Sunday 10 March 2013

கடவுளும் மனிதனும்


பகுதி:1       

                                                                                குருவணக்கம் 







மஞ்சுக்குடி எனும் ஒரு எளிய கிராமத்து அக்ரஹாரத்தில் அவதரித்த இம்மகானைப்பற்றி அறியும் வாய்ப்பு எனது நண்பரும் கோவையில் பிரபல ஆடிட்டருமான திரு.வெங்கட்டரமணன் - பானுமதி தம்பதியரால் எனக்குக் கிட்டியது நான் செய்த பாக்யமே.  அர்ஜுனனுக்கு சாரதியாய் விளங்கிய கண்ணனைப் போல் நமது நல்வாழ்வுக்கு சாரதியாக இம்மகான் விளங்கி வருகிறார். நமது தர்மத்தைத் தழைக்கச் செய்ய தமது நல் வாழ்வை சிறு வயதிலேயே துறந்து இறை பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழகம்,ரிஷிகேஷ், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இம்மகானின் ஆஸ்ரமங்களின் மூலம் இந்த தள்ளாத வயதிலும் நமது சனாதன வேத தர்ம நெறிகளை பரப்பிக்கொண்டிருப்பவர். பல்வேறு கல்வி நிலையங்கள், பெண்கள் மற்றும் ஏழை எளியோர்களுக்காண வாழ்வாதார அமைப்புகளை ஏற்படுத்தி செயல்படுத்திவருபவர். வாழும் தெய்வமான இம்மகானை இந்தச் சிவராத்திரி நன்னாளில் வணங்கி எனது இத்தொடரை எழுதத் துவங்குகிறேன். நமது நெறிகளைப்பற்றி இத்தொடரில் நான் கூறும் கருத்துகளில் உள்ள நிறைகள் இம்மகான் போன்ற நமது முன்னோர்களைச் சார்ந்தது. பிழைகள் முழுக்க என்னையே சார்ந்த்தது.


மகான் தயானந்த சரஸ்வதி அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு கீழுள்ள இணைபைச் சுட்டவும்

    



சனாதன தர்மத்தின் தோற்றம்,  உபநிஷத்துக்கள் மற்றும் வேதங்கள் 

பல ஆண்டுச் சிந்தனை இது. இது  போன்ற தீவிர விஷயங்களை எனது கோணத்தில் எழுத வேண்டும் என்பது. ஒரு பெரும் தொடராக அவ்வப்போது வரும். என்னுடன் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கு வாசகர்களை அழைக்கிறேன்.

 எனது சிறுவயது முதல்  நானறிந்த  நமது வேத தர்ம வழிபாட்டு முறைகளுக்கும்  தற்போதைய காலகட்டத்தில் அவை பார்க்கப்படும் முறைகளுக்கும் உள்ள விகிதாச்சார இடைவெளி மிக அதிகம். அதுமட்டுமல்ல தவறான பிரசாரங்களிலிருந்து  நமது நெறிமுறைகளை மீட்டெடுக்க எனது பங்களிப்பை கொடுக்காமலிருப்பது நான் நடந்து வந்துகொண்டிருக்கும் வேத தர்ம வழிக்குச் செய்யும் துரோகம் என்ற எண்ணமும் ஒரு காரணம்.

எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு காலகட்டத்தில் இந்த சூரிய சந்திரர்கள் உள்ளிட்ட கோடானுகோடி நட்சத்திரங்களுடன் அமைந்த இந்த மகா பிரபஞ்சத்தைப் பதைத்தது யார்? என்ன காரணங்களுக்காகப் படைக்கப்பட்டது இப்பிரபஞ்சம்? இதன் விஸ்தீரணம் என்ன? இவற்றைப் படைத்தவன் எப்படி இருப்பான்? போன்ற சிந்தனைகள் எழும். கூடவே இவற்றைப் படைத்த அந்த ஒரு மகா சக்தியின் மீது ஒரு பிரமிப்பு ஏற்படும். அத்தகைய ஒரு மனிதன் தன் நிறை, குறைகளை குழந்தை தன்  தந்தையிடம் கூறுவது போல் அந்தச் சக்திடம் கூறி தன் வாழ்வியல் சிக்கல்களை களைய முற்படுவான்.

நமது முன்னோர்கள் இப்படிச் சிந்தித்து பல பிரமிக்கத்தக்க உண்மைகளை கண்டறிந்தனர். அதோடு அவ்வுண்மைகள் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக அமைவதையும் கண்டுபிடித்தனர். அவ்வாறு தாங்கள் கண்டறிந்தவற்றை  குறிப்புகளாக பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகள் உபநிஷத்துக்கள் என அழைக்கப்பட்டன. இத்தகைய பதிவுகளின் தொகுப்பே வேதங்கள் என அழைக்கப்பட்டன. இவற்றை இயற்றிய ஞானிகள் முனிவர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் கடைபிடிக்கக் கோரிய வாழ்வியல் மற்றும் வழிபாட்டு நேரிமுறைகளே  சனாதன தர்மம் (வேத தர்மம்) என அழைக்கப்படுகிறது. பிற்பாடு அந்நியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது நம்மை நமது தர்மத்தை பெயர்சொல்லி அழைக்க சிந்து நதிக்கு அப்பால் வாழுவோர் கடைபிடிக்கும் வழிபாட்டு முறை என்ற முறையில் சிந்து நாகரிகம் என அழைத்து பிற்பாடு அது இந்து தர்மம் என்று அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.


இம்மண்ணில் தோன்றிய அனைவருமே பிறப்பால் இந்துக்களே என்பதை யாருக்கும் நாம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில் யாராலும் பெயர்குறிப்பிட்டு தோற்றுவிக்கப்படாத, சாமான்யர்களால் உணர்ந்து கடைபிடிக்கப்பட்டு  வருவதே நமது தர்மம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல அன்னியர்களால் அழிக்க முயன்றும் முடியாமல் போனதற்குக் காரணம் இது சாமான்யர்களின் மதம்  , சாதாரண மக்களால் உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தர்மம் என்பதே இதன் தனிச்சிறப்பு.


இதிகாச புராணங்களும் மக்கள் வாழ்வில் அவை ஏற்படுத்திய தாக்கமும்

ஞானிகள் தாங்கள் அறிந்த பிரபஞ்ச, வாழ்வியல்  சூட்சுமங்களை  சாமான்ய  மனிதனுக்கு விளக்கிச்சொல்ல இயலாத அக்கால கட்டத்தில் அவர்களுக்கு இவற்றை புரிய வைக்க இதிகாச, புராணங்கள் உள்ளிட்ட கதைகள் உருவாக்கப்பட்டன. மேலும் அறிய பிரமிப்பான இத்தகைய உண்மைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த அவை இதிகாச புராண கதாபாத்திரங்களாலேயே தங்களுக்குச் சொல்லப்பட்டதாக குறிப்பிட்டனர்.

இவ்வுண்மைகள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மக்கள் தங்களின் மூதாதையர்களை வழிபடுவதோடு புராண கதா பாத்திரங்களையும் வழிபடத் துவங்கினர். புராண காதபாத்திரங்கள் தங்களையும் தங்கள் மூதாதையர்களையும் படைத்தவர்கள் என குறிப்பிடப்பட்டதால் தங்களது மூதாதையர் வழிபாட்டை விட புராண கதா பாத்திரங்களை உருவகப்படுத்தி உருவான உருவ வழிபாடு முதலிடம் வகித்து பிரசித்தமானது. இவை பிரசித்தமானதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பிரபஞ்ச இயக்க சூட்சுமங்கள் உயிரினங்களின் வாழ்வில் தாக்கத்தை   ஏற்படுத்துவதை கண்டறிந்தனர்’ என குறிப்பிட்டேன் அல்லவா?. அத்தகைய பிரபஞ்ச இயக்கங்களை  மக்கள் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை காண உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தாங்கள் கண்டறிந்த உண்மைகளிலிருந்து அதற்கான வாழ்வியல் நெறிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். ஏனெனில் நமது இதிகாச புராணங்கள் முழுமையிலும் வாழ்வியல் கருத்துக்கள் காணப்படுகின்றன. மகா பாரதத்தில் கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன கீதை, விதுரர் திருதராஷ்டிரனுக்கு உரைத்த விதுர நீதி, தர்மன் தனது தம்பிகளின் உயிரை  மீட்டெடுக்க சர்ப்பத்திற்கு சொன்ன விளக்கங்கள் என அனைத்துமே நமது வாழ்வைச் செம்மைப்படுத்த நமது முன்னோர்கள் கூறிச்சென்ற கருத்துகள்தாம்.   வேதத்தின் கண் எனக் குறிப்பிடப்படும் ஜோதிடத்தில் ஒரு உதாரணம் குறிப்பிட வேண்டுமெனில் ஆடிமாதம் புதுமணத் தம்பதிகளை பிரித்து வைக்கும் நடைமுறையைக் கூறலாம். (இது  தொடர்பான எனது பதிவை படிக்க கீழுள்ள  இணைப்பைச் சொடுக்கவும்).



 இத்தொடரின் அடுத்த பதிவில் சந்திப்போம்.


வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன். 

No comments:

Post a Comment