Friday 22 March 2013

சிட்டுக்குருவி



அக்ரஹாரத்து ஞாபகங்கள்


                                  


 நான் ஒன்றும் பெரிய இயற்கைவியலாளன் அல்ல. சாதரணமான இயற்கை நேசன். மழைத்துளிகளின் சில்லிடல்களை , சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களின் கொஞ்சல்களைக் கண்டு  ரசிக்கும் சராசரி மனிதனே.  கடந்த காலங்களின் சிறுவயதில் கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி   ஒவ்வொரு மனிதனுக்கும் நன்கு பரிச்சயமாகும் முதல் சிறு பறவையினம் என்றால் அது நிச்சயம் சிட்டுக்குருவிதான். 

எனது பால  பருவத்தில் வெள்ளியனை (எங்களது கிராமம்) ஆக்ரஹாரத்தின் வீடுகளில் பயமின்றி என்னருகில் வந்து தானியங்களை உண்டுவிட்டுச் செல்லும் சிட்டுக்குருவிக் கூட்டங்களையும் அவை தங்களுக்குள் கொஞ்சிக்கொள்வதையும், உணவூட்டிக்கொள்வதையும் கண்டு மிகவும் ரசித்திருக்கிறேன். தெருக்கோடியிலிருக்கும் கோவில் மாமி வீட்டின் வாதநாராயணா மரங்களில் குழுமியிருக்கும் சிட்டுக்குருவிகளை ரசிப்பது எனது பிடித்தமான சிறுவயது பொழுது போக்கு. எங்கள் ஆக்ரஹாரத்தைத் தாண்டியிருக்கும் காக்கேணி(கால் கேணி) வயல்வெளியைச் சுற்றியிருக்கும் முருங்கை மரப்பூக்களில் தேனருந்த வரும் தேன்சிட்டுகளுடன்  தேன் எடுக்க சிட்டுக்குருவிகளும்  போட்டிபோடுவதை ஆர்வத்துடன் ரசித்திருக்கிறேன். அவை மழையில் நனைந்து உடலைச் சிலுப்பும் பாங்கைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கிறேன். 

உலகில் சிட்டுக்குருவியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காரணம், அது உணரும் சுதந்திரம். ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என கவிஞர்கள் எவ்வளவு சிலாகித்திருக்கிறார்கள் நமது திரைப்படப் பாடல்களில்?

ஆக்ரஹாரத்தின் நுழைவில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் பின்புறம் அமைந்திருக்கும் மரங்களில் சிட்டுக்குருவிகள், மைனா உள்ளிட்ட  எண்ணற்ற பறவையினங்கள் மாலைப்பொழுதில் வந்து அடைவதை பார்க்க, அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. சில பேராசைக் காவல்துறையினரின் துப்பாக்கிகளுக்கு பல மைனாக்கள் பலியானவுடன் பறவையினங்கள் தங்கள் தங்குமிடத்தை  நூலகத்திற்கும் பள்ளி மைதானத்திற்கு  மேற்கில் இருக்கும் ‘தலைவர் ‘(பெருமாள் கோவில் அறங்காவலர்  குழுத்தலைவர்) தோட்டத்து தென்னை மரங்களுக்கு மாற்றிக்கொண்டன. 

தலைவர் தோட்டத்து தென்னந்தோப்பு பலவகைப் பறவையினங்களுக்கு ஒரு சொர்க்கபுரி என்றால் அது மிகையில்லை. திணை, கம்பு போன்ற சிறு தானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் உணவு. சோளம் போன்ற பெரிய தானியங்களை உண்பதற்கு அவற்றின் உடலமைப்பு இடங்கொடுக்காது. இப்போது எங்கள் பகுதியில் இவ்வகை தானியங்களை யாரும் அதிகம் பயிரிடுவதில்லை. இதனால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல பல பறவையினங்கள் எங்கள் பகுதிகளில் இப்போது தென்படுவதில்லை. இதுமட்டுமல்ல செல்பேசிக் கோபுரங்களிளிருந்து  வரும் கதிர்வீச்சுக்களும்  சிட்டுக்குருவிகளின் உயிருக்கு உலை வைப்பதாக நம்பப்படுகிறது. 

சிட்டுக்குருவிகளுக்கு ஒரு தினத்தை (மார்ச் 20 சர்வதேச சிட்டுக்குருவி தினம்!) கடைபிடிக்குமளவு நாம் எவ்வளவு தூரம் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருந்து விலகி வந்திருக்கிறோம் என்ற உண்மை எனது விழியோரத்தை நனைக்கிறது. சிறுவயதில் நானறிந்த சொர்க்கம் என் கண்முன்னே களைந்து கொண்டிருக்கிறது. சிட்டுக்குருவிகளும் பட்டாம் பூச்சிகளும் இல்லாத உலகத்தில் நான் வாழ்கிறேனே, இதைவிட ஒரு நரகம் வேண்டுமோ இறைவா! என கதறத்தோன்றுகிறது.

தொலைக்காட்சியில் குன்னூர்ப் பகுதி வியாபாரிகள் தங்கள் கடைகளில் சிட்டுக் குருவிகள் தங்க வைக்கோல் மற்றும் அட்டைப்பெட்டி கொண்டு கூடு கட்டி வைத்திருப்பதைக் காட்டினார்கள். முடிந்தவர்கள், கிராமப்புர அன்பர்கள் முயற்சிக்கலாமே.

பள்ளிக்கூட வயதுகளில் உண்டிவில்லை எடுத்து விளையாட்டாய் சிட்டுக்குருவிகளை வீழ்த்த முயன்றிருக்கிறேன். இப்போது அதுபோன்ற விபரீத விளையாட்டுக்களில்லை சிட்டுக்குருவிகளே! திறந்த மனத்துடன் என் சிறு வயதைவிட மேலும் அதிகமாக உங்களை நேசிக்கிறேன். எனக்கு செல்பேசிகளும் தொலைக்காட்சிகளும் வேண்டாம் என்னிடம் திரும்பி வந்து விடுங்களேன்!

அன்பன்,
பழனியப்பன்.

No comments:

Post a Comment