Friday 12 March 2021

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

 


நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன் எதிர்மறையாகவும் செயல்பட்டு வளர்ச்சியை அடையக்கூடியது. சுக்கிரனின் இந்த எதிர்மறைத்தன்மையால் தமிழ்நாட்டு மக்களாகிய நமக்கெல்லாம் பொதுவாகவே ஒரு எதிர்மறை சிந்தனைகொண்டவர்கள்தான். தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயர் மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கேதுவின் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டது. கேது மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம்,  நேர்மையான நீதி நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மருத்துவத்துறையின், ஆன்மீகத்துறையின், ஜோதிடத்துறையின் எழுச்சி ஆகியவை கேதுவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டதை தெளிவாக உணர்த்துகிறது. எனவே கேதுவின் ஆதிக்க காலமான இன்றைய நிலையில் இனி திரைத்துறையோடு தொடர்புடையவர்கள் தமிழகத்தை ஆள நினைத்துப்பார்க்கவே இயலாது. இதை எதிர்வரும் தேர்தலில் திரைத்துறை வேட்பாளர்கள் அடையும் தோல்வியிலிருந்து உணரலாம். சுக்கிரன் பாவிகள் தொடர்பு, சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் ஒருவர் நேர் வழியில் செயல்பட்டு அடைய முடியாத தனது விருப்பங்களை லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் சென்று நிறைவேற்றிக்கொள்வதை குறிக்கும். அப்படி பாவிகள் தொடர்பு பெற்ற சுக்கிரனின் செயல்பாட்டிற்கு ஒருவரது ஜாதகத்தில் உள்ள வக்கிரம் பெற்ற கிரகங்களும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் உதவுகின்றன. இக்கருத்தை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவதே இன்றைய பதிவு.


 

ஜாதகர் 1962 ல் பிறந்த ஒரு ஆண். இவர் அரசுத்துறையில் பணிபுரிந்து கடந்த 2020 பிற்பகுதியில் பணி ஓய்வு பெற்றவர். ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமானாலும் அவர் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாய் நீசமாகிவிட்டதால் ஜாதகர் நேர் வழியில் முயன்று தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலாது. சந்திரன் பரிவர்தனைக்குப்பிறகு ராகுவோடு தொடர்பாவதாலும் இவர் மனம் ராகுவின் குறுக்கு வழி சிந்தனையை நாடும். நேர் வழி முயர்ச்சிகளை ராகு தடை செய்வார். குறுக்கு வழியை ராகு தடை செய்ய மாட்டார். லக்னாதிபதி நீசமாகி ராகுவோடு இணைந்து நிற்பதால் குறுக்கு வழிக்கு ஜாதகர் முயல்வார் ஜீவன காரகன் சனியும் மூன்றாமிடத்தில் அமைந்திருப்பது சிறப்பே. ஜீவன விஷயங்களில் கேதுவின் நேர்மைத்தன்மை வேண்டும் என்பதை இது குறித்தாலும் ராகு-கேதுக்களோடு தொடர்பான சனியை நீச செவ்வாய் பார்ப்பதால் ஜாதகருக்கு நேர் சிந்தனையை விட குறுக்கு சிந்தனைகளே அதிகம் வெற்றி தரும். 1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு லாப ஸ்தானத்தில் இணைத்துள்ளது. இதனால் ஜாதகர் அரசுத்துறையில் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் மற்றும் வரி வசூல் சார்ந்த துறைகளில் ஜாதகர் பணி புரிந்தார். 1௦ ஆமதிபதி சூரியனானதால் அரசுத்துறையிலும் சூரியன் புதனோடு இணைந்ததால் திட்டமிடல் துறையிலும் ஜீவன காரகர் சனி ராகு கேதுக்களோடு தொடர்பானதால் வரி வசூல் துறையிலும் ஜாதகர் பணி புரிந்தார்.   1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு இணைந்துள்ளது  ஜாதகரின் பணியில் நேர்மையான நண்பர்களை விட குறுக்கு வழி ஆசாமிகள் அதிகம் உடன் வருவர் என்பதை உணர்த்துகிறது.  

