Tuesday 29 December 2020

இன்னும் வாழ்க்கை மீதமிருக்கிறது!

 

அத்தப்பனும் அங்கயர்க்கன்னியும் பாரம்பரியமானதொரு சமூகத்தை சார்ந்தவர்கள். அத்தப்பன் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். இல்லறத்தை பொறுத்தவரை சிரமங்களற்ற வாழ்க்கை. அங்கயர்க்கன்னி தனது சமூகத்திற்கே உரிய வகையில் வீட்டை நிர்வகிப்பதில் நல்ல நிர்வாகியாக திகழ்கிறார். இவர்கள் இல்லறத்தில் விளைந்த முத்துக்களாக நல்ல குழந்தை செல்வத்தையும் பெற்றவர்கள். பொதுவாக ஒரு நல்ல சமூகத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறப்பதே ஒருவரது வாழ்வை பெரிய சிக்கலின்றி அனுபவித்துவிட பெரிதும் உதவும். இந்தக்கூற்று முழு உண்மையானால் இத்தகைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்வில் சிக்கலே இருக்கக்கூடாது. அப்படியானால் படைத்தவனுக்கு இவர்கள் வாழ்வில் என்ன வேலை?. நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாகவும் இருப்பது இன்றைய காலத்தில் அவசியம். நல்லவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிரார்கள். தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் அளிப்பது என்று நிம்மதியடைகிறார்கள்.   வல்லவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தங்களது வாழ்க்கைப்போராட்டத்தை துவங்குகிறார்கள். அவர்களுக்கு எந்தத்தோல்வி வந்தாலும் அது தங்களது இயலாமையினால் மட்டுமே என எண்ணித்துடிக்கிறார்கள். தங்களுக்கு மேலே ஒருவன் இருந்துகொண்டு தங்களை வழிநடத்துகிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதன் விளைவால் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்.



அத்தப்பன் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் நல்ல நிர்வாகியல்ல என்பதை திருமணமாகி சில நாட்களிலேயே அங்கயர்க்கன்னி உணர்ந்துவிட்டார். இதனால் குடும்ப நிர்வாகத்தோடு தங்களுக்கான வியாபாரத்தையும் தானே கவனிக்க வேண்டிய நிலையை அங்கயர்க்கன்னி உணர்ந்து அந்தப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார்.  இந்த சமயத்தில் ஒருவரது அறிவையும் பொறுப்புகளையும் மீறி விதி விளையாடும். அத்தப்பன்-அங்கயர்க்கன்னி வாழ்விலும் அது விளையாடியது. நல்லவர்களாக  இருந்துவிடுவதால் மட்டும் விதி மனிதர்களை விட்டு விடுவதில்லை. சோதனைகள் மூலம் அவர்களை வல்லவர்களாகவும் மாற்றுவதே அதன் வேலை. இப்படி வல்லவர்களாக மாறுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலைக்கு அனுபவம் என்று பெயர். அனுபவமே ஆசான். அனுபவமே இறை.

கீழே அங்கயர்க்கன்னியின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகம். லக்னாதிபதி ஆறாமிட தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இந்த ஜாதகத்தில்  இங்கு 6 ஆமிடாதிபதி சனியோடு லக்னாதிபதி புதன் பரிவர்தனையாகிறார். 6 , 1௦ இரண்டுமே பொருட்பாவங்கள் என்றாலும் தொழிலால் கடன் ஏற்படும் என்பதை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது.  லக்னத்திற்கு 7 ல் விரையாதிபதி சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெற்று நிற்கும் குரு, கணவர் வலுவற்றவர் என்பதை குறிக்கிறார். இப்படி களத்திராதிபதி அஸ்தங்கமாகி வலுவிழப்பது உபய லக்னத்திற்கு ஒருவகையில் நன்மையே. எப்படி எனில், 7 ல் சூரியன் குருவோடு இணைந்து லக்னத்தை பார்ப்பது, ஜாதகிக்கு திருமணமான பிறகு குடும்ப, தொழில்வகை நிர்வாகத்தையும் ஏற்பதால் லக்னாதிபதி வலுவடைவார். நவாம்சத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கடகத்தில் இணைந்து நிற்பது கணவன் மனைவி ஒற்றுமையை குறிக்கிறது. அதே சமயம் செவ்வாய் நீசம் பெற்று நீச சந்திரனோடு பரிவர்தனையாவதால் வலுவடைகிறது. நவாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை பெறுவதும் கணவனின் திறமை குறைவால் ஜாதகி நிர்வாகியாவார் என்பதை உறுதி செய்கிறது. லக்னப்புள்ளி உணவு காரகன் சந்திரனின் ஹஸ்தம்-4ல் அமைந்து,  சந்திரன் 1௦ ஆமிடத்தில் உள்ள சனியின் பூசம்-4 ல் நிற்கிறது. இதனால் இவர்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யும் இனிப்பு, காரம், சாக்லேட் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம். தசாம்சத்தில் 7 , 1௦ ஆமதிபதி புதன் நீசமாகி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து குரு, சூரியனின் பார்வையை பெறுகிறது. 1௦ ஆமதிபதி புதன் சந்திரனின் வீட்டில் சந்திரனுடன் இணைவதால் உணவு தொடர்புடைய தொழில் என்பதையும் சுக்கிரனும் குருவும் இணைந்த பார்வை புதனுக்கு கிடைப்பதால் இனிப்பு தொடர்புடைய தின்பண்டம் என்பதையும் இது குறிப்பிடுகிறது. கேதுவோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக புதனை பார்ப்பதால் கார வகைகளையும் இணைத்து விற்பனை செய்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது. (செவ்வாய்-காரம்). குரு நீசம் பெற்று சனியோடு பரிவர்த்தனை பெறுவதால் வருமானத்தில் தடைகள் ஏற்படும் என்பதும் இனிப்பை குறிக்கும் குரு பாதகாதிபதியானதும் மற்றொரு இனிப்பு கிரகம் சுக்கிரன் 8 ல் மறைந்ததும் இனிப்பு வகைகள் நஷ்டத்தை கொடுக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றன. ராசியிலும் தசாம்சதிலும் சந்திரன் கடகத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. குரு லக்ன பாதகாதிபதியாகி விரையாதிபதி சூரியனோடு இணைந்து 1௦ க்கு 1௦ ஆன 7 ல் நிற்கிறது. சுக்கிரன் ராசியின் பாதகாதிபதியாகி ராசிக்கு 1௦ ல் மேஷத்தில் நிற்கிறது. இதனால் இனிப்பு தொடர்புடைய வகையில் ஜாதகிக்கு லாபமிருக்காது என்பது தெளிவாகிறது.

2௦13 ல் ராசிக்கு 1௦ ல் நிற்கும் சுக்கிர திசையில் குரு புக்தியில் இந்தத்தொழிலை துவங்கி கடனுக்கு பொருள் கொடுத்து நெருக்கடிக்கிடையில்தான் இதுவரை தொழிலை செய்து வருகின்றனர். 6 ஆமதிபதியும் 1௦ ஆமதிபதியும் பரிவர்தனையாவதும் இவர் கடன் கொடுத்து வியாபரம் செய்ய காரணமாகிறது. வெளி நபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தங்கத்தின் காரக கிரகமான பாதகாதிபதி குரு 7ல் அஸ்தங்கமானதால் மாங்கல்யத்தைக்கூட அடமானம் வைத்துள்ளதாக ஜாதகி கண்ணீர் சிந்த தெரிவித்தார். வெளிநாட்டில் புகழ் பெற்ற இனிப்பு சாக்கலேட் ஒன்றிற்கு ஏஜென்சி எடுத்து அதில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் கார வகையை குறிக்கும் ராசியின் முதல்தர யோகாதிபதியான செவ்வாய்  ராசிக்கு 1௦ ஆமதிபதியாகிறார். அவர் மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் உச்சம் பெற்று ராசிக்கு 7 ல் நின்று சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு கார வகைகளில் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை என்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பூமிகாரகன் செவ்வாயால் இவர்களுக்கு 2 வீடுகளில் இருந்து வாடகை வருகிறது.

ஜாதகி தற்போது சுக்கிரதிசை புதன் புக்தியில் உள்ளார். 6 ஆமிடத்தோடு பரிவர்தனை பெறும் புதன், கடன் பாதிப்பை தருகிறார். லக்னாதிபதி புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகம் என்பதாலும் அது சனியோடு தொடர்பாவதாலும் ராசிக்கு 7 ல் சனியும் குருவும் தற்போது வந்துள்ளதாலும் தொழில் வகை ஆலோசனை கேட்டு ஜாதகி என்னை தொடர்புகொண்டார். செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக இருப்பதாலும் சுக்கிரனுக்கு 1௦ ல் செவ்வாய் இருப்பதாலும் இனிப்பு வகைகளில் முதலீடு செய்யாமல் காரவகை மட்டும் செய்து படிப்படியாக கொடுத்த கடனை வசூல் செய்துகொள்ளுமாறு சொல்லப்பட்டது. சந்திரன் மூன்று சக்கரங்களிலும் (நவாம்சத்தில் பரிவர்தனைக்குப்பிறகு) கடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் பேக்கரியை படிப்படியாக குறைத்துவிட்டு பதிலாக சந்திரன் குறிக்கும் மளிகை கடை (கடன் கொடுக்காமல்) நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செவ்வாயின் நிலையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் கடன் வசூலான பிறகு இருக்கும் இடத்தில் மேலும் இரு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் சொல்லப்பட்டது.   

ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவர் ஈடுபடும் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எத்தனை திறமை படைத்தவராயினும் ஒருவர் ஜாதகப்படி சாதகமற்ற தொழிலை தேர்ந்தெடுத்தால் தோல்வி நிச்சயம். ஜாதகரை வாட்டும் கிரகங்களைப்போலவே அவர்களை உயர்த்தும் கிரகங்களும் உண்டு. அத்தகைய கிரகங்களை அடையாளங்கண்டு அவை சார்ந்த வகைகளில் ஒருவர் ஈடுபடுவது அவரது வாழ்வை நிச்சயம் உயர்த்தும்.  


விரைவில் அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

No comments:

Post a Comment