Monday 10 August 2020

வெளிநாட்டு யோகத்தை அள்ளித்தரும் ராகு-கேதுக்கள்!

 


ராகு கேதுக்கள் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்கள். குடிசையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் கொண்டுசென்று நிறுத்தும். மாடத்தில் இருப்பவரை தெருவில் கொண்டுவந்து நிறுத்தும். பொதுவாக ராகு-கேதுக்கள் தடைகளை ஏற்படுத்தும் கிரகங்கள் மட்டுமே என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சாதகமாக இவை ஜாதகத்தில் அமைந்திருந்தால் இதர கிரகங்களை விட உறுதியான அமைப்பில் முன்னேற்றப்பாதையில் ஜாதகரை கொண்டுசெலுத்தும். இவைகளே இதர கிரக அமைப்புகளால் வாழ வழியற்றுத்திரிபவர்களுக்கு தனது காரகத்துவம் சார்த்த வகையில் திடீர் வெளிநாட்டு வாய்ப்புகளையும் கொடுத்து வாழ வழியும் காண்பிக்கும். சர்ப்ப கிரகங்கள் கட்டுப்பாட்டில் அனைத்து வகையான புதுமையான நவீனமான துறைகள் வரும் என்றாலும் குறிப்பாக குற்றமறியும் துறை, நவீன கணினி மென்பொருள் துறை, மருத்துவத்துறை, விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இவைகளின் மூலம் வெளிநாட்டு வாய்ப்புகளை இவை வழங்குகின்றன. நவீனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் மேற்குறிப்பிட்டவை பொருளாதார உயர்வைத்தரும் முக்கிய துறைகளாகும். 

இன்றைய பதிவில் ராகு-கேதுக்கள் வழங்கும் வெளிநாட்டு வாய்ப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.      

 கீழே ஆணின் ஒரு ஜாதகம். 

jothidanunukkangal.blogspot.com

ஒருவர் உள்ளூரில் ஆதாவது  தான் பிறந்து வளர்ந்த ஊரில் தனது வாழ்க்கையையும் ஜீவனத்தையும் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டுமெனில் ஜாதகத்தில் உள்ளூர் வாழ்க்கையை குறிக்கும் 2 ஆமிடம் சிறப்பாக இருக்க வேண்டும். இரண்டாமிடத்தோடு தொடர்புடைய கிரக அமைப்புகள் ஒருவருக்கு வருமானம் மற்றும் குடும்பம் அமையுமிடங்களை சுட்டிக்காட்டும். ராகுவோடு இணைந்ததால் சந்திரன் தனது பலத்தை ராகுவிடம் இழக்கிறார். இதனால் சந்திரனின் அஷ்டமாதித்ய தோஷம் ராகுவை மீறி இங்கு செயல்பட்டாது. சந்திரனும் ராகுவும் கடல்கடந்து சென்று வெளிநாட்டில் வாழ்வதை குறிக்கும் கிரகங்கள் ஆகும். ஜீவன காரகனும் வருமான ஸ்தானாதிபதியுமான சனி வக்கிரம் பெற்ற நிலையில் 6 ஆமிடத்தில் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் நிற்கிறார். 2 ஆமதிபதி 6 ல் அமைவது ஜாதகர் வேலைக்குச் செல்வார் என்பதும் (2 வருமானம், 6 வேலை), சந்திரனின் சாரத்தில் சனி அமர்வதால் வேலை வெளிநாடு தொடர்பானதாக அமையும் என்பதும் இங்கு புலனாகிறது. லக்னாதிபதி குரு வெளிநாட்டில் வசிக்கும் அமைப்பை குறிக்கும் 12 ஆமிடமான நீர் ராசி விருட்சிகத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்குவார் என்பதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

விருச்சிகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும். எப்போது இந்த அமைப்புகள் எல்லாம் செயல்படும் என்பதைக்கான திசா புக்திகளை காண வேண்டும். ஜாதகர் 1971 ல் பிறந்தவர். ஜாதகருக்கு 1991 இறுதியிலிருந்து குரு திசை நடந்தது. 16 வருட குரு திசையின் முதல் பகுதியான முதல் 8 வருடங்கள்  மேஷத்திற்கு செயல்பட்டது. மேஷம் வேலை பாவமான 6 க்கு விரைய ஸ்தானம். எனவே ஜாதகர் அப்போது சரியான வேலை அமைய போராட்டத்தில் இருந்திருப்பார்.     2004 முதல் குரு திசையின் இரண்டாவது பகுதி செயல்பட்டது. 12 ஆமிடம் ஒருவர் தான் பிறந்த வளர்ந்த வாழிடத்தை விட்டு வெகு தூரம் விலகிச்செல்வதை குறிப்பிடும். விருட்சிகத்திலிருந்து திசை நடத்தும் குரு தனது திசையின் 2 ஆவது பகுதியில் வேலை பாவத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு வேலை கிடைத்து வெளிநாடு சென்றார். ஜாதகருக்கு தற்போது குரு திசை முடிந்து சனி திசையில் உள்ளார். இறுதிக்காலத்தில் 12 ஆமிட குருவின் விசாக நட்சத்திரத்தில் நிற்கும் புதன் திசையைத்தான் ஜாதகர் சந்திக்கவுள்ளார். எனவே ஜாதகர் வெளிநாட்டில்தான் நிரந்தரமாக வாசிப்பார். ஜாதகர் தனது தாய் நாடான  இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க வாய்ப்பே இல்லை. ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பையும் வசிப்பிடத்தையும் இங்கு ராகுவே வழங்கியுள்ளது. அதற்கு திசா புக்திகள் ஒத்துழைக்க வேண்டும். 

இந்த ஜாதகத்தில் செயல்படும் மற்றொரு அமைப்பு தர்ம கர்மாதிபதி யோகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒருவர் அங்கு நிரந்தரமாக குடியுரிமை பெற்று தங்கவேண்டுமெனில் அவர் திறமையும் சாதுரியமும் மதிநுட்பமும் கொண்டவராக இருக்கவேண்டும். இவை இல்லாவிட்டால் வெளிநாட்டிலும் வாழ வழியற்று திறமையற்ற பணியாளராகவோ அல்லது அகதியாகவோதான் தங்கவேண்டியிருக்கும். சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்று பணி செய்யும் அமைப்புள்ளோருக்குத்தான் அத்தகைய அமைப்பு இருக்கும். விசா அதிகாரிகளிடம் மாட்டிய பிறகு வெளிநாட்டில் கம்பி எண்ண வேண்டியதுதான் அல்லது அவமானப்படுத்தப்பட்டு திரும்பவேண்டியிருக்கும். இந்த ஜாதகத்தில் வெளிநாட்டிலும் தனது திறமையால் சகல வசதி வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் குடியுரிமையையும் பெறும் அமைப்புகள் உள்ளன. அவற்றில் சிறப்பானது தர்ம கர்மாதிபதி யோகமாகும். கால புருஷ 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குரு , சனி தொடர்பால் ஏற்படுவதே முதல்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும். இந்த ஜாதகத்தில் சனியை குரு பார்ப்பதால் அது அமைகிறது. மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகமானது லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சுக்கிரனோடு இணைந்திருக்கும் 9 ஆமதிபதி சூரியனாலும் 1௦ ஆமதிபதி புதனாலும் ஏற்படுவதாகும். இது இரண்டாம்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும்.

ராகு கேதுக்களின் யோகத்தை பெறவும் சிறப்பானதொரு ஜாதக அமைப்பிருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்கள் வாழ்வில் ஒரு விஷயத்தில் பாதிப்பை தந்து வேறொரு வகையில் ஜாதகரை உயர்த்தும் என்று கூறுவதுண்டு. இந்த ஜாதகத்தில் நாம் கண்டது போல பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுச்செல்வது பாதகம் என்று  எடுத்துக்கொண்டால் அந்நிய தேசத்தில் சிறப்பான வாழ்வு அமைவது சாதகமே. ஒரே சமயத்தில் இந்த இரு வகையான அமைப்புகளையும் அனுபவிக்க இயலாது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501 

No comments:

Post a Comment