Wednesday 17 February 2021

குறை தீர்க்க வரும் தெய்வம்!

 

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை.

தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு விலங்குகளின் மீதுள்ள பயத்தால் குரூர விலங்குகளையும், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றையும் வணங்கியிருக்கிறான். இன்றைய நமது தெய்வங்களின் காலடியில் சிங்கங்களும், புலிகளும், யானைகளும், பாம்புகளும் இருப்பதன்  காரணம் இதுதான். பண்டைய மனிதர்கள் தனித்தனி கூட்டங்களாக வசித்தபோது எதிரிக்கூட்டத்தினரால் பாதிக்கப்பட்டபோது, தாங்கள் வணங்கும் தெய்வம் எதிரிகளிடம் இருந்து தன்னை காக்கும் என்று நினைத்ததன் விளைவே நமது தெய்வங்களின் காலடியில் அரக்கர்கள் என்ற எதிரிகளின் தலைகள் இருப்பது. பிறகு தங்களுக்கு நிழல் தரும், கனி தரும், ஆரோக்கியம் தரும், பால் தரும் பசுக்களையும், மரங்களையும், செடிகளையும், நதிகளையும், சூரிய, சந்திரர்களையும் வணங்கி இருக்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்த மகா பெரிய பிரபஞ்ச சக்தியை நமது மனதின் எண்ண அலைகளின் மூலம் தொடர்புகொள்ள ஒரு வடிவம் சாமான்ய மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வடிவம் தேவைப்படுபவர்களுக்கு அது தெய்வம் தேவைப்படாதவர்களுக்கு அது இயற்கை என்பதே உண்மை. நமது எண்ண அலைகளை ஒரு வடிவத்தின் மீது குவிக்கும்போது இயற்கையுடன் மனிதன் அந்த வடிவத்தின் மூலம் தொடர்புகொள்கிறான் என்பதை சில அபூர்வமான அறிவியல் ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.    

குல தெய்வம்.

குல தெய்வம் என்பது பயத்தின் பொருட்டு உருவான கதைகளின் அடிப்படையில் மேலே கூறப்பட்டவை போன்று உருவானதல்ல. குல தெய்வம் என்பது தனித்துவமானது.  குல தெய்வம் என்பது தங்கள் கூட்டத்தின் பொருட்டு எதிரிகளோடு நடந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களையும், தனது குலத்திற்கு, தனது குடும்பத்தின் நலனின் பொருட்டு தனது உயிரை, வாழ்வை தியாகம் செய்தவர்களே அந்த குலத்தின் (கூட்டத்தின்) தெய்வங்கள் என அழைக்கப்படுகிறது. குல தெய்வத்தோடு அந்த குலம் காக்க உயிர்நீத்த வீரர்களையும் காவல் தெய்வங்கள்  என்று வணங்குவது நடைமுறை. இந்த தெய்வங்கள் நமது வாழ்வோடு ஒன்றியவை. எனவே இவைகளின் ஆன்மாவிற்கு அந்த குலத்தை காக்கும் சக்தி உண்டு. முறையாக வழிவழியாக ஏற்படுத்தப்பட்ட வழிபாடுகளின் அடிப்படையில் நன்றி செலுத்தும் உணர்வோடு குல தெய்வத்தை வணங்கினால்  ஒருவரின் துயர் தீர்க்க விரைந்து வரும் தெய்வம் குல தெய்வமாகும். ஒருவரின் துயர் தீர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் தெய்வம் குல தெய்வமாகும்.

தமிழர்களின் தெய்வம் முருகன்.

நமது தமிழ் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவான தெய்வமாக முருகன் வழிபடப்படுகிறார். ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் பண்டைய காலாசாரத்தின் விடிவெள்ளியாக விளங்கிய தன்னிகரற்ற தலைவனே முருகன் ஆவார். மலைகளிலும் காடுகளிலும் தமிழர்கள் குழுக்களாக வசித்த பண்டைய காலத்தில் தோன்றியவராக முருகன் இருந்திருக்க வேண்டும். அப்போது தமிழ் பேசும் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரே  குடையின்கீழ் கொண்டுவர முயன்றவராக முருகன் இருந்திருக்கலாம். அதனால்தான் முருகன் குறிஞ்சி நிலத்தின் (மலையும் மலை சார்ந்த இடம்) கடவுளாக கூறப்படுகிறார். முருகன் தமிழர்களின் கலாச்சார தெய்வமாகும். குல தெய்வம் தெரியாத தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தை நாடி பிழைக்க வரும் குல தெய்வம் தெரியாத ஏனையயோரும் முருகனை குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடமாறு கூறுவதன் அடிப்படை இதுதான். மனினாக  பிறந்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த முருகனை பிற்பாடு சிவனின் மகனாக உருவகம் செய்துள்ளனர். முருகனின் வரலாற்றை நமது பண்பாட்டுக்கூறுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு ஒப்பற்ற தமிழர்களின் தெய்வ வரலாறாக தொகுத்து எழுதும் முயற்சியில் தமிழறிஞர்கள்  சிலர் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன். அரசியல் தொடர்பற்று அது நடந்தால் அது தமிழ்  சமூகத்திற்கு நல்லது. காரணம் இன்று அரசியலுக்காக தங்கள் மதத்தையும், இனத்தையும் வழிபாடுகளையும் இழிவுபடுத்திக்கொண்டு பிற மதத்திற்கு வால் பிடிப்பவர்களே தங்களை தமிழக தலைவர்களாக காட்டிக்கொள்கின்றனர். முருகன் மனிதனாக பிறந்து வாழ்ந்து மறைந்தவர். தனது வாழ்வின் சொகுசுக்காக முருகனை சந்திர குப்த விக்ரமாதித்தனின் மகனாக அவதானித்து காளிதாசர் “குமார சம்பவம்” எழுதிச்சென்ற நகைச்சுவைகளெல்லாம் வரலாற்றில் இருக்கிறது. 

கால மாற்றத்தில் குல தெய்வ வழிபாடுகள்.

இன்றைய நவீன யுகத்தில் தங்கள் வாழிடத்தை விட்டு சம்பாத்தியத்திற்காக வெளி தேசம் செல்வோர் தங்களது மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவைகளையும் இழந்துவிட்டே செல்கின்றனர். முந்தைய காலங்களில் இலங்கை, பர்மா, மலேசிய, சிங்கப்பூர் சென்றோர் அங்கெல்லாம் நமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை பரப்பினர். ஆனால் இன்று பொருளாதாரத்தின் பொருட்டு உலக மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கலந்து செயல்படும் சூழ்நிலையில் நமது இனத்தின் அடையாளம் மாறிவருகிறது. உலகின் முதன்மையான கலாச்சார தொட்டில்களில் ஒன்று தமிழ்நாடு எனும் நிலையில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காது பேணுவதற்கு பொறுப்பு உள்ளது. நமது வழிபாட்டுமுறைகளை குறிப்பாக தங்கள் துயர்தீர்க்கும் முதன்மை தெய்வமாகிய குல தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பது அவசியம்.

இன்று தங்கள் குல தெய்வம் தெரியாது ஜோதிடம் பார்க்க வருபவர்களை காணும்போது பரிதாபமாகவுள்ளது. இத்தகையவர்களுக்கு உதவ ஜோதிடம் கைகொடுக்கிறது. குலதெய்வத்தை அறிய ஜாதகத்தைவிட பிரசன்னமே மிகச்சிறந்தது என்பது எனது கருத்து.

ஜாதகம் மூலம் குல தெய்வம் அறிதல்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். 9 ஆம் பாவமும் கிரகங்களில் சனியும் (குருவும் கூட)  குல தெய்வ அனுக்கிரகத்தை கூறுகிறது. மேற்கண்ட ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆம் பாவம் பெண் ராசியாகி அதில் சூரியன் அமைந்துள்ளார். இதனால் இவரது குல தெய்வம் ஒரு பெண் தெய்வமாகும். சூரியன் 5 ல் அமைந்துள்ளதால் குல தெய்வம் ஆளுமை மிக்க தெய்வமாகும். உச்ச ராகு சூரியனின் நட்சத்திரம் கார்த்திகை-4 ல் நின்றதால் 5 ஆம் பாவத்தோடு தொடர்பாகிறார். மேலும் ராகு 5 ஆம் பாவத்தை கட்டுப்படுத்தும் பாவத்தில் உள்ளார். இதனால் ராகுவின் ஆதிக்கம் 5 ஆமிடத்தில் அதிகம். ராகு ஒரு மூர்க்க கிரகமாகும். ராகு செவ்வாயின் பார்வையை பெறும்போது அதற்கு மூர்க்க குணம் அதிகமாகும். இந்த ஜாதகரின் குல தெய்வம் பழனி  அருகிலுள்ள வீரமாத்தி அம்மன் என்பதாகும். குல தெய்வத்தில் உச்ச ராகுவின் ரௌத்ர குணம் தெரிகிறது. 5 ல் அமைந்த கிரகமே குல தெய்வத்தின் நிலையை சொல்லும் என்றாலும் ராகு சூரியன் சாரம் பெற்றதால் சூரியன் இங்கே தனது ஆதிக்கத்தை ராகுவிடம் இழந்துவிடுகிறார். குல தெய்வ பாக்கியத்தை குறிக்கும் 9 ஆமிடத்தில் வீரத்தை குறிக்கும் செவ்வாயின் பார்வையை வாங்கும் ராகு, குலதெய்வத்தின் பெயரிலேயே செவ்வாயின் தன்மையை ஏற்றுக்கொள்கிறார். ராகு தனித்திருப்பதால் அது பார்க்கும், சேரும் கிரகங்களின் நிலையையே வெளிக்காட்ட வேண்டும் என்ற விதி  இங்கு செயல்படுகிறது.

சூரியன் இரட்டைத்தன்மையை குறிக்கும் புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். எனவே குல தெய்வ வழிபாட்டில் மற்றொரு அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த ஜாதகர் பாரம்பரையில் குழந்தை பிறந்ததும் குழந்தையை சூரியனுக்கு முன் வைத்து வணங்கி ஆசி பெற வேண்டும் என்ற மற்றொரு வழிபாட்டு முறையையும் காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஜாதகம் இதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

பிரசன்னம் மூலம் குல தெய்வம்  அறிதல்.

குல தெய்வம் என்னவென்று உறுதியாக தெரியாமல் இரண்டு தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். இதுபற்றி விபரமறிந்த எங்கள் முன்னோர்கள் வழியில் தெளிவான நபர்கள் யாரும் இல்லை. எனவே வழிகாட்டுங்கள் என்று எங்கள் ஊர் நண்பர் வந்தார். ஜாதகம் இல்லாத சூழலில் அவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.



ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ அனுக்கிரகத்தை உதயத்தில் இருக்கும் கிரகம் சொல்லிவிடும். ஆனால் குல தெய்வத்தை கூறுமிடம் 5 ஆமிடமும் 9 ஆமிடமும் ஆகும். ஒன்பதாமிடம் ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ நிலையை தெளிவாகக்காட்டும். இந்த பிரசன்னத்தில் உதயத்தில் உள்ள உதயாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக உள்ளார். எனவே ஜாதகருக்கு குல தெய்வ பாக்கியம் சிறப்பாக உள்ளது. ஆரூடம் இரட்டைக்கிரகம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் இருவித  தெய்வங்களை  வணங்கி வருவதாக ஜாதகர் கூறியது சரியாகும். ஒன்பதாம் பாவத்தில் பாம்பு, குருவின் சாரம் புனர்பூசம்-2 பெற்று  பாம்பின் சாரநாதன் குரு உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் நீசமாகியுள்ளது ஜாதகருக்கு குலதெய்வத்தின் பொருட்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ஆம் பாவத்தை ஜாம மற்றும் ஜாதக புதன் ஆகிய இரண்டும் பார்ப்பதால் குல தெய்வ வழிபாடு தொடர்வதையும் அதில் இருவித வழிபாடுகளாக இருப்பதையும் அறிய முடிகிறது. புதனுடன் பாதகாதிபதி சூரியன் உள்ளதாலும் உதயத்தை உச்சம் பெற்ற பாதகாதிபதி சூரியன் பார்ப்பதும் குழப்பத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இந்த பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களான சூரியன் மற்றும் குரு ஆகியவை ஜாதகரின் சந்தேக மன  நிலையை தெளிவாக காட்டுகிறது.

இந்த பிரசன்னத்திற்கு நான் கூறிய பதிலானது.

9 ஆம் பாவத்தில் உள்ள பாம்பு வடிவமே குல தெய்வத்தின் அம்சமாகும். 9 ஆமிடத்தை இரு புதனும் பார்வையிடுவதால் பெருமாளையும் வழிபடுகிறீர்கள். எனினும் 9 ல் உள்ள பாம்புதான் குல தெய்வம் எனக்காட்டுகிறது என்று கூறினேன்.

நண்பர் தாராபுரம் அருகிலுள்ள பாம்பலத்தம்மனை தங்கள் பங்காளிகளுடன் இன்றும் வழிபட்டு வருவதாகவும் தற்போது உள்ள ஊரின் (கரூர் அருகிலுள்ள வெள்ளியணை)  பிரதான தெய்வமாகிய பெருமாளையும் வழிபட்டு வருவதாகவும் கூறினார்.

நண்பர் பாம்பலத்தம்மன் என்று கூறியதும் அடியேன் சிலிர்த்துப்போனேன். பிரசன்னம் துல்லியமாக பதிலை கூறிவிட்டது. சொந்த ஊரை விட்டு விலகி பிழைக்க வந்த ஊரைத்தான் 3 ஆமிடம் குறிக்கிறது. எனவே ஒரு ஊரை நம்பி வாழ வந்தவர்கள் அந்த ஊர் தெய்வத்தை முக்கியமாக வழிபட வேண்டும் என்ற வகையில் பெருமாளை வழிபடுவதை மூன்றாமிடம் கூறுகிறது. எனவே உங்களுக்கு இரு தெய்வ அனுக்கிரகமும் உண்டு. இரு வழிபாடுகளையும் தொடர்வது நன்மையே எனினும்  பாம்பலத்தம்மனே குல தெய்வம் என்பதை உங்கள் தலைமுறையினருக்கு சொல்லி வழிபட்டுவர சொல்லுங்கள் அதன் நன்மை அளப்பரியது என்று கூறி அனுப்பிவைத்தேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment