Sunday 6 December 2020

அப்பாவின் வேலை கிடைக்குமா?

 


திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை தற்போது கொண்டுவந்துவிட்டார்கள். இதுபோன்று வேலை அமைவது குரூரமான ஜாதக அமைப்பு என்றாலும் அதற்கும் ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஒருவரது லக்னாதிபதியை 9 ஆம் அதிபதி அல்லது சூரியன் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகர் தந்தையின் காலதிற்குப்பிறகே தனது வாழ்வில் முன்னேற முடியும். அத்தகையோர் தந்தையை விட்டு விலகி இருந்தால் பாதிப்பு குறையும். மேலும் தனது முன்னேற்றதிற்கான முக்கிய முடிவுகளை சனி ஜாதகத்தில் நன்றாக இருப்பின் சனிக்கிழமைகளிலும், சனி ஹோரைகளிலும் எடுத்தால் சிறப்பாக அமையும். மேலும்  ஞாயிற்றுக்கிழமையையும், சூரிய ஹோரையையும் தவிர்த்தால் சிறப்பு கூடும். சனியும் கெட்டிருந்தால் லக்னாதிபதி, லாபாதிபதியையும் மற்றும் ஜாதகத்தில் வலுவான கிரகம் இவற்றின் மூலம் தனது முயற்சிகளை மேற்கொள்வது சிறைப்பைத்தரும். எப்படியாயினும் சூரியனை தவிர்த்தல் நலம்.     

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 


  

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு, உச்சமான ராசியாதிபதி செவ்வாயுடன் இணைந்து நீச பங்கமாகிறார். ஜாதகத்தில் 9 மற்றும் 1௦ அதிபதிகள் சூரியனும் புதனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றனர். இது தந்தை வழி வந்த கொடுப்பிணை என்று கூறலாம். இதைத்தவிர கால புருஷனுக்கு 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குருவும் சனியும் இணைந்துள்ளதால் மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. இரண்டாவது யோகமே இதில் முதன்மையானது. சூரியன் 1௦ ஆமதிபதியோடு இணைந்து 2 ல் நின்றதால், தந்தை ஜாதகருக்கான வருமான வாய்ப்பை தமயனுக்கு வழங்குகிறார் என அனுமானிக்கலாம். சிம்மத்திற்கு 5 ஆமிடம் தனுசின் அதிபதி குருவோடு இணைவது மற்றொரு கோணத்தில் இதை தெளிவாக்குகிறது. ஜாதகர் விருட்சிக ராசிக்காரர் என்பது கவனிக்கத்தக்கது. இது ஜாதகரின் முன்னேற்றத்தைக்காண தந்தை உயிரோடு இருக்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. அப்படி எனில் தந்தை இறந்த பிறகே அவரது வேலை தமயனுக்கு கிடைக்கும். இது பாதகமான அமைப்பே. விருட்சிக ராசி இல்லை என்றால் தனது வேலையை தொடர இயலாத சூழலில் தந்தை வேலையை தமயனுக்கு விட்டுத்தருவார் எனலாம்.

1962 ல் அனுஷம்-3 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகருக்கு 1971 முதல் 7 & 1௦ க்குரிய புதன் திசை நடக்கிறது. புதன் 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையை வழங்க வேண்டும். 7 ஆம் அதிபதி என்பதால் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும். 9 ஆம் அதிபதி சூரியன் தனது வீட்டிற்கு 6 ல் பகை வீட்டில் தனது பகை கிரகங்களான சனி, கேது, லக்ன விரையாதிபதி செவ்வாயுடனும், பாதகாதிபதி புதனுடனும் இணைந்து நிற்கிறார். இது சூரியனுக்கு வலுவற்ற அமைப்பாகும். ஜாதகத்தில் ராசியாதிபதி செவ்வாய் உச்சமாகியுள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமாகவில்லை என்ற நிலையில் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியே வலுவானதாகிறது. புதன் செவ்வாயின் சாரம் அவிட்டம்-2 ல் நிற்கிறார். செவ்வாய் சிம்மத்தின் பாதகாதிபதி குறிப்பிடத்தக்கது. இதனால் ராசிக்கு 8 ஆமிடமான புதன் திசையில் ஜாதகரின் தந்தைக்கு பாதகம் ஏற்படும். ஜாதகரின் 2௦ ஆவது வயதில் ராசிக்கு 8 ஆமதிபதியான புதனின் திசையில் ராசிக்கு 9 ஆமிடத்தில் புதனின் ஆயில்யம்-3 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகர் தனது தந்தையை இழந்தார். ராகு தந்தையை குறிக்கும் சிம்மத்தின் விரையத்தில் நின்று தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தினார். 

தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்திய அதே ராகு, 1௦ ஆமிட தொடர்பையும் பெற்று 1௦ ஆமிடமான கன்னிக்கு லாபத்தில் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வேலையையும் வாங்கிக்கொடுத்தது. தந்தைக்கு திடீர் மரணம் ஏற்பட்டதால் கருணை அடிப்படையில் தந்தையின் வேலை தமயனுக்கு கிடைத்தது. 2 ஆமிடத்தில் சூரியன் அமைந்தால் அரசு வகை வருமானம் குடும்பத்திற்கு ஏற்படும். அந்த வகையில் அரசுத்துறை வங்கியில் பணிபுரிந்த தந்தை மூலமும் தந்தைக்குப்பிறகு அவரது வேலையை பெற்ற ஜாதகருக்கும் அரசு வகை வருமானம் வருகிறது. தசாம்ச லக்னம் தனகாரகன் குருவின் வீடாகி அதில் சனி நிற்பதால் தனம் சார்ந்த பணி. தசாம்ச 1௦ ஆமிடமான கன்னியை தங்களுக்குள் பரிவர்தனையான இரு தன காரக கிரகங்கள் சுக்கிரனும் குருவும் பார்க்கின்றனர். தசாம்ச பரிவர்த்தனை பாதகதிற்குப்பின் சாதகம் என்ற நிலையை குறிப்பிடுகிறது. தசாம்ச 1௦ ஆமதிபதியான புதன், லக்னத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்ப்பதால் கணக்கு, ஆவணம், பதிவுகள் தொடர்புடைய பணி என்பதை குறிப்பிடுகிறது. 


மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திப்போம்,


அதுவரை வாழ்த்துக்களோடு,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501.

1 comment: