Saturday 24 July 2021

மகனின் திருமணம்…

 ஜாமக்கோள் ஜாலங்கள் – 11


பிரசன்னங்களில் பல வகைகள் உண்டென்றாலும் ஜாமக்கோள் பிரசன்னம் ஒரு தனிச்சிறப்பு மிக்கது. பல்வேறு வகை பிரசன்னங்களில் (36 வகை பிரசன்ன முறைகள் உள்ளதாக கூறப்படுகிறது) தமிழ் நாட்டில் தோன்றிய ஒரே பிரசன்ன முறை ஜாமக்கோள் பிரசன்னமாகும். இதர வகைகள் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தோன்றியவை. இதர பிரசன்ன முறைகளில் இருந்து கணித முறைகளிலும் பலன் எடுக்கும் முறையிலும் முற்றிலும் மாறுபட்டது ஜாமக்கோள் பிரசன்னமாகும். இந்த ஜாமக்கோள் பிரசன்னத்தில் சொல்லமுடியாத விஷயங்களே இல்லை எனலாம். இதர பிரசன்ன வகைகளை விட துல்லியமான பலன்களை தனக்குள் பொதித்து வைத்திருக்கும் புதையல் இது. அவற்றைக் கண்டுபிடித்து அள்ளிக்கொள்வதே நமது வேலை. ஜோதிடம் ஒரு சாகரம் என்றால் இந்த ஜாமக்கோள் பிரசன்னக் கடலில் எவ்வளவு ஆழம் மூழ்கிறோமோ அந்த அளவு முத்தெடுக்கலாம். நான் பார்த்து பிரம்மிக்கும் ஜாமக்கோள் பிரசன்னத்தின் அதிசயங்களை தொடர்ந்து எழுதும்படி எனது மாணவர்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது  ஜாமக்கோள் பதிவு வரிசையில் 11 ஆவது பதிவாக இந்தப் பதிவு அமைகிறது.  

எனது மகனுக்கு 32 வயதாகிறது. எப்போது திருமணம் என்று கவலையுடன் ஒரு தாய் என்னை அணுகினார். அதன் விளைவே இப்பதிவு. இப்பதிவில் பாவாதிபதிகள் என அழைக்கப்பெறும் கிரகங்கள் அனைத்தும் உதயம் முதலாவதாகக்கொண்டு அழைக்கப்படுபவை என்பதை வாசகர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.


உதயம் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்து ஆரூடம் 2.18 பாகையில் உத்திராடம்-2 ஆம் பாதத்தில் விழுந்துள்ளது. தாய் மகனுக்காக கேட்ட பிரசன்னம் இது என்பதை பிரசன்னம் உணர்த்துகிறது. கேள்வி கேட்ட தாயின் பெயர் ஜோதி ஆகும். உத்திராட நட்சத்திற்குரிய நாம எழுத்தான ‘ஜ’ வில் கேள்வி கேட்டவர் பெயர் அமைந்துள்ளது. சூரியனின் நட்சத்திரத்தில் ஆரூடம் அமைந்ததால் சூரியனின் பெயரான ஜோதி என்பது கேள்வியாளரின் பெயர் என்பதை பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கேள்வியாளர் ஒரு சுப விஷயமாக கேட்டுள்ளதை உதயத்தை குரு பார்ப்பதிலிருந்து உணரலாம். ஆரூடம் 5 ல் அமைந்து குரு உதயத்திற்கு 7ல் இருந்து பார்ப்பதால் மகனின் திருமண விஷயம் என்பதை பிரசன்னம் தெளிவாக கூறுகிறது. இனி மகனுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம் வாருங்கள்.  

தந்தையை குறிக்கும் உதயத்திற்கு 9 ஆமதிபதி சுக்கிரன் உதயத்திற்கு 4 ல் தனுசுவில் கவிப்போடு சேர்ந்துள்ளது. தந்தையின் காரக கிரகம் சூரியன் உதயத்திற்கு விரையாதிபதியாகிறார். இதனால் மகனின் திருமணம் நடக்க தந்தையின் முயற்சியைவிட தாயின் முயற்சியே பலனளிக்கும் என்பது தெரிகிறது. கவிப்பு திருமணத்தை நடத்தி வைக்கும் அல்லது தடை ஏற்படுத்தும் நபரை குறிப்பிடும். உதயத்திற்கு 4 ல் கவிப்பு தாயாரின் முயற்சியாலேயே திருமணம் நடக்க இயலும் என்பதை காட்டுகிறது. உதயதிற்கு 2 ல் உதயத்தின் 5, 6 ஆமதிபதி சனி உச்சமாகி உதயத்தை நோக்கி வருகிறது. மேலும் மேஷத்தில் செவ்வாய் அமைந்து துலாத்தில் சனி உச்சம் பெறுவது மரண ஜாமம் என்று அழைக்கப்பெறும். இதனால் குடும்ப பாவம் பாதிப்பை அடையும். 2 ஆமதிபதி கவிப்பில் அமைந்துள்ளது இதை உறுதி செய்கிறது. உள்வட்ட சனியும் உள்வட்ட குருவும் வக்கிர கதியில் இருப்பதால் மகன் திருமணதிற்கு இன்னும் சாதகமான காலம் வரவில்லை என்பதை இது காட்டுகிறது. 5 ல் நிற்கும் வக்கிர சனி 2 ல் அமைந்த உச்ச ஜாம சனியை 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதாலும் உதயம் அடுத்து 2 ஆமிட ஜாம சனியை கடந்து கேதுவை தொடுவதும் மகனுக்கு இன்னும் திருமணதிற்கு கடும் தடைகள் ஏற்படும் என்பதையே புலப்படுத்துகிறது.

1௦ ல் திக்பலத்தில் அமைந்த ஜாம சூரியன் புத ஆதித்ய யோகம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இது சிறந்த அமைப்பே.  உள்வட்ட சூரியன் சந்திரனின் வீட்டில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும். சந்திரனின் காரக தொழிலில் புதனின் தன்மையும் கலந்திருக்கும். மகன் அலைந்து திரிந்து (12 ஆமதிபதி சூரியன் சந்திரன் தொடர்பு) வேலை செய்பவர் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. மகன் சந்திரனின் காரகமான உர விற்பனை  பிரதிநிதியாக வேலை பார்க்கிறார் என தாய் கூறினார்.  ஆனால் வேலையே மகனின் திருமணத்திற்கும் தடைபோடும் அமைப்பு என்பதை 2 ல் அமைந்த உச்ச சனி காட்டுகிறது. உதயம் முதலில் தொடுவது உச்ச சனியைத்தான். உச்ச சனியின் தடை, தாமதங்களை கடந்து அதற்கு அடுத்து கேதுவைத்தான் தொடவுள்ளது. அதுவும் தடையைத்தான் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் மகனின் திருமணம் நடக்க சாதகமான சூழல் தற்போது இல்லை என்பதையே காட்டுகிறது.

கேள்வியாளர் கேட்டது மகனின் திருமணத்தைப்பற்றி. பிற்பாடு மகனின் ஜாதகத்தை தேடி எடுத்து அனுப்பினார் இந்தப்பெண்மணி. மகன் மகர லக்னம், கன்னி ராசி. இதை ஜாமக்கோள் பிரசன்னத்தில்  உதய, ஆரூடம் சுட்டிக் காட்டிவிட்டது. இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் மகிமை. இக்கலையை எனக்கு புகட்டுவித்த எனது குருமார்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment