Sunday 17 March 2013

வேதத்தின் கண்கள் (ஜோதிடம்)


இத்தொடரின் முதல் பதிவை படித்துவிட்டு இங்கு தொடர வாசகர்களை அன்புடன் கோருகிறேன்.

கடவுளும் மனிதனும் – பகுதி:2



இப்பதிவில் வேதத்தின் கண் எனப் போற்றப்படும் ஜோதிடம் உருவான வரலாறை சிறிது ஆராய்வோம். ஆதிமனிதன் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து கண்டறிந்த உண்மைகளே வேதங்களாக உருமாறின என அறிந்தோமல்லவா? அதற்கான அடிப்படை என்ன என்பதை முதலில் அறியலாம் வாருங்கள்.


ஆதி மனிதன் சூரியன்,சந்திரர்களோடு செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி &  சனி உள்ளிட்ட 7 கிரகங்களை தனது வெறும் கண்ணால் அளவிட்டே  அறிந்து வைத்திருந்தான் . அது மட்டுமல்ல பூமி சூரியனைச் சுற்றிவரும் கிடைமட்ட அச்சுக்கு  குறுக்கு வாட்டு அச்சில் பூமியை நிலவு சுற்றிவருவதையும் தோராயமாக அறிந்து வைத்திருந்தான். அப்படி பூமியை சந்திரன் சுற்றிவரும் குறுக்கு வாட்டு அச்சில் இரண்டு இடங்களில் கிரகங்கள் வரும்போது ஒரு சலனத்திற்கு  ஆளாவதைக்கூட அறிந்து அவ்விரு இடங்களை ஒளிப்புள்ளிகள் என்ற அளவில் மதிப்பிட்டுருந்தான் . (இவ்விரு ஒளிப்புள்ளிகளே தற்போது ராகு – கேது என அழைக்கப்படுகிறது )


7 கிரகங்களை கணக்கிட்ட நமது முன்னோர்கள் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற இத்யாதிகளை  ஏன் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள வில்லை என்ற கேள்வி எழும். நன்றாக கவனியுங்கள் வியாழனின் துணைக்கோளான Canymede துனைக்கோலைக்கூட எமகண்டன் என குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம் இக்கிரகங்களில் இருந்து வரும் கதிர்வீச்சின் தாக்கம் உயிரினங்களின் மீது குறிப்பிடத்தகுந்த பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பதே.

பண்டைய மனிதன் பலகாலம் வின்வெளியை உற்று நோக்கிக்கொண்டிருந்த போது நமக்கு மிக அருகில் பிரகாசமாய்த் தெரியும் நிலவையே முதலில்  ஆராய்வதற்கு முற்பட்டான். ஒரு எண்ணிக்கையாக முழு நிலவைக் கணக்கு வைத்து என்ன ஆரம்பித்த போது ஒரு ஆச்சரியத்தை முதலில் கண்டுபிடித்தான். உதாரணமாக ஒரு மழைக்காலத்தில் இருந்து முழு நிலவை எண்ணத் துவங்கினான் எனக் கொள்வோம். அப்படி எண்ணும் போது 12 முழு நிலவு (பௌர்ணமி) கடந்த பின் 13 வது முழு நிலவு வரும் போது அவன் எந்த மழைக்காலத்தில் துவங்கினானோ அதே மழைக்காலம் மீண்டும் வருவதை கவனித்தான். அதாவது 12 முழு நிலவு கடந்தபின் மீண்டும் முதலில் இருந்து துவங்குவது போன்ற காலச் சுழற்சி. இதனடிப்படையிலேயே எப்படி இருக்கும் என்று இதுவரை எவராலும் அனுமானிக்க முடியாத பிரபஞ்சத்தை 360 டிகிரி கொண்ட ஒரு வட்டமாக உருவகப்படுத்தி அதை 30 டிகிரி கொண்ட 12 சம அளவுள்ள  ராசி மண்டலங்களாக்கினான்.        30 டிகிரி x 12 ராசி மண்டலங்கள் = 360 டிகிரி (வட்டத்தின் சுற்றளவு).

பூமி சூரியனைச் சுற்றிவரும் வட்டப்பாதையில் ஒரு  நாளைக்கு ஒரு  டிகிரி என்று வேகத்தில் நகர்ந்தால் ஒரு முழுச்சுற்றுக்கு 360 நாள்தான் ஆகும். பின் எப்படி 365.25 நாள் என மாற்றி அமைத்திருப்பார்கள் என்ற கேள்வி எழும். ஒரு குறிப்பிட்ட வானியல் புள்ளியை மையமாகக் கொண்டு பூமி சுற்றிவருவதை கணக்கிட்டார்கள். 360 டிகிரி கொண்ட வட்டப்பாதையின் துவக்கப்புள்ளியை பூமி மீண்டும் அடைய 365.25 நாட்கள் ஆவதை அறிந்ததோடு மட்டுமின்றி அது வட்டப்பதையால்ல நீள் வட்டப்பாதை எனத் திருத்தி வருட நாட்களை உருவாக்கினார்கள். வார நாட்களுக்கு கண்ணால் காணும் ஏழு கிரகங்களின் பெயர்களையே சூட்டினார்கள் என்பதை வாசகர்கள் நான் சொல்லி அறியவேண்டியதில்லை.

இதுவரை பண்டைய மனிதன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். முனிவர்கள், ரிஷிகள்  நமது முன்னோர்கள் என்ற வார்த்தையைப் நான் இப்பதிவில் இதுவரை பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்கவும். அதற்குக் காரணம் பின்வரும் கதை .

வானவெளியில் கோலோச்சும் குருவின் புதல்விக்கும் கடலரசன் என்றழைக்கப்படும் கேதுவின் புதல்வனுக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற முடிவாகியிருந்தது. புதன், வெள்ளி போன்ற ஏனைய கிரகங்கள் தத்தம் மனைவியருடனும் மந்திரிப்பிரதிநிதிகளுடனும் வந்திருந்ததால் குரு அவர்களைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்த வேளையில் குருவின் ஆஸ்தான ஜோதிடர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுவார் என குரு சற்றும் எதிர்பார்க்கவில்லை. குருவின் புதல்வி தன் முதலிரவிலேயே தன் கணவனை இழந்து விதவையாகிவிடுவாள் என்பதே அச்செய்தி. எனினும் திருமணம் இனிதே நடந்தேறியது. முதலிரவில் காலன் எப்படி தன் மருமகனை தன்னை மீறி கொன்றுவிட முடியும் என்ற ஆவேசத்தில் தன்  மகளின் நல்வாழ்வின் பொருட்டு விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சாவித் துவாரத்தின் வழியே முதலிரவு அறைக்குள் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார் குரு. பொழுது புலர்த்தது, ஜோதிடர் கூறியபடி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. குரு ஜோதிடரை அழைத்து விளக்கம் கேட்டார். அதற்கு ஜோதிடர் “குருவே தங்களின் மகத்தான பார்வையை மீறி காலனால் உங்கள் மருமகனை அணுக முடியவில்லை இதுவே காரனம்” என்றார்.

இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டியது இக்கதை நமது இந்துப் புராணங்களில் சொல்லப்பட்டதல்ல ‘இந்துப் புராணங்களில் சொல்லப்பட்டதாக திரித்துக் கூறப்படுவது’. இது கிரேக்கப் புராணத்தில் உள்ள கதை. குரு , கேது போன்ற பெயர்கள் உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக நான் பெயர் மாற்றிக் கூறியவை அவ்வளவே.  ‘குருவருள் கிடைத்தால் திருவருள்’, ‘ குரு பார்க்கக் கோடி நன்மை’ போன்றவைகலெல்லாம் குருவைப்பற்றி நாம் அனுபவித்தறியும் உண்மை. கிரகங்கள் அவற்றின் தாக்கம்,12 ராசி மண்டலங்கள் , வருட, மாதக் கணக்குகள் போன்றவற்றை முதலில் பாபிலோனியர்களும், கிரேக்கர்களுமே ஆராய்ந்து அறிந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, அவர்களும் இவற்றின் முக்கியத்தினை உணர்ந்து கிரகங்கள் உள்ளிட்ட இயற்கை வடிவங்களை புராண கதா பாத்திரங்களாக அவர்களது புராணங்களில் குறிப்பிட்டுள்ளனர்  என்பதை உங்களுக்கு புரிய வைக்கவே இக்கதையை  நான் இங்கு உங்களுக்குச் சொன்னேன். தங்களது  ஞானத்தால் அறிந்த இயற்கை  உண்மைகளோடு, வியாபாரத்தொடர்புகள் மூலம் மேற்சொன்ன பாபிலோனியர்கள் உள்ளிட்ட அந்நியர்கள் அறிந்தவைகளையும் ஒப்பிட்டு அவர்களைப்போலவே நமது சூழலுக்குத் தகுந்தார்ப்போல் நமது புராணங்களில் இயற்கை வடிவங்களை உருவகப்படுத்தியிருக்கிரார்கள் நமது முனிவர்கள் என்பதை நாம் உணரலாம்.

இனி நமது சித்தர்கள் முனிவர்களின் கருத்துக்களுக்கு வருவோம். பூமியின் சுழற்சி முறைகளை அறிந்தது  போலவே ஏனைய கிரகங்களின் சுழற்சிக்காலங்களையும் நமது ஞானிகள் அறிந்தனர். சரி, அது என்ன  60 வருடங்களுக்கு பெயர்கள் ஏன்  100 வருடங்களுக்கு பெயர்களை  வைக்கவில்லை எனக் கேட்பவர்களுக்கு, மனிதனின் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்குக் காரணமாக இருக்கும் குரு 60 ஆண்டுகளில் 5 முறையும் சனி 2 முறையும் சூரியனை சுற்றிவந்துவிடுகின்றனர்  என்பதை உணர்ந்தே 60 ஆண்டுகளை மனித வாழ்வின் காலச் சுழற்சியாக மதிப்பிட்டு 60 ஆண்டுகளுக்கு பெயரிட்டுள்ளனர் நமது முன்னோர்கள்.

சரி நட்சத்திரங்களுக்கு வருவோம் நவீன வானியல் கணக்கீட்டின்படி 88 நட்சத்திர மண்டலங்களை தற்கால அறிவியலார் வகுத்துள்ளார்கள். இப்படி இருக்க எப்படி  நட்சத்திரக் கூட்டங்களை 27 ஆக கணக்கிட்டனர் என அறிந்து கொள்வது அவசியம். விண்ணிலிருந்து வரும் கிரகக் கதிர்வீச்சுகளின் தாக்கம் அனைத்து உயிரங்களின் மீதும் ஏற்படுகிறது என அறிந்தாலும் மனிதன் அவை தங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அறியவே முதலில் விரும்பினான். அதற்காக ஒரு யுக்தியை உருவாக்கினான். ஒரு ஆரோக்கியமான பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த 28 நாட்களை 10 ஆல் பெருக்கினால் (28 ன் 10 மடங்கு) 280 நாட்கள் வரும். அதாவது ஒரு பூப்படைந்த பெண் கருத்தரித்தால் கருத்தரித்த நாளிலிருந்து 280 ஆவது நாளில் குழந்தையை பெற்றெடுப்பாள் (30 நாட்களைக் கொண்ட 9 மாதங்கள் முடிந்து 10வது மாதம் 10வது நாள் குழந்தை பிறக்கும்). நாம் முதலில் பார்த்த கணக்குப்படி 7 கிரகங்கள் மற்றும் 2 ஒளிப்புள்ளிகளைக் கூட்டி வரும் எண்ணிக்கையான 9 ஆல் இந்த 280 நாட்களை வகுத்தால் 27 வரும். இப்படித்தான் நமது ஞானிகள் சூரியன் தன் அச்சில் சுழழும் சுற்றுப்பாதையிலுள்ள நட்சத்திர மண்டலங்களை 27 ஆக அளவிட்டான். சூரியன் சுழழும் அச்சிற்கு மேல் மற்றும் கீழுள்ள நட்சத்திர மண்டலங்கள் சூரிய மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு என்பதால் சூரியன் சுழழும் அச்சின் பின்னணியிலுள்ள நட்சத்திர மண்டலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்.

இதுபோன்று ஜோதிடத்தின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் விளக்கம் அளிக்க இயலும். யார் ஜோதிடத்தில் பன்னிரெண்டு கட்டங்களை உங்களுக்கு குறிப்பிட்டார்கள்? எதற்கு முட்டாள்தனமாக 27 நட்சத்திரங்கள் என வினவுவோர்கள்  மேற்சொன்ன உண்மைகளை உணர வேண்டும்.

‘ஜோதிடம் வல்லான் வகுத்ததல்ல, வந்து சென்றவர்கள் நமது வாழ்வை புரிந்துகொள்ள அளித்துச் சென்றதே’.

நமது இதிகாச புராணங்களின் அடிப்படை ஜோதிடமே என்பதால்தான் ஜோதிடத்தை நமது  தர்மம் வேதத்தின் கண்கள் எனப் போற்றுகிறது.

மூன்றாவது பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

No comments:

Post a Comment