லக்னாதிபதி நீசமானதால் ஜாதகர் ஆளுமைத்தன்மை இல்லாதவராக செயல்பட்டார். நீச செவ்வாய் பாதக ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்பானதால் ஜாதகரிடம் பொதுவாகவே ஒரு பயந்த சுபாவம் உண்டு. இவரால் தனது துறையில் தவறு செய்யும் பணியாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ஜாதகரின் இந்தத்தன்மையால் ஜாதகருக்கு பணி ஆண்டுகள் அடிப்படையில் தன் துறை சார்ந்த வகையில் முதன்மை இடத்திற்கு முன்னேற தகுதி இருந்தும்  இவரை முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல அரசு நிர்வாகம் தயங்கியது என்றே சொல்லலாம். ஜோதிடத்தில்  உத்தியோக உயர்வை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். ஒன்பதாம்  பாவமே ஜாதகருக்கு பாதக ஸ்தானமாகவும் அமைந்துவிட்டதால் உத்தியோக உயர்வில் ஜாதகருக்கு பாதகம் ஏற்படும் என்பதை இவரது லக்னமே குறிப்பிடுகிறது. ஜாதகருக்கு வேலை பாவமான 6 ஆம் பாவம் மேஷத்தில் சந்திரன் லக்னத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-3 ல் நிற்கிறார். இதனால் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் ஏற்பட்ட தொடர்பால்  சந்திரனின் திசையில் 6 க்கு லாபத்தில் நிற்கும் குருவின் விசாகம்-4 ல் விருட்சிகத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் ஜாதகருக்கு அரசுப்பணி கிடைத்தது. ஜாதகருக்கு கடந்த 2019 பிற்பகுதி வரை குரு திசையில் கேது புக்தி நடந்தது. குரு வேலை பாவமான 6 க்கு லாபத்தில் நிற்கும் அதே சமயம் அது 6 ன் பாதக ஸ்தானம் என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் குரு திசை ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு குரு திசையில் கேது புக்தி 2020 பிற்பகுதி வரை நடக்கிறது. கேது உத்தியோக உயர்வை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சந்திரனின் திருவோணம்-1 ல் அதே திருவோணம்-1 ல் உள்ள சனியுடன் இணைந்து இருந்தாலும் 9 ஆமிடம் பாதக ஸ்தானமாக வருவதாலும் உத்தியோக உயர்வுகளில் தடையும் மறுப்பும் ஜாதகருக்கு ஏற்பட்டது. கேது புக்தியை அடுத்து வரும் சுக்கிர புக்தி வருமான பாவமான 2 ன் விரையமான லக்னத்தில் இருப்பதால் சுக்கிர புக்தியில் ஜாதகர் பணி ஓய்வு பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 ல் உள்ள ராகுவும் உத்தியோக உயர்வில் தடைகளையே கொடுத்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஆனால் ராகு முன் சொன்னபடி முறையான வழியில் செயல்படுவதை தடை செய்வார். முறையற்ற வழிகளில்  செயல்பட தடை செய்ய மாட்டார். இதனால் உத்தியோக உயர்வை முறையாக பெற இயலாது என்பதை புரிந்துகொண்ட ஜாதகர் உத்தியோக உயர்வுக்காக லஞ்சம் கொடுத்து பணி உயர்வு பெற்றார். பணி ஏற்ற சில மாதங்களில் குரு திசையில் சுக்கிர புக்தி வந்ததும் பணி ஓய்வும் பெற்றார்.

இந்த ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டதை கிரகங்கள் சுட்டிக்காட்டினாலும் அவர் குறுக்கு வழியில் சென்று பணி உயர்வு பெறவும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் இதர வக்கிர கிரகங்களான புதனும் குருவும் இணைந்து செயல்பட்டுள்ளன. புதன் லஞ்சப்பணத்தை மேலிடத்தில் கொண்டுசேர்க்கும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் லஞ்சத்தின் காரக கிரகமாகும். இவைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் ஜாதகர் குறுக்கு வழியில் உத்தியோக உயர்வு பெற்றார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment