கள். அதுவும் சிறிய மீனைபோட்டு பெரிய மீனை பிடிப்பதுபோல சிறிய அளவிலான லாபங்களை கொடுத்து பிறகு இருப்பதையும் பிடுங்கிக்கொள்வார்கள். அதை மீறி வட்டித்தொழிலில் வருமானம் சிறப்பாக இருந்தால் ராகு சுக்கிரனோடு  குடும்ப ஸ்தானத்தில் இணைவதால்  மனைவி வகையில் பாதிப்பை ஏற்படுத்தி குடும்பத்தை கெடுத்துவிடுவார் எனலாம். சனி குருவோடு இணைந்து செல்லும் சூழலில் ஏழரை சனி காலத்தில் சனி கடும் உழைப்பின் பேரிலேயே வருமானத்தை தருவார். இத்தகையோர் இக்காலத்தில் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளி நாடு சென்று கடுமையாக உழைத்தால் ராகுவும் சனியும் பாதிப்புகளை குறைத்துக்கொள்வார்கள்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.
1972 ல் பிறந்த ஆணின் ஜாதகம் இது. இவர் கடந்த காலங்களில் மிகக்கடுமையான தொழில் நெருக்கடிகளை சந்தித்தவர். காரணம். இவருக்கு இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஏழரை சனியும் சமீபத்தில் லக்னத்தில் இரண்டாமதிபதி சனியோடு இணைந்திருந்த கேதுவும்தான். இதனால் தொழில் வகையில் எந்த திசையில் செல்வது என தெரியாமல் விழிப்பவர். தனுசு லக்னத்தில் குரு அமர்ந்து பாக்யாதிபதி சூரியன் உச்சம் பெற்றதால் இவரால் சுய கௌரவத்தை இழந்து தாழ்ந்த வேலைகளை செய்து பொருளீட்ட முடியாது. குரு வக்கிரமடைந்துவிட்டதால் சம்பாத்திய வகையில் இப்படித்தான் செயல்படுவேன் என சில பிடிவாதமான எண்ணங்களை இவர் கொண்டிருப்பார். கோட்சார சனி ஜனன ராகு மீதும் ஜனன சனி மீது கோட்சார ராகுவும் இன்னும் சில மாதங்களின் வரவிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜனன குரு வக்கிரமடைந்துவிட்டதால் ராகுவால் பெரிய அளவில் குரு பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்பு குறைவு.. 5 ஆவது பாவத்தில் ஒரு உச்ச கிரகம் இருப்பதும் இதை தெரிவிக்கிறது. ஆனால் ஜீவன வகையில் ஜாதகர் பெரும் இடர்பாட்டை எதிர்கொள்ளப்போவது தெரிகிறது. இங்கு சனி குறு போல வக்கிரமடையவில்லை என்பதால் நிச்சயம் ராகுவால் பாதிப்பை எதிர்கொள்ளும்.

இந்த காலத்தில் ஜாதகரின் நேர்மைக்கு சோதனையான காலமாகும். முறைகேடான வழிகளில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஜாதகரின் கண்முன்னால் வந்து நிற்கும். ஜாதகர் நேர்மை தவறி சம்பாதித்தால் அதன் பாதிப்பு குடும்பத்திலும் புத்திர வகையிலும் எதிரொலிக்கும். ஜனன குரு லக்னத்தில் வக்கிரம் பெற்று அமர்ந்ததால் குறுக்கு வழியில் சம்பாதிக்க மனம் சலனப்படும். அதே சமயம் கௌரவத்திற்குரிய சூரியன் உச்சமாகியுள்ளதால் குறுக்கு வழி வேண்டாம் என மனம் எச்சரிக்கும். ஜாதகரின் ஆசைக்கும் நேர்மைக்கும் இடையே இங்கு போட்டி நடக்கும். இது ஜாதகருக்கு மிக சோதனையான காலம்.   ஆசையில் ஜாதகர் வென்றால் ஜாதகரை ராகு மிகக்கடுமையாக தண்டிக்கும். மிகப்பெரிய அவமானத்தை ஜாதகர் சந்திப்பார். காரணம் ஜனன காலத்தில் அவமான ஸ்தானமான 8  ஆமிடத்தை சனி தனது 3 ஆம் பார்வையால் பார்க்கிறது. கோட்சாரத்திலும் 2 ஆமிடதிலிருந்து அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தை சனி பார்க்கிறது. அப்படி அவமானப்பட்டால் உச்சமான கௌரவதிற்குரிய சூரியனின் நிலையால் ஜாதகர் தனது உயிரை மாய்துக்கொள்ளக்கூட வாய்ப்புண்டு. கௌரவம் பார்க்காமல் அவமானத்தை எதிர்கொள்ள தைரியம் இருப்பவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க இது ஒரு நல்ல காலமே. எனினும் தவறு செய்யலாமா வேண்டாமா என்பதை திசா-புக்தி கிரகங்களே தீர்மானிக்கின்றன. ஜாதகருக்கு ராகு மற்றும் சனி தொடர்புடைய திசா புக்திகள் நடந்தால் ஜாதகர் குறுக்கு வழியில் செல்ல அதிக வாய்ப்புண்டு. நடப்பது சூரியன் அல்லது குருவின் திசா புக்தியானால் ஜாதகர் குறுக்கு வழியை தவிர்ப்பார். இந்த ஜாதகருக்கு குரு திசையில் ராகு புக்தி நடக்கிறது.

மூன்றாவது ஜாதகம் கீழே.
இந்த ஜாதகர் ஒரு கணக்கு தணிக்கையாளர். ராகுவும் செவ்வாயும் ஒன்று சேர்வது விரும்பத்தக்கது அல்ல. நூறு சதவீதம் துல்லியத்தை எதிர்பார்க்கும் அமைப்பு இது. சந்திரன் இந்த கூட்டணியில் இடம் பிடித்ததால் சிறிது மாறுபாடு உண்டு. விளையாட்டு மற்றும் ஆராய்ச்சித்துறையை தவிர இதர வகையில் இந்த அமைப்பு விரும்பப்படுவதில்லை. வரவு செலவுகள் சரியாக இருக்க வேண்டும் என ஒரு தணிக்கையாளராக ஜாதகர் எண்ணுவது நியாயமே. 1௦ ஆவது பாவத்தில் இருக்கும் தன காரகன் குருவை சனியோடு சேர்ந்த சூரியன் பார்க்கிறார். இதனால் 1௦ ஆம் பாவமான ஜீவன பாவத்தில் உள்ள நிறை குறைகளை கணக்கிட்டு வாடிக்கையாளர்களை வழிநடத்துவது ஜாதகரின் ஜனன கர்மா. இப்போது கோட்சாரத்தில் சனியோடு இணைந்த சூரியன் மீதும் செவ்வாய் சந்திரனோடு இணைந்த ராகுவோடும் கோட்சார சனி சென்று சேர இருக்கிறார். முந்தைய ஜாதக அமைப்பை போன்றே இந்த ஜாதகத்திலும் நெருக்கடிகள் உண்டு. நெருக்கடியின் தன்மை வேறு. அரசு சொல்லும் வழி முறைப்படி வாடிக்கையாளர்களை நெறிப்படுத்துவது ஜாதகரின் கடமை. பொதுவாகவே வரவு செலவு கணக்கை சரியாக காண்பிப்பவர் மிகக்குறைவே. இந்நிலையில் இவ்வருட இறுதியில் மகரத்தில் கோட்சார குருவும் சனியும் ஜனன மகர கிரகங்களோடு அமையும் நிலையை காண்கையில் வாடிக்கையாளர்கள் முறையான கணக்கை தர மறுப்பவர்களாகவும் அல்லது உண்மையான வரசு செலவை மறைத்து காண்பிப்பவர்களாகவும் இருப்பர். ஜாதகருக்கு ஜனன காலத்தில் உள்ள செவ்வாய்-ராகு சேர்க்கையால் விடாப்பிடியாக முறையான கணக்கை கேட்டுப்பெற வேண்டிய சூழல் ஏற்படும். மனப்போராட்டத்தில் பாதிக்கப்பட்டால் ஜாதகர் தொழிலை இழக்க வேண்டியிருக்கும். அரசின் விதிமுறைக்கும் வாடிக்கையாளர்களின் தன்மைக்கும் இடையே போராடும் காலமாக ஜாதகருக்கு இது இருக்கும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

No comments:

Post a Comment