Friday 26 March 2021

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

 

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது புதியவர்களுக்கு புதிய கோணங்களில் வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நீண்ட காலம் ஒரு துறையில், ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து ஒரு சூழலில் பணிமாறுதலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  காரணம் பணி மாறுதல் என்பது தனி மனிதனுக்கு சாதாரண மாறுதல் மட்டுமல்ல அது ஒருவரது வாழ்க்கையின் சூழலையே மாற்றியமைக்கக்கூடியது. அத்தகைய மாறுதலின் பொருட்டு ஒருவர் தனது உழைப்பை, சம்பாத்தியத்தை, குடும்பத்தை பணயம் வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு பாதுகாப்பான எந்த சூழலும் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிரந்தரமான ஊதியத்தை தரும் என்று சொல்லப்படும் அரசு உத்யோகத்தில் கூட லஞ்ச, லாவண்யங்களாலும், பாலியல் சீண்டல்களாளும், திறமையின்மையினாலும் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது தனது வேலையை அல்லது வேலை சூழலை ஒருவர் மாற்றவேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நிலையில் வேலையில்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மன நிலையில் இருப்போர்க்கு ஜோதிடம் எவ்வாறு உதவ முடியும் என்பதை அலசுவதே இப்பதிவின்  நோக்கம்.

ஜோதிடத்தில் மாற்றத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாவார். சந்திரன் சனியோடு தொடர்புகொள்ளும் சூழலில் ஒருவர் பணி மாற்றத்தை சந்திக்கிறார். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த திசை, புக்தி நடந்தாலும் ஏழரை சனியில் குறிப்பாக ஜென்மச்சனியில் ஒருவர் தனது ஜீவன சூழலை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஜீவன காரகன் சனி  தனது ஆதிக்க காலத்தில் மாற்றத்தின் காரகன் சந்திரன் மேல் கோட்சாரத்தில்  செல்லும் காலம் தரும் பணி மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.




1973 ல் பிறந்த இவர் தன் பணியில் தனக்குள்ள தனித்திறமையால் தன் திறமைக்கேற்ற நல்ல சூழலில் வேறு ஒரு நாட்டில் பணிபுரிய விரும்புகிறார். இதற்கேற்ற சூழல் ஜாதகத்தில் உள்ளதா என ஆராய்வோம். ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் நீசமாகி சனியோடு இணைந்து நீச பங்கமும் ஆகியுள்ளார். இது பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியை தரும் அமைப்பே ஆகும். எனவே ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர இன்னும் சில காலமாகும். ஜாதகருக்கு சுக்கிர திசையில் குரு புக்தி 2022 இறுதி வரை நடக்கிறது.  சுக்கிரன், குரு இருவரும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திசா நாதனை மீறி புக்தி நாதன் செயல்பட இயலாது. சுக்கிரனும் குருவும் சந்திரனின் சாரத்திலேயே (சுக்கிரன் ரோஹிணி-1, குரு திருவோணம்-3)  உள்ளதால் இவர் பணி மாறுதலை விரும்புகிறார். மேலும் முதலாளி அல்லது முதன்மை நிர்வாகியை குறிக்கும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் குறைந்த பாகை  பெற்று (சூரியன் 3 பாகை 1௦ விகலை) நிற்கும் ஜாதகத்தினருக்கு தனது நிர்வாகியிடம் எவ்வளவு சிறப்பாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாவச்சக்கரத்தில் சுக்கிரன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் மேஷத்தில் நிற்பதால் இவருக்கு தான் பணிபுரியுமிடத்தில் அதிருப்தி உள்ளது. ஆனால் திசை மற்றும் புக்தி நாதர்கள் தற்போது சிறந்த பொருளாதார உயர்வை வழங்கும் நிலையில் இல்லை. எனவே ஜாதகர் அவசரப்பட்டு வேலையை விடுவது நன்மை அளிக்கும் முடிவல்ல.

ஒரு நேர்முகத்தேர்வின் முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளேன். அந்த வேலை கிடைக்குமா என கேட்ட நபருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் ஆரூடமும் கவிப்பும் உள்ளது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமாகியுள்ளது. இது ஜாதகர் வேலையில் ஒரு உயர்வான நிலையை நோக்கி செல்லும் எண்ணத்தில் உள்ளதை காட்டுகிறது. வேலை கேட்பவர் உதயாதிபதி என்றால் வேலை கொடுப்பவர் 7 ஆமதிபதி ஆவார். உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் தடையை குறிக்கும் ராகுவிற்கு நெருக்கமாக சென்றுகொண்டுள்ளார். அதே சமயம் ஜாம செவ்வாய் (வெளி வட்ட செவ்வாய்)   வேலை பாவமான 6 க்கு விரையத்தில் மீனத்தில் நிற்பது ஆகியவை சிறந்த அமைப்பல்ல. வேலை தர தயாராக இருப்பதாக சொல்லும் 7 ஆமதிபதி சுக்கிரன் வெளி வட்டத்தில் விரையத்தில் உள்ளது. உள்வட்டத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 1௦ ஆமதிபதி சூரியனுடன் நெருக்கமாக அஸ்தங்கமாகி நிற்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதி சுக்கிரன் ஆகிய இருவருக்கும் இடமளித்த மீனத்தில் அதிபதி குரு உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நீசம் பெற்று நிற்பது, வேலை தருபவர் இவர் எதிர்பார்க்கும் சிறந்த சம்பளத்தை தர மாட்டார் என்றே குறிப்பிடுகின்றன. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமானாலும் உள்வட்ட சூரியனின் பலமே ஜாம சூரியனுக்கு செயல்பாட்டு வலுவைத்தரும். உள்வட்ட சூரியன் வேலை பாவத்திற்கு விரைய  பாவத்தில் நிற்கிறது. இந்த நிலை ஜாதகருக்கு ஊதிய உயர்வை தர தங்கள் நிறுவனத்திற்கு மாறுதலாகி வந்தால் சாத்தியம் என சொல்லும் நபர் ஜாதகரை வேலையை இழக்க வைத்து பிறகு தங்கள் எண்ணப்படி சொல்லும் ஊதியத்திற்கு இணங்க வைக்கும் முயற்சி உடையவராக  இருக்ககூடும் என்பதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடத்தில் உள்ள கவிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே வேலை அளிப்பதாக சொல்லும் நிறுவனத்தை நம்பி பார்க்கும் வேலையை விட்டுவிட்டால் பிறகு பாதிப்படைவது உறுதி என்பது புலனாகிறது. உச்சமான ஜாம சூரியன் உதயத்தை தொடும் காலத்தில் ஜாதகருக்கு உத்யோக உயர்வு காத்துள்ளது. அதுவரை ஜாதகர் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்க சொல்லப்பட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment