Saturday 25 July 2020

காம புதனின் காதல் சேட்டைகள்!



ஜோதிடத்தில் புதன் ஒரு முக்கிய கிரகம். புதன் ஜோதிடத்தில் புத்திகாரகன் என வர்ணிக்கப்படுகிறார். புத்தியைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்பதால்தான் “பலவான் புத்திமான்” என்கிறார்கள்.  புதன் காதலுக்கு உரிய கிரகமாகவும் கருதப்படுகிறது. "எத்தனை பெரிய புத்திசாலியும் காதல் வயப்பட்டுவிட்டால் முட்டாளாகிவிடுகிறான்" என நகைச்சுவையாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. காதலில் புத்தியை உணர்வுகள் வென்றுவிடுகின்றன. ஆனால் காதலுக்கும் புத்திக்கும் உரிய ஒரு கிரகம் தனது காரகத்துவங்களிலேயே ஒன்றை வென்று ஒன்றை தோல்வியடைய வைக்கிறது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். புதன் காதலன்-காதலி, நண்பர்கள் ஆகியவர்களையும் குறிப்பிடும் கிரகமாகும். புதனால் ஒரு காதல் ஏற்பட்டால் அது ஒரு காலத்தில் வெற்றியடையாமல் விலகிச்சென்றாலும் மீண்டுமொருமுறை தேடிவரும். நல்ல நண்பர்களையே காதலர்களாக அடைபவர்கள் கொடுப்பினைகொண்டவர்கள். அவர்களையே திருமணம் செய்பவர்கள் பாக்கியசாலிகள். புதன் ராகுவோடு தொடர்புகொண்டு 7 ல் நின்று அங்கு களத்திர காரகர்களும் கெட்டிருந்தால் அங்கு காமக்களியாட்டம்தான். சொல்ல, எண்ண முடியாத  நிகழ்வுகளையெல்லாம் இச்சேர்க்கை நடத்திக்காட்டும். கயிலாயத்தையே இலங்கைக்கு பெயர்த்துவரத் துணிந்தான் ராவணன். ஆனால் சீதை மீது கொண்ட முறையற்ற காதலால் அனைத்தையும் இழந்தான். புத்தியால் வெல்ல இயலாத எதிரியைக்கூட காதலும் காமமும் வென்றுவிடுகின்றன.  

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம். 


விருட்சிக லக்னத்திற்கு 6 ல் கேது சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் சுக்கிரனின் பூராடத்தில் அமைந்துள்ளது. சந்திரனின் திரிகோணத்தில் கேது அமைந்து இருவரும் ஒரு கிரக சாரம் பெற்றதால் இவர்களுக்கிடையேயான தொடர்பு வலுவானதாக அமைகிறது. சந்திரன் பாதகாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் வந்து அமைவதால் ஒரு பெண்ணால் பாதிப்பு வரும் என அனுமானிக்கலாம். நட்பு, காதலர்களை குறிப்பிடும் புதன் உச்சமாகி காதல் பாவமான 5 ஆமிடத்தை பார்க்கிறது. புதனின் இந்த அமைப்பால் இந்தப்பெண்ணுக்கு இயல்பாகவே காதலுணர்வு இருக்கும். ராகு காம, களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனோடும் குடும்ப காரகன் குருவோடும் இணைந்து தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் நிற்கிறது.  இந்த ராகு புதனுக்கு அடுத்த ராசியில் இருந்து புதனை நோக்கி வருகிறார். இதனால் இந்த ஜாதகியின் இயல்பான காதலுணர்வில் விபரீதமான எண்ணங்கள் எழும்.

நட்பு பாவமான 4 ஆமதிபதி சனி, சதயம்-3 ல் நின்று ராகுவோடு தொடர்பாகிறது. இதனால் நட்பையே காதலாக என்னும் எண்ணம் இப்பெண்ணுக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்த களத்திர பாவாதிபதி சுக்கிரனின் பூராடம்-3 ல் உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் நிற்கிறார். உச்ச புதன் ஹஸ்தம்-4 ல் நின்று  2 ஆமிட சந்திரனோடு தொடர்புகொள்கிறார். சந்திரன் மற்றும் புதனின் இத்தகைய தொடர்பால்  ஏற்படும் உணர்ச்சித்தூண்டலில்  காதல் மூலம் குடும்பத்தில் சில விபரீத எண்ணங்கள் ஜாதகிக்கு எழும். கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகமே காம உணர்வுகளை பிரதிபலிக்கும் ராசியாகும். காரணம் 8 ஆமிடம் என்பது உடலுறவை குறிப்பிடும் இடம் என்பதால்தான். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் கால புருஷனுக்கு போக ஸ்தானாமான மிதுனத்தில் அமைந்து அதன் அதிபதி உச்ச புதனை பார்க்கிறது. லக்னாதிபதி செவ்வாய் இப்படி அமைவதால் ஜாதகிக்கு புதனின் காரகத்துவங்ளான நட்பு மற்றும் காதலில் அதிக தூண்டுதலை ஏற்படுத்தும்  12 ஆமிட ராகுவும் புதனை நோக்கி வருகிறது. மூலத்திரிகோணத்தில் உச்சம் பெற்ற தனித்த புதன் சிறப்பாக அமைத்திருப்பது போல இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் புதனை அதன் இயல்பிலிருந்து மாற்றுகின்றன. இதனால் புதன் காமத்தில் மாறுபட்ட பல்வேறு கோணங்களை ஜாதகியை எண்ண வைக்கிறது.

இந்த ஜாதகிக்கு 2 ஆமிடதில் நிற்கும் சந்திரனின் திசையில் சந்திரன் சாரம் பெற்ற லாபாதிபதி புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பிறகு ராசிக்கு காதல் பாவமான 5 ஆமிடத்தில் மேஷத்தில் நிற்கும் காதலை குறிக்கும் மற்றொரு கிரகம் கேதுவின் புக்தி துவங்கியது. கேது சுக்கிரனின் சாரம் பரணி-4 ல் நிற்கிறது. 7 ஆமதிபதி சுக்கிரனுக்கு திரிகோணத்தில் பள்ளி நட்பை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனி நிற்கிறது. இதனால் மணமான பின்னும் பள்ளி நட்பு காதலெனும் தீயாய் சுடுகிறது. புதன் விட்டுப்போன தொடர்பை ஒரு காலத்தில் மீண்டும் தேடிவரச்செய்யும். அப்படி பள்ளி நட்புகள் மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டன. ஆனால் வாழ்க்கைச்சூழல்கள் இருவருக்கும் திருமணம் எனும் நிலையால் மாறியிருந்தன. இப்போது சந்திர புக்தியில்   கேது புக்தியில் ஜாதகி தனது பள்ளி நட்பை எண்ணி கணவரை பிரிகிறார். சுக்கிரனின் புக்தியிலும் ஜாதகி கணவரை பிரிந்துதான் இருந்தார்.

சுக்கிரனின் திரிகோணத்தில் நின்று குரு பார்வை பெறும் கணவரான செவ்வாய் தனது மனைவியை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை இருந்ததால் கணவர் ஜாதகியின் நிலையை புரிந்துகொண்டார். ஜாதகிக்கு சந்திர திசையில் திக்பலம் பெற்ற சூரியனின் திசை துவங்கியதும் கணவர் ஜாதகியை உளவியல் முறையில் அணுகி பள்ளிக்காதலில் இருந்து தனது மனைவியை மீட்டெடுத்தார். நட்பை குறிக்கு 4 ஆம் பாவாதிபதி சனி தனது பாவத்திலேயே வக்கிரமாகியுள்ளது. இதனால் திருமணமான பள்ளி நண்பர் ஜாதகியின் எண்ணங்களை புறந்தள்ளினார். திக்பலம் பெற்ற சூரியன் பாதகாதிபதி சந்திரனுக்கு திரிகோணத்திலும் 12 ஆம் பாவ ராகு, சுக்கிரனுக்கு பாதகத்திலும் உச்ச புதனுக்கு விரையதிலும் நின்று புக்தி நடத்தியதால் அது சாத்தியமாயிற்று.  

இந்த ஜாதகி திருமணமான பின்னும் தனது பள்ளிதோழியை மறக்க இயலாமல் தோழியுடன் இணைந்து வாழ எண்ணி தனது கணவரை பிரிந்து சென்றார். தோழிக்கும் திருமணமான நிலையில் இப்பெண்ணின் கருத்தை நிராகரித்தார். ஜாதகியின் குடும்ப வாழ்வை சூரியன் காப்பாற்றினார். தற்போது ஜாதகி கணவருடன் இணைந்து வாழ்கிறார்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

No comments:

Post a Comment